Wednesday 22 December 2010

எனக்கு வேண்டாம் ஓட்டு!

அன்பு நண்பர்களே!

தமிழ்மணம்  வலைப் பதிவர்களுக்கான போட்டி அறிவித்துள்ளது 

தமிழ்மணத்தில் பின்னூட்டங்கள் எப்படி ஜாலியோ அப்படித்தான் இதையும் லைட்டாக எடுத்துக் கொள்வதே சிறந்தது ( மனதுக்குள் இப்படி 10 முறை சொல்லிப்பாருங்கள்-மனம் லேசாகி விடும்… எப்புடி……………..    ஹி…. ஹி…….}

மேலே சொன்னது போல் அமைதியாக இருந்த என்னை சும்மா விடாமல்,  என் வீட்டு எடிட்டர் ( வேறு யார்.. வீட்டம்மாதான் ) என் இடுகைகளில் மூன்றை என் அனுமதியில்லாமல் { என் லாகின் ஐ.டி,, பாஸ்வேர்ட் எல்லாம் பறிக்கப்பட்டு பல நாட்கள் ஆகி விட்டன.. …..}  தமிழ்மணத்துக்கு அனுப்பிவிட்டார்.

அந்த மூன்று இடுகைகள்:

1.   பிரிவு: படைப்பிலக்கியம் (கதை, கவிதை, போன்றவை)

தேவன் மாயம் : கொஞ்சம் தேநீர்- பிரிதல்!!

2. பிரிவு: அறிவியல், விவசாயம், சுற்றுச்சூழல், மருத்துவம், தொழில்நுட்பக் கட்டுரைகள

தேவன் மாயம் : நடைப் பயிற்சி- 10 கேள்விகள்!!

3.பிரிவு: நகைச்சுவை, கார்ட்டூன்

 தேவன் மாயம் : வீட்டில் ஜாலி!

  ஹி  … ஹி..   இவற்றிற்கு யாரும் ஓட்டுப்போட வேண்டாம். அட  … உண்மைதாங்க!!  

என்னது?  படித்துப்பார்க்கப் போகிறீர்களா?  .. சொன்னாக் கேக்க மாட்டேங்கறீங்களே!  சரி! உங்க இஷ்டம்!   …..

ஓட்டுப் போடுங்க!   நீங்க போடுகிற ஓட்டையெல்லாம் நெகடிவ் ஓட்டாக எடுத்துக் கொள்ளச் சொல்லி தமிழ்மணத்துக்கு ஏற்கெனவே மெயில் பண்ணிவிட்டேனே!!!………………………………………

என்னடா . இவனுக்கு லூசா …. என்று நினைக்கவேண்டாம். 

உண்மையில் நல்ல இடுகைகள் யார் எழுதியிருந்தாலும் அவர்கள்ளுக்கே ஓட்டுப்போடவும்..  அதுதான் சரி…..

என்ன நண்பர்களே! நான் சொல்வது சரியா?

-----------------------------------------------------------

ஒரு சின்ன கவிதை……. கவிதை மாதிரி…

 

கேள்விகளுக்கும்

பதில்க்களுக்கும் இடையில்

இருந்தது,

இறந்து கொண்டிருந்த

அழகான

காதல்!

---------------------------------------------------------------

Saturday 18 December 2010

கொஞ்சம் தேநீர்- ….!

image

தேடிய நான்

எதிர்பார்த்த தெருவில்

இல்லை,

வழியில்,

எதைத் தேடினேன்

என்பதும் புரியவில்லை!

 

எதையோ

தேடித் தினமும்

தெருவில் நான்,

என்னைத்

தேடி

கதவுகளின் பின்னால் நீ!

 

-------------------------------------------------------------------------------------

00000000000000000000000000000000000000000000000000000

*************************************************************************************

 

இவற்றையும் படிக்கலாமே!

1.கொஞ்சம் தேநீர்- நான் உறங்க!

2.கொஞ்சம் தேநீர்-மழைக் காதல்!

Thursday 16 December 2010

கொஞ்சம் தேநீர்- முத்தம்!

மவுனமாய்

நீ பேசிய சொற்களையெல்லாம்

திரட்டி

யாருமறியாமல்

கொடுத்தாய் முத்தமாய்!

 

எவ்வளவு அன்பைக்

குழைத்து முத்தமாக்கினாய்?

 

கரையில்லாத

கடல்போல்

விளிம்பில்லாதது

உன் முத்தம்!

 

முடிவுறாத உன்

முத்தங்களில்

மூழ்கிக்கிடக்கிறேன்

நான்!

 

மீண்டெழும்

முத்தங்களின் கரைகளில்

காதலும்

கவிதையுமாய்க்

கிடக்கிறாய் நீ!

Monday 6 December 2010

சின்ன விசயம்!

image

தினமும் காலை எழுந்தவுடன் வேக வேகமாகக் குளித்து உடை அணிந்து வேலைக்குச் செல்லும்போது நம் எல்லோருக்கும்  அன்று அலுவலகத்தில் நாம் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகள் நம் மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும்.  போதாக் குறைக்கு அன்று செய்ய வேண்டிய வேலைகள் வேறு  டென்ஷனைக் கிளப்பிவிட்டிருக்கும்.

இதில் அலுவலக்த்தில் நுழைந்து அவரவர் வெலைகளில் மூழ்கிப்போகும் நாம் எப்படி நம் டென்சனைக் குறைத்துக்கொள்வது.?

இதற்கு வெகு சுலபமான சின்ன செயல்களை என்  கல்லூரி ஆசிரியர் ஒருவரிடமிருந்து  நான் சுட்டு  வைத்துள்ளேன்.. கைவசம் உள்ள அந்த சரக்கு ஒன்றும் பெரிய விசயமில்லை. ஆயினும் காலையில் எல்லோருக்கும் இருக்கும் அந்த டென்ஷனை அது மிகவும் குறைக்கிறது. அதனை  இப்போது  உங்களிடம் பகிர்ந்து கொள்ளுகிறேன்.

