Saturday, 6 February 2010

கொஞ்சம் தேநீர்-அவர்கள்!

 

சிறிது நேரம் முன்புதான்

அவர்கள்

இதைக் கடந்திருக்க வேண்டும்!

 

காய்ந்த சிறகுகள்

பாதம் பட்டு நொறுங்குதல்

பற்றி

அவர்கள்

கவலைகொள்ளவில்லை!

 

உறங்கும்

ஆன்மாக்களின்

கல்லறைகளின் மீதே

அவர்கள்

பயணம் அமைந்தது!

 

இங்கிருந்த வேர்களை

வெட்டி அவர்களின்

படகுகளைச்

செய்துகொண்டனர்!

 

அவர்கள் கடந்த

கரையோரங்க்ளில்

புதையுண்டு கிடந்தன

கடந்த காலத்தின்

நிழல்கள்!

 

கழற்றி எறியப்பட்ட

ஆடைகளில்

இன்னும் மீதமிருந்தது

குருதியின் வாசனை!

 

புனைவுகளின்

மறைவுகளில்

அவர்களின்

புதிய முகங்கள்

செதுக்கப்பட்டன!

 

அவர்கள் அங்குதான்

இருக்கிறார்கள்!

Friday, 5 February 2010

மதுரை பதிவர் சந்திப்பு-முழுப்படங்கள்,கேள்வி பதில்கள்!!

 

 
image  
 
image  
image image  
image image  
 

மதுரை பதிவர் சந்திப்பு முடிந்து பதிவுகளும் வெளிவந்து விட்டன. குழந்தைகள் பற்றி மட்டுமல்லாது பொதுவான கேள்விகளும் மரு.ஷாலினியிடம் கேட்கப்பட்டன. அவற்றில் குழந்தைகள் பற்றிக்கேட்டதில் எனக்கு ஞாபகத்தில் உள்ள சிலவற்றை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.

1.”குட் டச் பேட் டச்”- சாராம்சம் என்ன?

பதில்:

           அ.அம்மாவும் குழந்தையும் மட்டும் தொட அனுமதிக்கும் உடல் பகுதிகள்.

            ஆ.பிறர் தொட அனுமதிக்கக் கூடாத உடல் பகுதிகள்.

மேலே சொன்ன இரண்டையும் சொல்லித்தருவதும் நடைமுறைப் படுத்துவதுமே!

2.எந்த வயதில் சொல்லித் தர வேண்டும்?

பதில்: மூன்று வயதிலிருந்து.

3.மறைவுப் பகுதிகளின் பெயர்களை ஏன் சொல்லித்தரவேண்டும்?

ஏனெனில் பிறர் எந்தப் பகுதியைத் தொட்டனர் என்பதை அம்மாவிடம் பெயருடன் சொல்ல வேண்டும் என்பதற்காக.

4.ஆண்,பெண் உடலுறுப்புகளை என்ன பெயரில் சொல்லிக் கொடுக்கிறார்கள் – பொதுவாக?

ஆண் உறுப்பை பெனிஸ் என்றே சொல்லிக் கொடுக்கலாம். பெண் உறுப்பை ’க்ராட்ச்’-CROTCH என்ற பொதுவான பெயரிலேயே சொல்லிக் கொடுக்கலாம்.

5.அதைப் பிறர் தொட்டால் குழந்தை என்ன செய்ய வேண்டும்?

இதைத் தொடாதீர்கள் என்று மறுக்கலாம். அந்த இடத்திலிருந்து வந்து விடலாம். வந்து அம்மாவிடம் சொல்லலாம்.

6.இப்படி ’பேட் டச்’ யாரெல்லாம் செய்கிறார்கள்?

பொதுவாக நமக்கு நெருக்கமானவர்களே!!

7.குழந்தை இத்தகைய நிலையில் இருப்பதை எப்படி அறிவது?

குழந்தை மூடியாக கலகலப்பில்லாமல் இருக்கும். அந்த வீட்டுக்குப் போகமாட்டேன் என்றோ குறிப்பிட நபர்களிடம் போகப் பிரியம் இல்லாதிருத்தல் ஆகியவை போன்றவற்றிலிருந்து அறியலாம்.

