Thursday 25 November 2010

டிஸ்க் ப்ரொலாப்ஸ்,முள்ளெலும்பிடைத் தட்டுப்பிதுக்கம்-3

image

இந்த மூன்றாம் பாகத்தைப் படிப்பதற்கு முன் முதல் இரண்டு பாகங்களைப் படிக்க விரும்பினால் கீழேயுள்ள சுட்டிகளை உபயோகிக்கவும்.

முதல் இடுகை:

வட்டு விலகல், டிஸ்க் ப்ரொலாப்ஸ்! (முள்ளெலும்பிடைத் தட்டுப்பிதுக்கம்)

இரண்டாவது இடுகை:

டிஸ்க் ப்ரொலாப்ஸ்,முள்ளெலும்பிடைத் தட்டுப்பிதுக்கம்-2

தட்டுப்பிதுக்கம் மிக அதிகமாக முதுகின் கீழ்ப்பகுதியில் உள்ள நாரி முள்ளெலும்பில் அதிகம் ஏற்படுவதை அறிவோம். கழுத்துப் பகுதியில் உள்ள முள்ளெலும்பிலும் இது வரலாம். கழுத்து எலும்புத் தேய்மானம், விபத்தில் கழுத்தெலும்பு பாதிப்பு ஆகியவற்றினால் பொதுவாக கழுத்துப்பகுதியில் தட்டுப்பிதுக்கம் ஏற்படுகிறது. இதனை பின்னர் விரிவாகப் பார்ப்போம்.

தற்போது முதுகின் கீழ்ப்பகுதியில் ஏற்படும் தட்டுப்பிதுக்கத்தைப் பற்றிப்பார்ப்போம்.

இந்த தட்டுப்பிதுக்கம் இளைஞர்களையே அதிகம் பாதிக்கிறது என்று பார்த்தோம்.

image

நோயாளிக்கு இதனால்  என்ன உபாதைகள் ஏற்படுகிறது என்று பார்ப்போம்.

  1. முதுகு வலி- கீழ்முதுகுப்பகுதியில் வலி நடுப்பக்குதியில் , பக்கவாட்டில் அல்லது நடுப்பகுதி மற்றும் பக்கவாட்டில் காணப்படும்.ஓய்வு எடுக்கும் போது, படுக்கும்போது வலி குறைவாக இருக்கும். நடக்கும்போது, வேலை செய்யும்போது,இடுப்பை அசைத்து வேலை செய்யும்போது , தும்மும்போது, இருமும்போது வலி அதிகரிக்கும்.
  2. நியூரால்ஜியா, சயாடிகா – என்று மருத்துவர் சொல்லக் கேட்டிருப்பீர்கள். தட்டுப் பிதுக்கம் தண்டுவடத்திலிருந்து பிரிந்து வரும்  நரம்பை அழுத்தும்போது கீழ்முதுகு வலியுடன் கால்,தொடை, பாதம் ஆகிய பகுதிகளிலும் வலி இருக்கும். இந்த வலி நரம்பு வலி ஆகையால் நியூரால்ஜியா என்றும் பொதுவாக தொடை, கால் பகுதியில் சயாடிக் நரம்பு  இருப்பதால் சயாடிகா என்றும் அழைக்கப்படுகிறது.
  3. நரம்பு பாதிப்பு சில நேரங்களில் ஊசியால் குத்துவது போல் இருக்கும்.
  4. நரம்பு அழுத்தத்தால் தொடை, கால் பகுதியில் உள்ள தசைகள் பலவீனமாகலாம்
  5. அதே போல் முதுகைக் குனிந்து வேலை செய்வதில் மிகுந்த சிரமம் இருக்கும். பலரால் குனிந்து வேலை செய்ய முடியாது.
  6. அரிதாக இடுப்பு வலியுடன் குடல், சிறுநீர்ப்பை ஆகியவை செயலிழந்து போகலாம். இப்ப்படியிருந்தால் மலவாய்ப் பகுதியில் சுற்றில்லும் சுரணையில்லாமல் இருக்கும். இதனை உடனடியாக கவனிக்க வேண்டும். இல்லையெனில் மலக்க்குடல் மற்றும் சிறுநீர்ப்பை நரம்புகள் முற்றிலும் சேதமடையலாம்.