முதலில் உள்ளே நுழையும் போதே அவர் தன்னை விட பணியில் மேலுள்ளவர்களோ, கீழுள்ளவர்களோ யாராக இருந்தாலும் சரி சிரித்து முதல் வணக்கத்தைப் போட்டு விடுவார். சின்னப் பையன்களாக இருந்தால் அவன் கண்டுகொள்ளாமல் போகிறானே என்று எண்ணாமல் “என்னடா தம்பி, எப்படிடா இருக்கிறாய்?” ஒரு சின்ன விசாரிப்பு.

உள்ளே நுழைந்தவுடன் கூட்டம் அதிகமாக இருக்கும். நோயாளிகளைப் பார்த்துக்கொண்டே நம்மையும் நோட்டம் விடுவார். கொஞ்சம் கூட்டம் குறைந்தவுடன் அன்று நாம் போட்டிருக்கும் சட்டை, பேண்ட் இவற்றைப் பாராட்டாமல் விட மாட்டார். “ சட்டை பிரமாதமா இருக்கே! பேண்ட் பிட்டிங் அருமையா இருக்குடா தம்பி!”

“தம்பி தலையை ஒரு ஸ்டைலா வாரியிருக்காண்டா! அசத்துடா!” என்று சின்னச் சின்ன சிரிப்புடன் பாராட்டுதல் அவரிடமிருந்து வந்து கொண்டே இருக்கும்.. நான் வார்டுக்குச் சென்ற சில நாட்களில் அவரின் சிஷ்யனாகிவிட்டேன். மிகவும் ரிசர்வ் டைப்பான மருத்துவ மாணவர்கள்கூட அவருடன் கலந்து சந்தோசமாகப் பேசுவது கண்டு வியந்து போயிருக்கிறேன்.

அவருடன் டீ சாப்பிடச் செல்வதே ஒரு சுகானுபவம்.  வேலை செய்யாமல் டிமிக்கி கொடுக்கும் மாணவர்கள்கூட அவர் வார்டில் நன்றாக வேலை செய்வார்கள்.

சிரித்துக்கொண்டும், பிறரைப் பாரட்டிக்கொண்டும் இருப்பது, கர்வத்துடன் சுயபெருமை கொண்டு இருப்பதைவிடச் சிறந்தது என்பதை அவருடைய செயல்கள் உணர்த்திக்கொண்டே இருக்கும்.

அவருடன் பணிநாள் என்றால் அவரைச் சுற்றி ஒரு குழுவே உட்கார்ந்திருக்கும். பக்கத்து வார்டுகளில் பணியிலிருக்கும் நாங்களும் அவருடன்  சென்று பேசிக்கொண்டிருப்போம்.

இன்றும் நான் அரசு மருத்துவமனைக்குள் நுழையும் போதெல்லாம் அவர்  நினைவு வந்து விடும். யாரைக்கண்டாலும் மறக்காமல் நானே முந்திக்கொண்டு  சிரித்துக்கொண்டே  குட்மார்னிங் சொல்லி விடுகிறேன்.  அதே போல் பிறரின் உடையையோ செயல்களையோ பாராட்டவும் செய்கிறேன்.

எவ்வளவு கூட்டமிருந்தாலும் அவர்களால் சிரித்துக்கொண்டே எளிமையாக மலைப்பில்லாமல் வேலை செய்ய முடிகிறது.

நாளையும் பொழுதையும் இனிமையாக மாற்றுவது நாம்தானே!!  . என்ன நான் சொல்வது சரியா?

Wednesday 1 December 2010

டிஸ்க் ப்ரொலாப்ஸ்,முள்ளெலும்பிடைத் தட்டுப்பிதுக்கம்-4-தடுப்பு&சிகிச்சை

  image

தட்டுப்ப்பிதுக்கம் பற்றிய முந்தைய இடுகைகள் கீழே!

முதல் இடுகை:

வட்டு விலகல், டிஸ்க் ப்ரொலாப்ஸ்! (முள்ளெலும்பிடைத் தட்டுப்பிதுக்கம்)

இரண்டாவது இடுகை:

டிஸ்க் ப்ரொலாப்ஸ்,முள்ளெலும்பிடைத் தட்டுப்பிதுக்கம்-2

மூன்றாம் இடுகை

டிஸ்க் ப்ரொலாப்ஸ்,முள்ளெலும்பிடைத் தட்டுப்பிதுக்கம்-3

இந்த தட்டுப்பிதுக்கம் வராமல் தடுத்துக்கொள்ள முடியுமா?

இது வராமல் தடுக்க கீழ்க்கண்ட வழிகளைப் பயன்படுத்தலாம்.

  1. முதுகு தசைகள் பலமிழத்தலே முக்கிய காரணம். முதுகுத் தசைகளை உறுதியாக்கும் உடற்பயிற்ச்சிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.
  2. உடல் எடை அதிகரித்தல்- உடல் எடை அதிகரித்தால் முள்ளெலும்பிடைத் தட்டுகளில் அழுத்தம் அதிகரிக்கும். இதனால் தட்டுப்பிதுக்கம் அதிகரிக்கும்.
  3. நிமிர்ந்த நடையும், நிமிர்ந்து அமருதலும் மிக முக்கியம். இதனால் முதுகெலும்பின் வளைவுகள் சரியான நிலையில் இருப்பதால் தட்டுகளின் மீதான அழுத்தம்  குறையும்.
  4. முதுகை முன்புறம் வளைத்து குனிந்து பொருட்களை எடுப்பதால் தட்டுகளின் முன்புறத்தில் அழுத்தம் அதிகமாகிறது.இதனால் மெதுவாக தட்டு சிதையும் வாய்ப்பு அதிகமாகிறது.
  5. புகை பிடித்தல்- தட்டுப்பிதுக்கம் இதனால் அதிகரிக்கிறது.

பரிசோதனைகள்: கீழ்முதுகு தட்டுப்பிதுக்கத்தைக்க் கண்டுபிடிக்க கீழ்க்கண்ட பரிசோதனைகள் உள்ளன.