8.இதை எப்படித்தடுப்பது?

குழந்தைகளிடம் அம்மா நெருக்கமாக இருக்க வேண்டும். குழந்தையின் எல்லா சந்தேகத்துக்கும் திட்டாமல் பதிலளிக்க வேண்டும். என்ன நடந்தாலும் அம்மாவிடம் சொன்னால் சரி செய்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையையும் தைரியத்தையும் குழந்தைக்கு ஏற்படுத்த வேண்டும்.

தொல்லை விட்டால் சரி என்று குழந்தைகளை யாராவது பார்த்துக்கொள்ளட்டும் என்று கவனிக்காமல் விட்டுவிடுவது தவறு.

9.பெண் வயதுக்கு வருவது தெரியும். ஆண் வயதுக்கு வருவது என்றால் என்ன?

முதலில் விந்து வெளிப்படுவதே அதன் அறிகுறி.

அந்தப் பருவத்தில் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை அம்மா பெண் குழந்தைக்கும், மகனுக்கு பெற்றோர் இருவரும்கூட சொல்லித்தர வேண்டும்.

மேல் சொன்னவற்றை நாம் கடைப்பிடித்தாலே ஓரளவு குழந்தைகளிடம் நாம் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். இன்னும் எழுத வேண்டியது நிறைய உள்ளது. அவற்றையும் பின்னர் பார்ப்போம்.

தமிழ்த்துளி,

தேவா.

பி.கு: மேற்கண்ட படங்களை தந்துதவிய(சுட்ட?) பதிவர் தருமி,காவேரிகணேஷ்,கார்த்தி,வெற்றி ஆகியோருக்கு நன்றி..

Wednesday, 3 February 2010

எந்த நிறம் அழகு?

எந்த நிறம் அழகு?

     
     

பொதுவாக நம் நாட்டில் பெண்ணோ ஆணோ சிகப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். சிகப்பாக இல்லையே என்று வருத்தப்படும் பெண்களும் உண்டு.

முதல் பெண் ஆப்பிரிக்காவில் தோன்றியதாக தற்போது விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதன் பின் பல்கிப் பெருகி அனைவரும் வெளியேறி வாழ்நிலைகளின் தகவமைப்புக்கு ஏற்ப தோல் நிறங்கள் மாறியதுதான்  உண்மை.

அப்படி இருக்கும்போது நாம் ஏன் சிகப்பாக இருப்பவர்களை நாம் பிரமிப்புடன் பார்க்கிறோம்? என்பதற்கு மரு.ஷாலினி ஒரு விளக்கம் கூறினார்.

அதாவது இந்தியாவிலும் கடவுள்கள் சிவன் முதல் கிருஷ்ணன் வரை கருப்பாகவே சித்தரிக்கப்பட்டுள்ளனர். அதே போல் வரலாற்றில் குறிப்பிடப்படும் அழகி ராணி கிளியோபாட்ராவே கருப்புதான்.

கருப்பாக இருப்பதை அப்போது யாரும் குறையாக நினைக்கவில்லை.

அப்படியென்றால் ஏன் சிகப்பாக இருப்பது அழகாகக் கருதப்படுகிறது?

நம்மவரை நம்மவரே ஆண்டபோது ஆண்டவர்கள், அரசர்குலமே கருப்பாக இருந்ததால் கருப்பு மதிப்பாக இருந்தது.

அதன் பின் பிரிட்டிஷ், ஐரொப்பிய காலனிகளாக உலகம் மாறிய பிறகு நம்மையும் உலகின் முக்கால் பாகத்தையும் வெள்ளைத் தோல் மனிதர்கள் ஆள ஆரம்பித்தனர். அதன் பின்னரே சிகப்பு மோகம் ஏற்பட்டது. தம்மை ஆள்பவர்கள், பலம் போருந்தியவர்கள் எந்த நிறமே அதுவே விரும்பப்படும், மதிக்கப்படும் நிறமாக மாறும், மாறியது.

தற்போது பலம் பொருந்திய அமெரிக்காவை கருப்பின ஒபாமா ஆள்வதால் அவர் மனைவி அணியும் உடைகள் தற்போது பிரபலமாகின்றன. பார்பி பொம்மையும் கருப்பு அழகியாக தற்போது உருவெடுத்துள்ளது.