தட்டுப் பிதுக்கம் சிகிச்சை அளிக்கப்பட்ட சில வாரங்களில் வலி குறைந்து விடும்.  பத்தில் ஒருவருக்கு வலி குறையாமல் ஆறு வாரங்களுக்கும் மேல் தொடரும்.

பரிசோதனைகள்:

பொதுவாக தட்டுப்பிதுக்கத்தை மருத்துவர் நேரடியாக நோயாளியைப் பரிசோதிப்பதின் மூலம் கண்டுபிடித்து விடுவார். எனினும்

  • நுண்கதிர் படம்
  • எம்.ஆர்.ஐ  ஆகியவை பொதுவாக எடுக்கப்படவேண்டும். இவை இரண்டில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் மிகவும் துல்லியமானது. இந்த ஸ்கேன் மூலம் தட்டுப்பிதுக்கம் எந்த அளவிலுள்ளது, அறுவை சிகிச்சை அவசியமா அல்லது சாதாரண சிகிச்சை போதுமா  என்பதை அறிந்து கொள்ளலாம்.

Friday 19 November 2010

மஞ்சள் காமாலை-A(HEPATITIS-A) அவசியம் அறிய வேண்டியவை!

 

image

மஞ்சள்காமாலை என்பது பொதுவாக அனைவரும் கேள்விப்பட்ட வியாதிதான். ஆனால் அது ஏன் வருகிறது வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பவை பற்றித் தேவையான தெளிவு மிக அவசியம். அவற்றைப் பற்றியே நாம் இப்போது சுருக்கமாகப் பார்க்கப் போகிறோம்.

1.மஞ்சள்காமாலை ஹெபடைட்டிஸ் என்றால் என்ன?

மஞ்சள் காமாலை என்பது கல்லீரலில்(LIVER) கிருமித்தொற்று ஏற்படுவதைக் குறிக்கிறது.

2.பொதுவாக மஞ்சள் காமாலை எதனால் ஏற்படுகிறது? 

பொதுவாக A,B,C என்று வகைப்படுத்தப்பட்டுள்ள வைரஸ்  கிருமி( தீ நுண்மம்) களால் ஏற்படுகிறது.

3.மஞ்சள்காமாலை ஏ (HEPATITIS-A) மஞ்சள்காமாலை ஏ பற்றி இந்தப்பதிவில் பார்ப்போம்

  • இது குழந்தைகளை அதிகம் தாக்குகிறது. 
  • மனித மலம் சிறு அளவில் விரல்களில், நக இடைவெளியில் இருக்கும். இது உணவில், நீரில் கலக்கிறது. அந்த நீர் மற்றும் உணவை நாம் சாப்பிடும்போது அது நம்மைத் தொற்றிக்கொள்கிறது. சமையல்காரர்கள் மற்றும் உணவுக்கூடங்களில் இருப்போர் மற்றும் அனைவரும் மலம் கழித்த பின் சோப்புப்போட்டுக் கை கழுவுதல், கையுறை அணிந்து சமைத்தல், குடிக்கும் தண்ணீரில் கை படாமல் இருப்பது ஆகியவை அவசியம். ஆகையாலேயே வெளியில் சாப்பிடும்போது நல்ல சுகாதாரமான உணவகங்களில் சாப்பிட வேண்டும்.    
  • இந்தக் கிருமி தொற்றிய 15-50 நாட்களில் நோய்க்குறிகள் தோன்றும்.
  • மிதமான காய்ச்சல்,  அதிக சோர்வு, உமட்டல், மேல் வயிற்று வலி, வாந்தி ஆகியவை இருக்கும். குழந்தைகள் படிக்காமல் சோர்வாகப் படுத்திருந்தாலும், குறைந்த மிதமான காய்ச்சல் தொடர்ந்து இருந்தாலும் சாதாரண வைரஸ் காய்ச்சல் என்று மிதமாக இருத்தல் தவறு.
  • அதன் பின் சிறு நீர் மஞ்சள், அடர் மஞ்சள் நிறத்தில் போகும். கண்ணின் வெண்ணிறப்பகுதி, உடலின் தோல் பகுதிகளில்  மஞ்சள் நிறம் காணப்படும். இந்த மஞ்சள் நிறம் ஒரு வாரத்தில் இருந்து நான்கு வாரங்கள் வரை இருக்கும்.
  • A வைரஸினால் வரும் மஞ்சள் காமாலை  தன்னாலேயே சரியாகிவிடும் தன்மை உடையது. ஆயினும் சில குழந்தைகள் வாந்தி, தலைவலி,சாப்பாடு செரிக்காமல் இருத்தல், பசியின்மை ஆகியவற்றால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவர்.   ஆதலால் அவர்களுக்கு குளுக்கோஸ் ஏற்றுதல் அவசியமாக இருக்கும். காய்ச்சலுக்கு பாரசிடமால் போன்ற சாதாரண மாத்திரையும், வாந்திக்கு மருந்துகளும் எடுத்துக்கொள்வது அவசியம்.    
  • இந்நோய் ஒருமுறை தாக்கினால் வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உருவாக்கி விடுவதால் இது மறுபடியும் வருவது இல்லை.
  • இதற்கு இரத்தப் பரிசோதனை செய்து கல்லீரலின் செயல்பாடு எப்படி உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். இரத்தப்பரிசோதனை மூலம் A வகை மஞ்சள்காமாலைதானா அல்லது B, C போன்ற வேறு வகை மஞ்சள்காமாலையா என்பதனையும் அறிவது அவசியம்.
  • வயிறு ஸ்கேன் செய்து கல்லீரல், பித்தப்பை ஆகியவற்றின் வீக்கம், நோய் எவ்வளவு தூரம் அவற்றை பாதித்துள்ளது என்பதனையும் அறிவது அவசியம்.
  • இந்நோய் வராமல் தடுப்பதற்கு தடுப்பூசி உள்ளது. இத்தடுப்பூசியானது 20 வருடத்துக்கும் மேல் இந்த ஏ வகை மஞ்சள் காமாலை வராமல் தடுக்கும்.