  1.   எக்ஸ் கதிர்ப்படம் அல்லது நுண்கதிர்ப்படம்- நுண்கதிர்ப்ப்படத்தில் எலும்புகளுக்கு இடையில் தட்டு உள்ள பகுதி குறைந்து காணப்படும். ஆயினும் இதைக்கொண்டு நாம் தட்டுப்பிதுக்கத்தை உறுதி செய்ய முடியாது.
  2. எம். ஆர்.ஐ- ஸ்கேன் –இந்த ஸ்கேன் மூலம் தட்டுப்பிதுக்கம் எந்த அளவில் உள்ளது, மற்றும் எந்தப்பகுதியில் உள்ளது போன்ற அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

சிகிச்சை முறைகள்:

  1. பொதுவாக இவை தன்னாலேயே சுருங்கிவிடும்ம் தன்மை கொண்டவை என்பதால் அறுவைசிகிச்சை 73% நோயாளிகளில் தேவைப்படாது என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. தட்டு வீக்கத்தைக்குறைக்கும் மருந்துகள், வலி குறைக்கும் மருந்துகள் ஆகிய்யவற்றைக் கொண்டு முதல் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
  2. முதுகுப்பட்டைகள் (LUMBOSACRAL BELT) பொதுவாக இந்த நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் இது ஓரளவே பயன் தரும்.
  3. பயிற்சி முறைகள், இயன்முறை சிகிச்சை: மின் கருவிகள் கொண்டு முதுக்குப்பகுதியில் மசாஜ் போல் சூடேற்றி பிடித்து விடுதல் (Interferential therapy, Electrical stimulation), மின் இழுவைக் கருவி மூலம் எலும்புகளுக்கு இடையில் உள்ள இடை வெளியை அதிகப்படுத்த முயற்சிகள்( traction) போன்ற உப சாந்தியான சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன.
  4. தட்டு பிதுங்கிய இடத்தில் ஸ்டீராய்ட் ஊசி மருந்து செலுத்தி அந்த பிதுக்கத்தின் வீக்கத்தைக் குறைத்தல்

மேற்கண்ட சிகிச்சை முறைகள் மூலம் பலன் இல்லாவிட்டால் அறுவை சிகிச்சை செய்யலாம்.

அறுவை சிகிச்சை என்பது மிகக்குறைந்த நோயாளிகளுக்கே செய்யப்படுகிறது. முதுகுப்புறத்தில் உள்ள பிதுங்கி வெளித்தள்ளியுள்ள தட்டு அறுவை சிகிச்சை செய்து  நீக்கப்படுகிறது..

அறுவை சிகிச்சை:

தற்போதைய நவீன அறுவை சிகிச்சை முறைகளில் பின் விளைவுகள் மிகக் குறைவு.

அறுவை சிகிச்சை செய்வதால் 80 லிருந்து 90% நோயாளிகளில் கால் வலியானது முற்றிலும் நீங்கிவிடுகிறதுகால் மதமதப்பு, தசை பலவீனம் ஆகியவை குறைய 6-12 வாரங்கள் ஆகலாம்.

10-15 சதவீதம் அறுவை சிகிச்சை செய்து கொண்டோருக்கு மீண்டும்  அதற்கு மேலுள்ள அல்லது கீழுள்ள எலும்பிடைப்பகுதிகளில் இந்நிலை மறுபடியும் ஏற்படலாம். .

Thursday 25 November 2010

டிஸ்க் ப்ரொலாப்ஸ்,முள்ளெலும்பிடைத் தட்டுப்பிதுக்கம்-3

image

இந்த மூன்றாம் பாகத்தைப் படிப்பதற்கு முன் முதல் இரண்டு பாகங்களைப் படிக்க விரும்பினால் கீழேயுள்ள சுட்டிகளை உபயோகிக்கவும்.

முதல் இடுகை:

வட்டு விலகல், டிஸ்க் ப்ரொலாப்ஸ்! (முள்ளெலும்பிடைத் தட்டுப்பிதுக்கம்)

இரண்டாவது இடுகை:

டிஸ்க் ப்ரொலாப்ஸ்,முள்ளெலும்பிடைத் தட்டுப்பிதுக்கம்-2

தட்டுப்பிதுக்கம் மிக அதிகமாக முதுகின் கீழ்ப்பகுதியில் உள்ள நாரி முள்ளெலும்பில் அதிகம் ஏற்படுவதை அறிவோம். கழுத்துப் பகுதியில் உள்ள முள்ளெலும்பிலும் இது வரலாம். கழுத்து எலும்புத் தேய்மானம், விபத்தில் கழுத்தெலும்பு பாதிப்பு ஆகியவற்றினால் பொதுவாக கழுத்துப்பகுதியில் தட்டுப்பிதுக்கம் ஏற்படுகிறது. இதனை பின்னர் விரிவாகப் பார்ப்போம்.

தற்போது முதுகின் கீழ்ப்பகுதியில் ஏற்படும் தட்டுப்பிதுக்கத்தைப் பற்றிப்பார்ப்போம்.

இந்த தட்டுப்பிதுக்கம் இளைஞர்களையே அதிகம் பாதிக்கிறது என்று பார்த்தோம்.

image

நோயாளிக்கு இதனால்  என்ன உபாதைகள் ஏற்படுகிறது என்று பார்ப்போம்.

  1. முதுகு வலி- கீழ்முதுகுப்பகுதியில் வலி நடுப்பக்குதியில் , பக்கவாட்டில் அல்லது நடுப்பகுதி மற்றும் பக்கவாட்டில் காணப்படும்.ஓய்வு எடுக்கும் போது, படுக்கும்போது வலி குறைவாக இருக்கும். நடக்கும்போது, வேலை செய்யும்போது,இடுப்பை அசைத்து வேலை செய்யும்போது , தும்மும்போது, இருமும்போது வலி அதிகரிக்கும்.
  2. நியூரால்ஜியா, சயாடிகா – என்று மருத்துவர் சொல்லக் கேட்டிருப்பீர்கள். தட்டுப் பிதுக்கம் தண்டுவடத்திலிருந்து பிரிந்து வரும்  நரம்பை அழுத்தும்போது கீழ்முதுகு வலியுடன் கால்,தொடை, பாதம் ஆகிய பகுதிகளிலும் வலி இருக்கும். இந்த வலி நரம்பு வலி ஆகையால் நியூரால்ஜியா என்றும் பொதுவாக தொடை, கால் பகுதியில் சயாடிக் நரம்பு  இருப்பதால் சயாடிகா என்றும் அழைக்கப்படுகிறது.
  3. நரம்பு பாதிப்பு சில நேரங்களில் ஊசியால் குத்துவது போல் இருக்கும்.
  4. நரம்பு அழுத்தத்தால் தொடை, கால் பகுதியில் உள்ள தசைகள் பலவீனமாகலாம்
  5. அதே போல் முதுகைக் குனிந்து வேலை செய்வதில் மிகுந்த சிரமம் இருக்கும். பலரால் குனிந்து வேலை செய்ய முடியாது.
  6. அரிதாக இடுப்பு வலியுடன் குடல், சிறுநீர்ப்பை ஆகியவை செயலிழந்து போகலாம். இப்ப்படியிருந்தால் மலவாய்ப் பகுதியில் சுற்றில்லும் சுரணையில்லாமல் இருக்கும். இதனை உடனடியாக கவனிக்க வேண்டும். இல்லையெனில் மலக்க்குடல் மற்றும் சிறுநீர்ப்பை நரம்புகள் முற்றிலும் சேதமடையலாம்.