இவையெல்லாம் இருக்க இந்த வருட அமெரிக்க அழகியாக ’காரெஸ்ஸா கமெரான்’ என்ற கருப்பின அழகி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இதுவரை எட்டு ஆப்பிரிக்க அமெரிக்க அழகிகள் ‘அமெரிக்க அழகி’ களாக கிரீடம் சூட்டப்பட்டுள்ளனர்.

இனிவரும் மனித குலம் ஒன்றிணைந்து கருப்பு வெள்ளை இல்லாத ஒரு பழுப்பு நிறத்தில்தான் இருக்கப்போகிறதாம்.

என்ன சரியா? கருப்பு சிகப்பு எல்லாம் ஒன்றுதான்!!

Tuesday, 2 February 2010

டாக்டர் ஷாலினி!!

டாக்டர் ஷாலினி,

மதுரையில் 31.1.2010 அன்று ”குட் டச் பேட் டச்” சொற்பொழிவும் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

இந்த நிகழ்வின் நோக்கம் ”குட்டச் பேட்டச்” பற்றி பெற்றோர்கள் அறியவேண்டும் என்பதுதான். அந்த விதத்தில் அங்கு குழுமியிருந்தோர் முழுவதும் பெற்றோர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள்.

மூன்று மணிநேரம் ஒரு கருத்துரை ஆற்றுவது என்பது மிகவும் கடினமான விசயம். அதனை மிகவும் தெளிவுடன் செய்தார் ஷாலினி. ஆரம்பத்திலிருந்தே கேள்விகளைக்கேட்டு குழுமியிருந்தோரை சிந்திக்கவும், பதில் கூறவும் வைத்த வண்ணம் அவர் உரையை நடத்திச்செல்லும் பாங்கு மிகவும் அற்புதமாக இருந்தது.

கலந்துகொண்டோர் கேள்விகளுக்கெல்லாம் தெளிவான எடுத்துக்காட்டுகளுடன் கூடிய பதில்கள் அவரிடம் தயார் நிலையில் இருந்தன. அவை யாரையும் புண்படுத்தாத வண்ணம் மிகவும் தெளிவாகவும், தன்னம்பிக்கை ஊட்டுவதாகவும் அமைந்திருந்தன.

கலந்து கொண்டோரின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும்போதுதான் சமுதாயத்தில் இதுதொடர்பான பிரச்சினைகள் எவ்வளவு இருக்கின்றன என்பதை அறிய முடிந்தது.

அவரால் மூன்று மணி நேரத்துக்கு மேலும் (நின்று கொண்டே!! பேசமுடியும் ஆயினும் அங்கு கலந்துகொண்ட சுமார் 150 பேரிடமும் இன்னும் தெளிவு பெற வேண்டிய கேள்விகள் மிச்சமிருந்தன.

மனச்சிக்கல்களும்,பாலியல் அறியாமைகளும் நிரம்பிக்கிடக்கும் இந்த சமுதாயத்துக்கு இதுபோல் பல கருத்தரங்குகள் தேவை!!

”நீங்கள் பயப்படவேண்டாம் துணிவோடு இருங்கள்! குழந்தைகளுக்கு இதைப் பற்றி சொல்லிக்கொடுங்கள், அதையும் மீறிய சிக்கல்களைத் தீர்க்க நாங்கள் இருக்கிறோம்” என்று அவர் கூறியது சமுதாயத்தின் மேல் அவர் கொண்டுள்ள அக்கறையைப் பறைசாற்றியது என்றால் அது மிகையல்ல!!

Lead kindly light என்று ஆங்கிலக்கவிதை ஒன்று உண்டு

Lead, kindly Light, amid th’encircling gloom, lead Thou me on!
The night is dark, and I am far from home; lead Thou me on!
Keep Thou my feet; I do not ask to see
The distant scene; one step enough for me.

மருத்துவராக, ஆலோசகராக ஷாலினி பலரின் வாழ்வில் ஒளியேற்றி வைக்கிறார்.

வெல்டன் ஷாலினி!!!

உங்கள் பணி சிறக்கட்டும்!!

தமிழ்த்துளி தேவா.