Monday 15 November 2010

டிஸ்க் ப்ரொலாப்ஸ்,முள்ளெலும்பிடைத் தட்டுப்பிதுக்கம்-2

என் முந்தைய பதிவில் வட்டு விலகல் பற்றி எழுதியிருந்தேன். முதுகு முள்ளெலும்புகளுக்கு இடையில் உள்ள வட்டு அல்லது தட்டு போன்ற  அமைப்பு மிகவும் அதிகமாகப் பேசப்படும் ஒன்றாக உள்ளது. காரணம் தற்போது அதிகமானோர் இந்தப் பிரச்சினையால் அவதிப்படுவதுதான்.

முதல் இடுகையைப் படிக்காதவர்கள் விரும்பினால் படிக்க கீழேயுள்ள தலைப்பை சுட்டி படிக்கலாம்.

 வட்டு விலகல், டிஸ்க் ப்ரொலாப்ஸ்! (முள்ளெலும்பிடைத் தட்டுப்பிதுக்கம்)

இந்த தட்டுப்பிதுக்கம் எந்த இடத்தில் அதிகம் வருகிறது என்றால் முதுகின் கீழ்ப்ப்பகுதியில் உள்ள (LUMBAR VERTEBRA) முள்ளெலும்ப்பில்தான். இதனை நாரி முள்ளெலும்பு என்று அழைக்கின்றனர்.

image

நாரி (லம்பார்)  முள்ளெலும்பில் 5 எலும்புகள் உள்ளன.  இதில் கடைசி எலும்புக்கும் சாக்ரம்(SACRUM) எலும்புக்கும் இடையில் உள்ள (L5-S1)  வட்டும் அதற்கு ஒருபடி மேலேயுள்ள (L4-L5 ) நான்காம், ஐந்தாம் எலும்புகளுக்கிடையில் உள்ள வட்டும் அதிகம் பாதிக்கப்படுகின்றன.

(மேலே உள்ள படத்த்ஈல் லம்பார் நாரி முள்ளெலும்பு இடுப்புப் பகுதியில் காட்டப்பட்டுள்ளது. அதன் கீழ் PELVIC என்று குறிப்பிடப்பட்டுள்ள பகுதியில் சாக்ரம்(SACRUM) என்ற எலும்பு உள்ளது. இதனைத் தமிழில் திரிகம் (திருவெலும்பு)  என்று அழைக்கின்றனர்.image

மேலேயுள்ள எலும்புதான் சாக்ரம் என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும்  திரிகம் எலும்பு இதில் ஐந்து எலும்புகள்  இணைந்து ஒன்றாகக் காணப்படுகிறது. இந்த ஒன்றிணைந்த அமைப்பே திரிகம்.