தட்டுப் பிதுக்கம் சிகிச்சை அளிக்கப்பட்ட சில வாரங்களில் வலி குறைந்து விடும்.  பத்தில் ஒருவருக்கு வலி குறையாமல் ஆறு வாரங்களுக்கும் மேல் தொடரும்.

பரிசோதனைகள்:

பொதுவாக தட்டுப்பிதுக்கத்தை மருத்துவர் நேரடியாக நோயாளியைப் பரிசோதிப்பதின் மூலம் கண்டுபிடித்து விடுவார். எனினும்

  • நுண்கதிர் படம்
  • எம்.ஆர்.ஐ  ஆகியவை பொதுவாக எடுக்கப்படவேண்டும். இவை இரண்டில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் மிகவும் துல்லியமானது. இந்த ஸ்கேன் மூலம் தட்டுப்பிதுக்கம் எந்த அளவிலுள்ளது, அறுவை சிகிச்சை அவசியமா அல்லது சாதாரண சிகிச்சை போதுமா  என்பதை அறிந்து கொள்ளலாம்.

Friday 19 November 2010

மஞ்சள் காமாலை-A(HEPATITIS-A) அவசியம் அறிய வேண்டியவை!

 

image

மஞ்சள்காமாலை என்பது பொதுவாக அனைவரும் கேள்விப்பட்ட வியாதிதான். ஆனால் அது ஏன் வருகிறது வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பவை பற்றித் தேவையான தெளிவு மிக அவசியம். அவற்றைப் பற்றியே நாம் இப்போது சுருக்கமாகப் பார்க்கப் போகிறோம்.

1.மஞ்சள்காமாலை ஹெபடைட்டிஸ் என்றால் என்ன?

மஞ்சள் காமாலை என்பது கல்லீரலில்(LIVER) கிருமித்தொற்று ஏற்படுவதைக் குறிக்கிறது.

2.பொதுவாக மஞ்சள் காமாலை எதனால் ஏற்படுகிறது? 

பொதுவாக A,B,C என்று வகைப்படுத்தப்பட்டுள்ள வைரஸ்  கிருமி( தீ நுண்மம்) களால் ஏற்படுகிறது.

3.மஞ்சள்காமாலை ஏ (HEPATITIS-A) மஞ்சள்காமாலை ஏ பற்றி இந்தப்பதிவில் பார்ப்போம்

  • இது குழந்தைகளை அதிகம் தாக்குகிறது. 
  • மனித மலம் சிறு அளவில் விரல்களில், நக இடைவெளியில் இருக்கும். இது உணவில், நீரில் கலக்கிறது. அந்த நீர் மற்றும் உணவை நாம் சாப்பிடும்போது அது நம்மைத் தொற்றிக்கொள்கிறது. சமையல்காரர்கள் மற்றும் உணவுக்கூடங்களில் இருப்போர் மற்றும் அனைவரும் மலம் கழித்த பின் சோப்புப்போட்டுக் கை கழுவுதல், கையுறை அணிந்து சமைத்தல், குடிக்கும் தண்ணீரில் கை படாமல் இருப்பது ஆகியவை அவசியம். ஆகையாலேயே வெளியில் சாப்பிடும்போது நல்ல சுகாதாரமான உணவகங்களில் சாப்பிட வேண்டும்.    
  • இந்தக் கிருமி தொற்றிய 15-50 நாட்களில் நோய்க்குறிகள் தோன்றும்.
  • மிதமான காய்ச்சல்,  அதிக சோர்வு, உமட்டல், மேல் வயிற்று வலி, வாந்தி ஆகியவை இருக்கும். குழந்தைகள் படிக்காமல் சோர்வாகப் படுத்திருந்தாலும், குறைந்த மிதமான காய்ச்சல் தொடர்ந்து இருந்தாலும் சாதாரண வைரஸ் காய்ச்சல் என்று மிதமாக இருத்தல் தவறு.
  • அதன் பின் சிறு நீர் மஞ்சள், அடர் மஞ்சள் நிறத்தில் போகும். கண்ணின் வெண்ணிறப்பகுதி, உடலின் தோல் பகுதிகளில்  மஞ்சள் நிறம் காணப்படும். இந்த மஞ்சள் நிறம் ஒரு வாரத்தில் இருந்து நான்கு வாரங்கள் வரை இருக்கும்.
  • A வைரஸினால் வரும் மஞ்சள் காமாலை  தன்னாலேயே சரியாகிவிடும் தன்மை உடையது. ஆயினும் சில குழந்தைகள் வாந்தி, தலைவலி,சாப்பாடு செரிக்காமல் இருத்தல், பசியின்மை ஆகியவற்றால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவர்.   ஆதலால் அவர்களுக்கு குளுக்கோஸ் ஏற்றுதல் அவசியமாக இருக்கும். காய்ச்சலுக்கு பாரசிடமால் போன்ற சாதாரண மாத்திரையும், வாந்திக்கு மருந்துகளும் எடுத்துக்கொள்வது அவசியம்.    
  • இந்நோய் ஒருமுறை தாக்கினால் வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உருவாக்கி விடுவதால் இது மறுபடியும் வருவது இல்லை.
  • இதற்கு இரத்தப் பரிசோதனை செய்து கல்லீரலின் செயல்பாடு எப்படி உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். இரத்தப்பரிசோதனை மூலம் A வகை மஞ்சள்காமாலைதானா அல்லது B, C போன்ற வேறு வகை மஞ்சள்காமாலையா என்பதனையும் அறிவது அவசியம்.
  • வயிறு ஸ்கேன் செய்து கல்லீரல், பித்தப்பை ஆகியவற்றின் வீக்கம், நோய் எவ்வளவு தூரம் அவற்றை பாதித்துள்ளது என்பதனையும் அறிவது அவசியம்.
  • இந்நோய் வராமல் தடுப்பதற்கு தடுப்பூசி உள்ளது. இத்தடுப்பூசியானது 20 வருடத்துக்கும் மேல் இந்த ஏ வகை மஞ்சள் காமாலை வராமல் தடுக்கும்.