7:06 AM | Add a comment | Permalink | Blog it

Wednesday, 27 January 2010

சிக்குன்குன்யா-10

சிக்குன்குன்யா காய்ச்சல் என்பது தமிழகத்தில் மிக அதிகமாகப் பரவி வரும் நேரம் இது. பொதுவாக தினமும் கேள்விப்படும் சொல்லாக இருந்தாலும் இதில் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சில விசயங்கள் உள்ளன.

1.காய்ச்சல் (இல்லாமலும் வரலாம்), மூட்டுக்களில் வலி, முகம் மற்றும் உடல் தோல் கருத்தல்.

2.பொதுவாக மூட்டுவலி, பாதங்கள், கணுக்கால்,கை, விரல்கள் ஆகியவற்றிலும் தோள்பட்டையிலும் வரும்.  

3.இது இளையோருக்கு குறைந்த நாட்களும்(5-15), நடுத்தர வயதினருக்கு மாதக்கணக்கிலும்(1-2.5), முதியோருக்கு இன்னும் அதிக் நாட்களும் இருக்கும். கர்ப்பிணிகளை அதிகம் தாக்குவதில்லை. மிகச்சிலருக்கு மூட்டுவலி 1 வருடத்தைத் தாண்டியும் இருக்கும்.

4.எலிசா, பி.சி.ஆர் பரிசோதனைகளில்  இதனைக் கண்டறியலாம். டெங்கு, லெப்டோஸ்பைரோசிஸ் போன்றவற்றிலிருந்து பரிசோதனைகள் மூலம் உறுதி செய்து கொள்ளலாம்.

5.வலி,காய்ச்சல் ஆகியவற்றுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும். மூட்டுக்களில் வீக்கமும் வலியும் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசித்து குளோரோகுயின் மாத்திரைகள் சாப்பிடலாம்.

6.கொசுக்களை ஒழிப்பதுதான் ஒரே வழி. கை நீளச்சட்டை,முழு நீளக் கால் சட்டை அணிவது நலம்.

7.கொசு கடிக்காமல் இருக்க ஓடாமாஸ் போன்ற களிம்புகள் தடவலாம்.

8.தண்ணீர் வீட்டருகில் தேங்க விடக்கூடாது. பூந்தொட்டி, மீன் தொட்டிகளில் தண்ணீர் இருந்தல் வாரம் ஒருமுறை மாற்றிவிடவேண்டும்.

9.சிக்குன் குனியா வந்தவர்கள் கொசுக்கடி உடலில் ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் அந்த நபரைக் கடித்த கொசு வேறு யாரையும் கடிப்பதன் மூலம் காய்ச்சல் பரவும்.

10.சிக்குன்குனியா வைரஸ் அமெரிக்காவின் ராணுவத்தில் உயிரியல் ஆயுதமாக சேமித்து வைக்கப்பட்டிருந்தது. தற்போது உலகம் முழுவதும் ரசாயன,உயிரியல் ஆயுதங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

Sunday, 24 January 2010

கீட்டமைனும் போதைக்கலாச்சாரமும்!

கீட்டமைன், கீட்டமின், என்று பலவாறாக உச்சரிக்கப்படும் மருந்தைப் பற்றிப் பலரும் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்.

அறுவை அரங்கில் மயக்கத்துக்காகக் கொடுக்கப்படும் மயக்கமருந்துகளில் ஒன்றுதான் கீட்டமைன். இந்தக் கீட்டமைன் தற்போது தவறாக போதைப்பொருளாக உபயோகப்படுத்தப்படுகிறது.

இது பற்றி தமிழ் மக்கள் அதிகம் அறியாவிட்டாலும் தமிழகத்திலிருந்து இது பெருமளவில் கடத்தப்படுகிறது என்பது சமீபத்தில் செய்தியாக வந்தது. 

தமிழகத்திலும் இதை உபயோகிப்போர் அதிகமாகி வருவதால் நாம் இதுபற்றி நாம் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டியது அவசியமாகிறது.