திரிகம் 1- S1

திரிகம் 2- S2

திரிகம் 3 –S3

திரிகம் 4- S4

thirikam 5-  S5

என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படுகிறது.

image

மேலுள்ளது வட்டு அல்லது தட்டு (DISC)) ன் படம்.

இதில் வட்டின் இரண்டு பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளது. வட்டின் வெளிப்பகுதி சிதைந்து உள்ளே உள்ள பிசின் போன்ற பகுதி (NUCLEUS PULPOSIS) வெளியே தள்ளிக் கொண்டு இருப்பதைக் காணலாம்.  இந்த இடத்தில் நரம்புகள் தண்டு வடத்திலிருந்து பிரிந்து கால்களுக்குச் செல்வதால் இவை அதனை அழுத்துகின்றன. அழுத்தப்படும் நரம்பு காலின் எந்தப் பகுதிக்குச் செல்கிறதோ அங்கு வலி, மரம்மரப்பு ஆகியவை உண்டாகும்.

வட்டு விலகல் யாருக்கு வருகிறது?

வட்டு விலகல் என்ற டிஸ்க் புரொலாப்ஸ்  இளம் வயதினரையே  அதிகம் பாதிக்கிறது. அதிலும் ஆண்களையே அதிகம் பாதிக்கிறது. இந்த வலியானது அதிகம் வேலை செய்யும்போதோ, கனமான பொருட்களைத் தூக்கும்போதோ  அதிகமாகிறது.  

இன்னும் நிறைய உள்ளது எழுத!

தேவா.

Thursday 11 November 2010

நம்ப முடியாத அற்புதம்!!

வேகமாகக் காரில் சென்று இறந்த  டயானா பற்றி நமக்குத் தெரியும்.  அதே போல் விபத்துகளில் உயிர் பிழைத்தவர்கள் பற்றிப் படித்திருக்க மாட்டோம்.  எலும்பு முறிவு அறுவை சிகிச்சை மற்றும் விபத்து சிகிச்சை மிக அற்புதமான நவீன கண்டு பிடிப்புகளுடன்  முன்னேறிக்கொண்டே இருக்கிறது.  உடலில் பல எலும்புகள், முதுகெலும்பு முறிவு, நுரையீரலில் காயம் ஆகியவை  எல்லாம்  விபத்தில் மிகக் கொடுமையானவை. இவற்றால்  பாதிக்கப்பட்டு தகுந்த சிகிச்சை இல்லாமல் உயிர் இழந்தவர்கள் மிக அதிகம்.
தற்போதும் அத்தகைய சிகிச்சை உலகில் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அப்படிக்கிடைத்தால் அவர் அதிர்ஷ்டம் செய்தவர்தான்.

காட்ரினாவுக்கு 17 வயதுதான்.  70 மைல் வேகத்தில் காரில் சென்று மோதி யதில் உடலில் ஏற்பட்ட காயங்களின் பட்டியல் கீழே:
  •  முதுகெலும்பு முறிவு
  • கழுத்தெலும்பு முறிவு
  • இடது கால் எலும்பு முறிவு
  • இடுப்பில் பெல்விஸ் எலும்பு முறிவு
  • விலா எலும்புகள் பல இடங்களில் முறிவு
  • இரண்டு நுரையீரல்களிலும் காயம்
மருத்துவர்களோ அவர் இனி நடக்கவே முடியாது என்று கூறிவிட்டனர். அறுவை சிகிச்சைதான் வழி. ஆனால் இத்தனை அறுவை சிகிச்சைகளை உடல் எப்படித்தாங்கும்? மேலும் முதுகுத்தண்டு எலும்பு அறுவை சிகிச்சை, கழுத்த்எலும்பு அறுவை சிகிச்சை ஆகியவை  மிகச் சிக்கலானவை.
உடலின் பல இடங்களில் காயங்கள் இருக்கும்போது இன்த அறுவை சிகிச்சையால் மரணம்கூட ஏற்படலாம் அல்லது கைகால்களுக்குச் செல்லும் நரம்ப்புகள் அழுந்தி செயலிழந்து படுத்த படுக்கையாக இருக்க வேண்டிய சூழ்நிலையும் வரலாம்.
ஆனால் வேறு வழியில்லை.
அவரது கால். இடுப்புப் பகுதிகள் உலோகக் கம்பிகளால் இணைக்கப்பட்டன.
மேலும் முதுகெலும்பு, கழுத்து, இடுப்பு என அனைத்து இடங்களிலும்  கம்பிகள்  பொறுத்தப்படது.
மொத்தம் 11 உலோகக் கம்பிகள் அறுவை சிகிச்சை செய்து பொருத்தப்பட்டன.
நுரையீரல் காயம் சரிசெய்யப்பட்டது.