Monday 15 November 2010

டிஸ்க் ப்ரொலாப்ஸ்,முள்ளெலும்பிடைத் தட்டுப்பிதுக்கம்-2

என் முந்தைய பதிவில் வட்டு விலகல் பற்றி எழுதியிருந்தேன். முதுகு முள்ளெலும்புகளுக்கு இடையில் உள்ள வட்டு அல்லது தட்டு போன்ற  அமைப்பு மிகவும் அதிகமாகப் பேசப்படும் ஒன்றாக உள்ளது. காரணம் தற்போது அதிகமானோர் இந்தப் பிரச்சினையால் அவதிப்படுவதுதான்.

முதல் இடுகையைப் படிக்காதவர்கள் விரும்பினால் படிக்க கீழேயுள்ள தலைப்பை சுட்டி படிக்கலாம்.

 வட்டு விலகல், டிஸ்க் ப்ரொலாப்ஸ்! (முள்ளெலும்பிடைத் தட்டுப்பிதுக்கம்)

இந்த தட்டுப்பிதுக்கம் எந்த இடத்தில் அதிகம் வருகிறது என்றால் முதுகின் கீழ்ப்ப்பகுதியில் உள்ள (LUMBAR VERTEBRA) முள்ளெலும்ப்பில்தான். இதனை நாரி முள்ளெலும்பு என்று அழைக்கின்றனர்.

image

நாரி (லம்பார்)  முள்ளெலும்பில் 5 எலும்புகள் உள்ளன.  இதில் கடைசி எலும்புக்கும் சாக்ரம்(SACRUM) எலும்புக்கும் இடையில் உள்ள (L5-S1)  வட்டும் அதற்கு ஒருபடி மேலேயுள்ள (L4-L5 ) நான்காம், ஐந்தாம் எலும்புகளுக்கிடையில் உள்ள வட்டும் அதிகம் பாதிக்கப்படுகின்றன.

(மேலே உள்ள படத்த்ஈல் லம்பார் நாரி முள்ளெலும்பு இடுப்புப் பகுதியில் காட்டப்பட்டுள்ளது. அதன் கீழ் PELVIC என்று குறிப்பிடப்பட்டுள்ள பகுதியில் சாக்ரம்(SACRUM) என்ற எலும்பு உள்ளது. இதனைத் தமிழில் திரிகம் (திருவெலும்பு)  என்று அழைக்கின்றனர்.image

மேலேயுள்ள எலும்புதான் சாக்ரம் என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும்  திரிகம் எலும்பு இதில் ஐந்து எலும்புகள்  இணைந்து ஒன்றாகக் காணப்படுகிறது. இந்த ஒன்றிணைந்த அமைப்பே திரிகம்.

திரிகம் 1- S1

திரிகம் 2- S2

திரிகம் 3 –S3

திரிகம் 4- S4

thirikam 5-  S5

என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படுகிறது.

image

மேலுள்ளது வட்டு அல்லது தட்டு (DISC)) ன் படம்.

இதில் வட்டின் இரண்டு பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளது. வட்டின் வெளிப்பகுதி சிதைந்து உள்ளே உள்ள பிசின் போன்ற பகுதி (NUCLEUS PULPOSIS) வெளியே தள்ளிக் கொண்டு இருப்பதைக் காணலாம்.  இந்த இடத்தில் நரம்புகள் தண்டு வடத்திலிருந்து பிரிந்து கால்களுக்குச் செல்வதால் இவை அதனை அழுத்துகின்றன. அழுத்தப்படும் நரம்பு காலின் எந்தப் பகுதிக்குச் செல்கிறதோ அங்கு வலி, மரம்மரப்பு ஆகியவை உண்டாகும்.

வட்டு விலகல் யாருக்கு வருகிறது?

வட்டு விலகல் என்ற டிஸ்க் புரொலாப்ஸ்  இளம் வயதினரையே  அதிகம் பாதிக்கிறது. அதிலும் ஆண்களையே அதிகம் பாதிக்கிறது. இந்த வலியானது அதிகம் வேலை செய்யும்போதோ, கனமான பொருட்களைத் தூக்கும்போதோ  அதிகமாகிறது.  

இன்னும் நிறைய உள்ளது எழுத!

தேவா.

Thursday 11 November 2010

நம்ப முடியாத அற்புதம்!!

வேகமாகக் காரில் சென்று இறந்த  டயானா பற்றி நமக்குத் தெரியும்.  அதே போல் விபத்துகளில் உயிர் பிழைத்தவர்கள் பற்றிப் படித்திருக்க மாட்டோம்.  எலும்பு முறிவு அறுவை சிகிச்சை மற்றும் விபத்து சிகிச்சை மிக அற்புதமான நவீன கண்டு பிடிப்புகளுடன்  முன்னேறிக்கொண்டே இருக்கிறது.  உடலில் பல எலும்புகள், முதுகெலும்பு முறிவு, நுரையீரலில் காயம் ஆகியவை  எல்லாம்  விபத்தில் மிகக் கொடுமையானவை. இவற்றால்  பாதிக்கப்பட்டு தகுந்த சிகிச்சை இல்லாமல் உயிர் இழந்தவர்கள் மிக அதிகம்.
தற்போதும் அத்தகைய சிகிச்சை உலகில் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அப்படிக்கிடைத்தால் அவர் அதிர்ஷ்டம் செய்தவர்தான்.

