மதுரை பதிவர் சந்திப்பு முடிந்து பதிவுகளும் வெளிவந்து விட்டன. குழந்தைகள் பற்றி மட்டுமல்லாது பொதுவான கேள்விகளும் மரு.ஷாலினியிடம் கேட்கப்பட்டன. அவற்றில் குழந்தைகள் பற்றிக்கேட்டதில் எனக்கு ஞாபகத்தில் உள்ள சிலவற்றை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.
1.”குட் டச் பேட் டச்”- சாராம்சம் என்ன?
பதில்:
அ.அம்மாவும் குழந்தையும் மட்டும் தொட அனுமதிக்கும் உடல் பகுதிகள்.
ஆ.பிறர் தொட அனுமதிக்கக் கூடாத உடல் பகுதிகள்.
மேலே சொன்ன இரண்டையும் சொல்லித்தருவதும் நடைமுறைப் படுத்துவதுமே!
2.எந்த வயதில் சொல்லித் தர வேண்டும்?
பதில்: மூன்று வயதிலிருந்து.
3.மறைவுப் பகுதிகளின் பெயர்களை ஏன் சொல்லித்தரவேண்டும்?
ஏனெனில் பிறர் எந்தப் பகுதியைத் தொட்டனர் என்பதை அம்மாவிடம் பெயருடன் சொல்ல வேண்டும் என்பதற்காக.
4.ஆண்,பெண் உடலுறுப்புகளை என்ன பெயரில் சொல்லிக் கொடுக்கிறார்கள் – பொதுவாக?
ஆண் உறுப்பை பெனிஸ் என்றே சொல்லிக் கொடுக்கலாம். பெண் உறுப்பை ’க்ராட்ச்’-CROTCH என்ற பொதுவான பெயரிலேயே சொல்லிக் கொடுக்கலாம்.
5.அதைப் பிறர் தொட்டால் குழந்தை என்ன செய்ய வேண்டும்?
இதைத் தொடாதீர்கள் என்று மறுக்கலாம். அந்த இடத்திலிருந்து வந்து விடலாம். வந்து அம்மாவிடம் சொல்லலாம்.
6.இப்படி ’பேட் டச்’ யாரெல்லாம் செய்கிறார்கள்?
பொதுவாக நமக்கு நெருக்கமானவர்களே!!
7.குழந்தை இத்தகைய நிலையில் இருப்பதை எப்படி அறிவது?
குழந்தை மூடியாக கலகலப்பில்லாமல் இருக்கும். அந்த வீட்டுக்குப் போகமாட்டேன் என்றோ குறிப்பிட நபர்களிடம் போகப் பிரியம் இல்லாதிருத்தல் ஆகியவை போன்றவற்றிலிருந்து அறியலாம்.
8.இதை எப்படித்தடுப்பது?
குழந்தைகளிடம் அம்மா நெருக்கமாக இருக்க வேண்டும். குழந்தையின் எல்லா சந்தேகத்துக்கும் திட்டாமல் பதிலளிக்க வேண்டும். என்ன நடந்தாலும் அம்மாவிடம் சொன்னால் சரி செய்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையையும் தைரியத்தையும் குழந்தைக்கு ஏற்படுத்த வேண்டும்.
தொல்லை விட்டால் சரி என்று குழந்தைகளை யாராவது பார்த்துக்கொள்ளட்டும் என்று கவனிக்காமல் விட்டுவிடுவது தவறு.
9.பெண் வயதுக்கு வருவது தெரியும். ஆண் வயதுக்கு வருவது என்றால் என்ன?
முதலில் விந்து வெளிப்படுவதே அதன் அறிகுறி.
அந்தப் பருவத்தில் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை அம்மா பெண் குழந்தைக்கும், மகனுக்கு பெற்றோர் இருவரும்கூட சொல்லித்தர வேண்டும்.
மேல் சொன்னவற்றை நாம் கடைப்பிடித்தாலே ஓரளவு குழந்தைகளிடம் நாம் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். இன்னும் எழுத வேண்டியது நிறைய உள்ளது. அவற்றையும் பின்னர் பார்ப்போம்.
தமிழ்த்துளி,
தேவா.
பி.கு: மேற்கண்ட படங்களை தந்துதவிய(சுட்ட?) பதிவர் தருமி,காவேரிகணேஷ்,கார்த்தி,வெற்றி ஆகியோருக்கு நன்றி..