 நம்புங்கள் மக்களே !!  நம்புங்கள்!1 தற்போது அவர் மீண்டும் மாடல் ஆக பணிபுரிகிறார்

Tuesday 9 November 2010

வட்டு விலகல், டிஸ்க் ப்ரொலாப்ஸ்! (முள்ளெலும்பிடைத் தட்டுப்பிதுக்கம்)

 

டிஸ்க் புரொலாப்ஸ்   என்று அழைக்கப்படும்   இந்த பிரச்சினை பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது.

டிஸ்க்  அல்லது வட்டு  என்றால்   என்ன?

டிஸ்க்    என்பது இரண்டு முதுகுத் தண்டுவட எலும்புகளுக்கு இடையிலலுள்ள ஜவ்வு போன்ற பகுதியாகும்.   இது முதுகெலும்புகளுக்கு இடையில்   அதிர்வையும், பளுவையும் குறைக்கிறது. முதுகெல்லும்பின் வளைந்து கொடுக்கும் தன்மைக்கு பெரிதும் உதவுகிறது.  

கீழுள்ள படத்தில் இரண்டு முதுகுத் தண்டு எலும்புகளின் படங்கள் வரையப்பட்டுள்ளன. ஒன்று நேராக இருக்கும்போது, இன்ன்னொன்று வளையும் போது – நடுவில் வெண்ணிறமாக இருப்பதே வட்டு. படத்தில் எளிமையாக முதுகுத் தண்டெலும்பின் உடல் பாகம் மட்டும் செவ்வகமாக வரையப்பட்டுள்ளது.

   image

உண்மையான முதுகுத் தண்டெலும்பு கீழே தரப்பட்டுள்ளது..

image

இதில் முன்புறம் சிறு கிளைகளாக உள்ளவை முள் போன்ற அமைப்புகள். இதனாலேயே இவை முள்ளெலும்புகள் என்று அழைக்கப்படுகின்றன.

இவற்றின் இடையிலுள்ள வட்டு அல்லது தட்டுகள் பளுவின் காரணமாக அழுத்தப்பட்டு பிதுங்கிய நிலையில் இருப்பதால்

முள்ளெலும்பிடைத் தட்டுப்பிதுக்கம்  

என்று விக்கியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 

பொதுவாக ஆங்கிலத்தில் எழுதும்போது டிஸ்க் ப்ரொலாப்ஸ் என்று குறிப்பிட்டாலேயே முதுகெலும்பு வட்டு பிதுங்கி வெளியே விலகி வருவதையே குறிக்கும்.  ஆகையால் பொதுவாக டிஸ்க் ப்ரொலாப்ஸ் பற்றி எழுதும்போது வட்டு விலகல் என்று எழுதலாமா? இல்லை முள்ளெலும்பிடைத் தட்ட்டுப் பிதுக்கம் என்று எழுதுதல்தான் சரியா? என்பது விவாதத்திற்குட்படுத்தப்பட வேண்டிய விசயம்!

இதுபற்றிப் பதிவர்கள் தங்கள் கருத்தைக் கூறலாம்.

உங்கள் கருத்துகளுக்குப் பின் தொடருகிறேன்!

Friday 5 November 2010

தீபாவளி தாமத வாழ்த்துகள்!

 தீபாவளி தாமத  வாழ்த்துகள்!
தீபாவளி ஒருவழியாக முடிந்து விட்டது. அனைவரும் அவரவர் பாணியில் கொண்டாடியிருப்பீர்கள். என் வாழ்த்துகளை  தீபாவளி முடிந்தவுடன் சொல்லிக்கொள்கிறேன்.