காட்ரினாவுக்கு 17 வயதுதான்.  70 மைல் வேகத்தில் காரில் சென்று மோதி யதில் உடலில் ஏற்பட்ட காயங்களின் பட்டியல் கீழே:
  •  முதுகெலும்பு முறிவு
  • கழுத்தெலும்பு முறிவு
  • இடது கால் எலும்பு முறிவு
  • இடுப்பில் பெல்விஸ் எலும்பு முறிவு
  • விலா எலும்புகள் பல இடங்களில் முறிவு
  • இரண்டு நுரையீரல்களிலும் காயம்
மருத்துவர்களோ அவர் இனி நடக்கவே முடியாது என்று கூறிவிட்டனர். அறுவை சிகிச்சைதான் வழி. ஆனால் இத்தனை அறுவை சிகிச்சைகளை உடல் எப்படித்தாங்கும்? மேலும் முதுகுத்தண்டு எலும்பு அறுவை சிகிச்சை, கழுத்த்எலும்பு அறுவை சிகிச்சை ஆகியவை  மிகச் சிக்கலானவை.
உடலின் பல இடங்களில் காயங்கள் இருக்கும்போது இன்த அறுவை சிகிச்சையால் மரணம்கூட ஏற்படலாம் அல்லது கைகால்களுக்குச் செல்லும் நரம்ப்புகள் அழுந்தி செயலிழந்து படுத்த படுக்கையாக இருக்க வேண்டிய சூழ்நிலையும் வரலாம்.
ஆனால் வேறு வழியில்லை.
அவரது கால். இடுப்புப் பகுதிகள் உலோகக் கம்பிகளால் இணைக்கப்பட்டன.
மேலும் முதுகெலும்பு, கழுத்து, இடுப்பு என அனைத்து இடங்களிலும்  கம்பிகள்  பொறுத்தப்படது.
மொத்தம் 11 உலோகக் கம்பிகள் அறுவை சிகிச்சை செய்து பொருத்தப்பட்டன.
நுரையீரல் காயம் சரிசெய்யப்பட்டது.

 நம்புங்கள் மக்களே !!  நம்புங்கள்!1 தற்போது அவர் மீண்டும் மாடல் ஆக பணிபுரிகிறார்

Tuesday 9 November 2010

வட்டு விலகல், டிஸ்க் ப்ரொலாப்ஸ்! (முள்ளெலும்பிடைத் தட்டுப்பிதுக்கம்)

 

டிஸ்க் புரொலாப்ஸ்   என்று அழைக்கப்படும்   இந்த பிரச்சினை பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது.

டிஸ்க்  அல்லது வட்டு  என்றால்   என்ன?

டிஸ்க்    என்பது இரண்டு முதுகுத் தண்டுவட எலும்புகளுக்கு இடையிலலுள்ள ஜவ்வு போன்ற பகுதியாகும்.   இது முதுகெலும்புகளுக்கு இடையில்   அதிர்வையும், பளுவையும் குறைக்கிறது. முதுகெல்லும்பின் வளைந்து கொடுக்கும் தன்மைக்கு பெரிதும் உதவுகிறது.  

கீழுள்ள படத்தில் இரண்டு முதுகுத் தண்டு எலும்புகளின் படங்கள் வரையப்பட்டுள்ளன. ஒன்று நேராக இருக்கும்போது, இன்ன்னொன்று வளையும் போது – நடுவில் வெண்ணிறமாக இருப்பதே வட்டு. படத்தில் எளிமையாக முதுகுத் தண்டெலும்பின் உடல் பாகம் மட்டும் செவ்வகமாக வரையப்பட்டுள்ளது.

   image

உண்மையான முதுகுத் தண்டெலும்பு கீழே தரப்பட்டுள்ளது..

image

இதில் முன்புறம் சிறு கிளைகளாக உள்ளவை முள் போன்ற அமைப்புகள். இதனாலேயே இவை முள்ளெலும்புகள் என்று அழைக்கப்படுகின்றன.

இவற்றின் இடையிலுள்ள வட்டு அல்லது தட்டுகள் பளுவின் காரணமாக அழுத்தப்பட்டு பிதுங்கிய நிலையில் இருப்பதால்

முள்ளெலும்பிடைத் தட்டுப்பிதுக்கம்  

என்று விக்கியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 

பொதுவாக ஆங்கிலத்தில் எழுதும்போது டிஸ்க் ப்ரொலாப்ஸ் என்று குறிப்பிட்டாலேயே முதுகெலும்பு வட்டு பிதுங்கி வெளியே விலகி வருவதையே குறிக்கும்.  ஆகையால் பொதுவாக டிஸ்க் ப்ரொலாப்ஸ் பற்றி எழுதும்போது வட்டு விலகல் என்று எழுதலாமா? இல்லை முள்ளெலும்பிடைத் தட்ட்டுப் பிதுக்கம் என்று எழுதுதல்தான் சரியா? என்பது விவாதத்திற்குட்படுத்தப்பட வேண்டிய விசயம்!

இதுபற்றிப் பதிவர்கள் தங்கள் கருத்தைக் கூறலாம்.

உங்கள் கருத்துகளுக்குப் பின் தொடருகிறேன்!

Friday 5 November 2010

தீபாவளி தாமத வாழ்த்துகள்!

 தீபாவளி தாமத  வாழ்த்துகள்!
தீபாவளி ஒருவழியாக முடிந்து விட்டது. அனைவரும் அவரவர் பாணியில் கொண்டாடியிருப்பீர்கள். என் வாழ்த்துகளை  தீபாவளி முடிந்தவுடன் சொல்லிக்கொள்கிறேன்.

பல வாழ்த்துப் பதிவுகள் எழுதியிருந்தாலும் தீபாவளி வாழ்த்துகள் என்று எழுதலாமா என்று நீண்ட நேரம் தீபாவளியன்று பலமுறை யோசித்தும்  என்னால் வாழ்த்துப் பதிவு எழுத முடியவில்லை.  