முன்பெல்லாம் பணக்கார வீட்டு இளைஞர்கள்தான் போதைப் பொருட்களுக்கு அடிமையாகிக் கிடப்பார்கள். இன்றைய நிலை அப்படி இல்லை., கால்சென்டரும், பி.பி.ஓ.வும் பெருகிய சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில்   பணக்காரர்களில் மட்டுமல்லாது நடுத்தர வர்க்கத்து குடும்பங்களைச் சேர்ந்த ஆண்/பெண் இரு பாலரிடமும் கூட போதை பழக்கம் தொற்றிக் கொண்டுவிட்டது. சென்னையிலும் கீட்டமைன் உபயோகித்தல் அதிகமாகி வருவது உண்மையில் கவலைகொள்ள வைக்கிறது.

ஆகையால் இதைப்பற்றி அறிவது மிக அவசியம்.

இது பொடியாகவும், ஊசிமருந்தாகவும் கிடைக்கிறது.

இதன் உபயோகங்கள்:

1.குழந்தைகளுக்கு மயக்கம் தருவதற்கு.

2.அறுவை சிகிச்சையில் பிற மருந்துகளுடன் சேர்த்து உபயோகிக்க.

3.சிறு மற்றும் அவசர அறுவை சிகிச்சையில்.

4.கால்நடை அறுவை சிகிச்சையில் முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது.

கீட்டமைன் பிற மயக்க மருந்துகளைப்போல் இருந்தாலும்:

1.பிற மருந்துகளைவிட மூச்சுவிடுதலைக் குறைவாகவே தடுக்கிறது.

2.இதயத்துடிப்பையும், இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கிறது.

இதன் விளைவுகள்:

1.ஹாலுசினேஷன்( தமிழில் இதற்கு என்ன பெயர் என்று தெரிந்தால் சொல்லவும்!)- நடக்காத ஒன்று நடப்பதுபோல் இருப்பது- கயிறு பாம்புபோல் தெரிவது, யாரோ தன்னைக் கூப்பிடுவதுபோல் கேட்பது.. ஆகியவை( இவை ஹெராயின்,கொக்கைன் போன்ற போதைப் பொருட்களிலும் உண்டாகும்).

2.கே-ஹோல்(K-HOLE)- உடலிலிருந்து தனியே பிரிந்து செல்வது போல் இருப்பது.

3.பறப்பதுபோலும், பிரபஞ்சத்தில் உலாவுதல் போலவும், கடவுள் காட்சி தருவது போலவும் மாயத் தோற்றங்களை விளைவிக்கிறது.

நீண்ட கால விளைவுகள்:

1.ஞாபக மறதி மற்றும் நரம்புக்கோளாறுகள்!

2.சிறுநீரகக்கோளாறுகள்

சென்னை டி.டி.கே. புனர்வாழ்வு மருத்துவமனையில் நாளொன்றுக்கு 20 புதிய போதைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஒரு மருத்துவமனையிலேயே இவ்வளவு என்றால் பிற மருத்துவமனைகளிலும், சிகிச்சைக்கு வராத போதை அடிமைகளும் எவ்வளவு இருப்பார்கள் என்று எண்ணிப்பாருங்கள்.

Monday, 18 January 2010

என் இரவுகள்!!

 

சூரியன் மறைந்ததும்

உருக்கொண்டது எனக்கான உலகம்.

பிரும்ம ராட்சதனின் கைகள் போல்

நீளும் அதன்

விரல்களில்

வித விதமான புனைவுகள்.

ஒவ்வொரு இரவும் ஒவ்வொரு

உருக்கொள்ளும் அதன் வசீகரத்தில்

பயம் அகன்ற குதூகலம்!

 

பள்ளியிலும், விளையாட்டினுள்ளும்

ஒளிந்திருந்தது,

என் அடுத்த இரவுக்கான

காத்திருத்தல்.

 

இரவுகளின் கருவெளிகளில்

சொல்லப்பட கதைகளின்

பூக்களையும், மலைகளையும்

நதிகளையும் சேகரித்து

ஒரு நந்தவனமாக்கினேன்!!

 

காலச்சரிவுகளில் எல்லாம்

மாறிப்போனாலும்

இன்னும் இரவுகளில்

விரல் பிடித்து

நுழைந்து விடுகிறேன்

எனக்கேயான அவ்வுலகில்!!

blogapedia

Blog Directory