பல வாழ்த்துப் பதிவுகள் எழுதியிருந்தாலும் தீபாவளி வாழ்த்துகள் என்று எழுதலாமா என்று நீண்ட நேரம் தீபாவளியன்று பலமுறை யோசித்தும்  என்னால் வாழ்த்துப் பதிவு எழுத முடியவில்லை.  

தீபாவளி வாழ்த்துப் பதிவு மட்டும் அல்ல, இதுபோல் எழுத நினைத்து எழுதாமல் விட்ட பதிவுகள் பல நண்பர்களின் நெஞ்சிலும் இருக்கும் என்று நினைக்கிறேன். 
எனக்கு தீபாவளி அன்று குறுந்தகவல் மூலம் வாழ்த்துச்  செய்தி அனுப்பிய அனுப்பிய பதிவுலக நண்பர்களுக்கு நன்றி.

அரசு மருத்துவமனையில் தீபாவளி,பொங்கல் போன்ற நாட்களில்  இதைக் கொண்டாடாத பிற மதத்தைச் சேர்ந்த  மருத்துவர்களைப் பணியில் அமர்த்துவதும் இதே போல் கிறிஸ்துமஸ், ரம்ஜான் ஆகியவற்றிற்கு அதைக் கொண்டாடும் நண்பர்களுக்கு விடுப்புக் கொடுப்பதும் வழக்கம்.

ஆனால் இம்முறை அப்படி செய்ய முடியவில்லை.

மூத்த மருத்துவருக்கும், தீபாவளி கொண்டாடாத ஒரு மருத்துவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்ததால் அந்த தீபாவளி கொண்டாடாத மருத்துவர் தீபாவளிக்கு அவர் வேலை செய்ய முடியாது  என்று கூறிவிட்டார்..

நாங்கள் எவ்வளவோ  சொல்லியும் அவர் கேட்கவில்லை.இதனால் நேற்றைய வேலை  வரிசைக்கிரமப்படி  இளம் மருத்துவர் ஒருவர் தலையில் விழுந்து விட்டது
 
இதனால் இளம் மருத்துவர் ஒருவர் இருபத்து நான்கு மணிநேரப் பணியில் மருத்துவமனையிலேயே இருக்க நேர்ந்து விட்டது.  நேற்றைய பணியும் தீபாவளிதானே எளிமையாக இருக்கும் என்று பார்த்தால் " குடிமகன்கள் குடித்து விட்டு பல இடங்களிலும் அடிதடிகளில் ஈடுபட்டு, தொடர்ந்து அரசு மருத்தவமனைக்கு போலீஸ் கேசாக வந்துகொண்டிருந்ததால் அவரால் வீட்டுக்கே வரமுடியவில்லை.

ஒரு போலீஸ் கேஸ் என்றால் அதைத் தொடர்ந்து அரசியல்வாதிகள் அவர்களுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும்  அரசு மருத்துவமனைக்குள் வந்துகொண்டே இருப்பதால் அனைவருக்கும் பதில் சொல்ல வேண்டிய நிலை.    

108  ஆம்புலன்ஸ்  நோயாளிகளின் வசதிக்காக ஏற்படுத்தப்பட்டது. மிக நல்லமுறையில் செயல்பட்டு வருவது அனைவருக்கும் தெரியும். அது மது அருந்திவிட்டு மயக்கத்தில் கிடக்கும் குடிமகன்களை அரசுமருத்துவமனைக்கு கொண்டு வரவும் தற்போது பயன்படுகிறது.

நிறைய சொல்லலாம். இப்போதைக்கு வேலை இருக்கு. வரவா!!

தேவா.

Tuesday 2 November 2010

நீர்க் குறைவால் உடலில் ஏற்படும் விளைவுகள்!