தீபாவளி வாழ்த்துப் பதிவு மட்டும் அல்ல, இதுபோல் எழுத நினைத்து எழுதாமல் விட்ட பதிவுகள் பல நண்பர்களின் நெஞ்சிலும் இருக்கும் என்று நினைக்கிறேன். 
எனக்கு தீபாவளி அன்று குறுந்தகவல் மூலம் வாழ்த்துச்  செய்தி அனுப்பிய அனுப்பிய பதிவுலக நண்பர்களுக்கு நன்றி.

அரசு மருத்துவமனையில் தீபாவளி,பொங்கல் போன்ற நாட்களில்  இதைக் கொண்டாடாத பிற மதத்தைச் சேர்ந்த  மருத்துவர்களைப் பணியில் அமர்த்துவதும் இதே போல் கிறிஸ்துமஸ், ரம்ஜான் ஆகியவற்றிற்கு அதைக் கொண்டாடும் நண்பர்களுக்கு விடுப்புக் கொடுப்பதும் வழக்கம்.

ஆனால் இம்முறை அப்படி செய்ய முடியவில்லை.

மூத்த மருத்துவருக்கும், தீபாவளி கொண்டாடாத ஒரு மருத்துவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்ததால் அந்த தீபாவளி கொண்டாடாத மருத்துவர் தீபாவளிக்கு அவர் வேலை செய்ய முடியாது  என்று கூறிவிட்டார்..

நாங்கள் எவ்வளவோ  சொல்லியும் அவர் கேட்கவில்லை.இதனால் நேற்றைய வேலை  வரிசைக்கிரமப்படி  இளம் மருத்துவர் ஒருவர் தலையில் விழுந்து விட்டது
 
இதனால் இளம் மருத்துவர் ஒருவர் இருபத்து நான்கு மணிநேரப் பணியில் மருத்துவமனையிலேயே இருக்க நேர்ந்து விட்டது.  நேற்றைய பணியும் தீபாவளிதானே எளிமையாக இருக்கும் என்று பார்த்தால் " குடிமகன்கள் குடித்து விட்டு பல இடங்களிலும் அடிதடிகளில் ஈடுபட்டு, தொடர்ந்து அரசு மருத்தவமனைக்கு போலீஸ் கேசாக வந்துகொண்டிருந்ததால் அவரால் வீட்டுக்கே வரமுடியவில்லை.

ஒரு போலீஸ் கேஸ் என்றால் அதைத் தொடர்ந்து அரசியல்வாதிகள் அவர்களுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும்  அரசு மருத்துவமனைக்குள் வந்துகொண்டே இருப்பதால் அனைவருக்கும் பதில் சொல்ல வேண்டிய நிலை.    

108  ஆம்புலன்ஸ்  நோயாளிகளின் வசதிக்காக ஏற்படுத்தப்பட்டது. மிக நல்லமுறையில் செயல்பட்டு வருவது அனைவருக்கும் தெரியும். அது மது அருந்திவிட்டு மயக்கத்தில் கிடக்கும் குடிமகன்களை அரசுமருத்துவமனைக்கு கொண்டு வரவும் தற்போது பயன்படுகிறது.

நிறைய சொல்லலாம். இப்போதைக்கு வேலை இருக்கு. வரவா!!

தேவா.

Tuesday 2 November 2010

நீர்க் குறைவால் உடலில் ஏற்படும் விளைவுகள்!


உடலில் நீர்ச்சத்து போதுமான அளவு இருப்பது  நாம் சுறுசுறுப்பாக வேலை செய்வதற்கு மிக அவசியம். உலகின் மொத்தப் பரப்பில் ௭௦ சதவீதம் நீர் இருப்பது போல் உடலில் 7௦% நீர்  உள்ளது. உடலில் நீரானது உடலின் அனைத்து செயல்களுக்கும் மிக அவசியம்.
  •  சராசரி மனித உடலில் ௩௭ லிட்டர் தண்ணீர் உள்ளது
  • இரத்தத்தில் 83%  தண்ணீர் உள்ளது.
  • மூளை 75%  நீராலானது.
  • எலும்பில் 25% நீர் உள்ளது.
  • மூச்சு விடுவதின் மூலம் தினமும் 25௦ மில்லி  நீர் உடலிலிருந்து வெளியேறுகிறது.
  • சாதாரணமாக 2 லிட்டர்கள் / அல்லது 8 குவளை  நீர்  ஒரு நாளைக்குத் தேவைப்படுகிறது.
  • அதிக உடல் உழைப்பு உள்ளோருக்கு இது போல் இரண்டு அல்லது மூன்று மடங்கு  தேவைப்படலாம்.
  •  நீர் அருந்தினால்  பசி குறைகிறது. இதனால் உடலானது சேமித்து வைத்துள்ள கொழுப்பை எரித்து உடலியக்கத்திற்குத் தேவையான சக்தியை உற்பத்தி செய்துகொள்கிறது.
  • உடல் கொழுப்பைக் குறைப்பதற்கு எல்லா  மருந்துகளையும் விட நீர் மிகச் சிறந்தது.
நீர் உடலில் குறைவதை எப்படி அறிவது?
  • நாக்கு மற்றும் வாய் உலர்ந்து போகுதல் 
  • சிறுநீர் மஞ்சளாகப் போதல்
  • மலம் கட்டுதல் - உடலில் போதுமான நீர் இருந்தால் பெருங்குடலில் மலம் எளிதாக செல்லும்.  உடலில் நீர்ச்சத்துக் குறையும்போது பெருங்குடல் மலத்திலுள்ள நீர் முழுவதையும் உறிஞ்சிக் கொள்ளும். வெளியே விடாது. அதனால் மலம் இறுகி மலச்சிக்கல் ஏற்படும். 
  • தோலின் விரிந்து சுருங்கும் தன்மை குறையும். நீர்ச்சத்து போதுமான அளவு உள்ளோரின் தோலை இழுத்து விட்டால் தோல் பழைய நிலைக்கு உடனே திரும்பிவிடும். குசந்தைகளுக்கு வயிற்றுப் போக்கின்போது மருத்துவர்கள் வயிற்றுத் தோலை இழுத்துப் பார்ப்பார்கள். நீர்ச்சத்துக் குறைவாக இருந்தால் தோல் பழைய நிலைக்குத்திரும்புவதற்கு நேரமாகும்.
  • நெஞ்சுப் படபடப்பு - பொதுவாக உடலில் தேவையான அளவு நீர் இருந்தால்தான் இரத்தத்திலும் சரியான விகிதத்தில் நீர் இருக்கும். இது குறையும்போது இரத்தத்திலுள்ள தாது உப்புக்கள் மாறுபடுவதால் இதயத்துடிப்பு அதிகரிக்கும். 
  • தசைப்பிடிப்பு - தசை சரியாக இயங்க சோடியம், பொட்டாசியம் போன்ற தாது உப்புகள்  சரியான அளவு இருக்க வேண்டும். ஆனால் உடலில் நீர்ச்சத்துக் குறையும்போது இந்த தாது உப்புக்களின் அளவும் மாறுபடுகிறது. அதனால் தசைகள் பிடிப்பு,சுளுக்கு போன்றவை ஏற்படுகின்றது. இது பெரும்பாலும் நீர் அருந்தாமல் நீண்ட நேரம் கடின வேலை செய்வோருக்கும், நீண்ட தூரம் நீர் அருந்தாமல் ஓடுதல், விளையாடுதல்  ஆகியவற்றில் ஈடுபடுவோருக்கும் ஏற்படும். 
  • மயக்கம், கிறுகிறுப்பு 
  • சோர்வு - நீரின் அளவு இரத்தத்தில் குறைவதால் இரத்த அழுத்தம் குறைந்து , இரத்தத்தில் பிராணவாயு குறைந்து விடுவதால் தசை, நரம்புகள் செயல்பாடு குறைந்து சோர்வு ஏற்படுகிறது.
  • நீர்சத்துக் குறைந்தால் உடல் வெப்பம் அதிகரிக்கும்.  இதனால் வேர்வை சுரப்பது குறையும்.
தண்ணீர் தேவையான அளவு குடிப்பது உடல் நலனுக்கு மிகவும் அவசியம். போதுமான அளவு தண்ணீர் குடித்து உடல் நலம் காப்போம்.  