உடலில் நீர்ச்சத்து போதுமான அளவு இருப்பது  நாம் சுறுசுறுப்பாக வேலை செய்வதற்கு மிக அவசியம். உலகின் மொத்தப் பரப்பில் ௭௦ சதவீதம் நீர் இருப்பது போல் உடலில் 7௦% நீர்  உள்ளது. உடலில் நீரானது உடலின் அனைத்து செயல்களுக்கும் மிக அவசியம்.
  •  சராசரி மனித உடலில் ௩௭ லிட்டர் தண்ணீர் உள்ளது
  • இரத்தத்தில் 83%  தண்ணீர் உள்ளது.
  • மூளை 75%  நீராலானது.
  • எலும்பில் 25% நீர் உள்ளது.
  • மூச்சு விடுவதின் மூலம் தினமும் 25௦ மில்லி  நீர் உடலிலிருந்து வெளியேறுகிறது.
  • சாதாரணமாக 2 லிட்டர்கள் / அல்லது 8 குவளை  நீர்  ஒரு நாளைக்குத் தேவைப்படுகிறது.
  • அதிக உடல் உழைப்பு உள்ளோருக்கு இது போல் இரண்டு அல்லது மூன்று மடங்கு  தேவைப்படலாம்.
  •  நீர் அருந்தினால்  பசி குறைகிறது. இதனால் உடலானது சேமித்து வைத்துள்ள கொழுப்பை எரித்து உடலியக்கத்திற்குத் தேவையான சக்தியை உற்பத்தி செய்துகொள்கிறது.
  • உடல் கொழுப்பைக் குறைப்பதற்கு எல்லா  மருந்துகளையும் விட நீர் மிகச் சிறந்தது.
நீர் உடலில் குறைவதை எப்படி அறிவது?
  • நாக்கு மற்றும் வாய் உலர்ந்து போகுதல் 
  • சிறுநீர் மஞ்சளாகப் போதல்
  • மலம் கட்டுதல் - உடலில் போதுமான நீர் இருந்தால் பெருங்குடலில் மலம் எளிதாக செல்லும்.  உடலில் நீர்ச்சத்துக் குறையும்போது பெருங்குடல் மலத்திலுள்ள நீர் முழுவதையும் உறிஞ்சிக் கொள்ளும். வெளியே விடாது. அதனால் மலம் இறுகி மலச்சிக்கல் ஏற்படும். 
  • தோலின் விரிந்து சுருங்கும் தன்மை குறையும். நீர்ச்சத்து போதுமான அளவு உள்ளோரின் தோலை இழுத்து விட்டால் தோல் பழைய நிலைக்கு உடனே திரும்பிவிடும். குசந்தைகளுக்கு வயிற்றுப் போக்கின்போது மருத்துவர்கள் வயிற்றுத் தோலை இழுத்துப் பார்ப்பார்கள். நீர்ச்சத்துக் குறைவாக இருந்தால் தோல் பழைய நிலைக்குத்திரும்புவதற்கு நேரமாகும்.
  • நெஞ்சுப் படபடப்பு - பொதுவாக உடலில் தேவையான அளவு நீர் இருந்தால்தான் இரத்தத்திலும் சரியான விகிதத்தில் நீர் இருக்கும். இது குறையும்போது இரத்தத்திலுள்ள தாது உப்புக்கள் மாறுபடுவதால் இதயத்துடிப்பு அதிகரிக்கும். 
  • தசைப்பிடிப்பு - தசை சரியாக இயங்க சோடியம், பொட்டாசியம் போன்ற தாது உப்புகள்  சரியான அளவு இருக்க வேண்டும். ஆனால் உடலில் நீர்ச்சத்துக் குறையும்போது இந்த தாது உப்புக்களின் அளவும் மாறுபடுகிறது. அதனால் தசைகள் பிடிப்பு,சுளுக்கு போன்றவை ஏற்படுகின்றது. இது பெரும்பாலும் நீர் அருந்தாமல் நீண்ட நேரம் கடின வேலை செய்வோருக்கும், நீண்ட தூரம் நீர் அருந்தாமல் ஓடுதல், விளையாடுதல்  ஆகியவற்றில் ஈடுபடுவோருக்கும் ஏற்படும். 
  • மயக்கம், கிறுகிறுப்பு 
  • சோர்வு - நீரின் அளவு இரத்தத்தில் குறைவதால் இரத்த அழுத்தம் குறைந்து , இரத்தத்தில் பிராணவாயு குறைந்து விடுவதால் தசை, நரம்புகள் செயல்பாடு குறைந்து சோர்வு ஏற்படுகிறது.
  • நீர்சத்துக் குறைந்தால் உடல் வெப்பம் அதிகரிக்கும்.  இதனால் வேர்வை சுரப்பது குறையும்.
தண்ணீர் தேவையான அளவு குடிப்பது உடல் நலனுக்கு மிகவும் அவசியம். போதுமான அளவு தண்ணீர் குடித்து உடல் நலம் காப்போம்.  
    Related Posts with Thumbnails

    blogapedia

    Blog Directory