    Sunday 31 October 2010

    இன்சுலின் பம்ப்!



    இன்சுலின் பம்ப் என்பது தொடர்ந்து இன்சுலினை உடலுக்குள் செலுத்தும் ஒரு சிறிய கருவி. இதில் தேவையான இன்சுலின் மருந்து அடைக்கப்பட்டிருக்கும். சிறிய மோட்டார் ஒன்று மைக்ரோ சில்லினால் கட்டுப்படுத்தும் வகையில் இருக்கும்.இதில் உள்ள  மிகச் சிறிய உசி ஒன்று நம் உடலின் தோலுக்கடியில் பொருத்தும் வகையில் இருக்கும்.

    இன்சுலின் பம்பின் வசதி என்னவென்றால் தினமும் பலமுறை  ஊசி குத்திக்கொள்ள வேண்டியது இல்லை. இதனை வயிற்றுப் பகுதியில் சுலபமாக பொருத்திக் கொள்ளலாம் . கருவி சிறிய செல்போன் போல் இருக்கும். அதனால் துணியில் பொருத்திக்கொள்ளலாம். வெளியே தெரியாது.  அதே போல் வீட்டுக்கு வராமல் வெளியிடங்களில் இருந்தால் அடிக்கடி மருந்து எடுத்துப் போட்டுக் கொள்ள வேண்டிய தேவை இல்லை. உடலில் எவ்வளவு சர்க்கரை உள்ளது என்று பார்த்து தேவையான அளவு எவ்வளவு என்று கருவியே கணக்கிட்டு விடும்.   

    யாருக்கு இது தேவை?
    • முதல் வகை நீரிழிவு நோய் உள்ளோருக்கு 
    • சிறுநீரகம்,நரம்பு,கண், கால் பாதிப்புகள் உள்ளவர்களுக்கு 
    • நீரிழிவு நோயின் பின் விளைவுகள் உள்ளவர்களுக்கு 
    • சாதாரண சிகிச்சை மூலம் சர்க்கரையின் அளவு குறையாதவர்களுக்கு 
    • நீண்ட நாள் சர்க்கரை உள்ளவர்களுக்கு 
    • கர்ப்பிணிகளுக்கு
    • காரணமின்றி சர்க்கரை குறைவதும் அதிகரிப்பதுமாக உள்ளவர்களுக்கு
    இதன் முக்கிய பண்கள்:
    • சர்க்கரையின் அளவு   இரத்தத்தில் குறைந்து சரியான அளவுக்கு வரும் 
    • தாழ்நிலை சர்க்கரை ஏற்பட்டு மயங்கி விழுவது சீராகும் 
    • இரவில் தூக்கத்தில் சர்க்கரை குறைந்து விடுமோ என்று பயமின்றி உறங்கலாம் 
    • சரியான நேரத்தில் சாப்பிட முடியாதபடி பிசியாக வேலை செய்வோர் சற்று ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் முன்போ பின்போ உண்ணலாம் 
    • வாழ்க்கைத் தரம் உயரும்.   
    1970 களிலேயே கண்டு பிடிக்கப்பட்ட இந்தக் கருவி தற்போது இலட்சக் கணக்கான  மேல் நாட்டினரால் உபயோகப் படுத்தப்படுகிறது.
    சரி! இவ்வளவு அருமையான இந்தக் கருவியை நாம் உபயோகிக்க முடியுமா?
    முடியும்.  ஆனால் இக்கருவியின் விலை  பதினைந்து லட்ச ரூபாய். மாதம் இரண்டு ஆயிரம் ரூபாய்  மருந்துக்கு செலவாகும்.     

    Tuesday 26 October 2010

    உள்ள இன்சுலினைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி?

    உடலில் உள்ள இன்சுலின் சுரக்கும் திறன் குறைவதாலேயே  இனிப்பு நோய் விரைவில் வருகிறது. பரம்பரையில் இனிப்பு நோய் இருந்தாலும் சில உணவுக்க் கட்டுப்பாடுகளால் நாம் நம் கணையத்தின் இன்சுலின் சுரக்கும் திறனைத் தக்க வைத்துக் கொள்ளலாம்.
    இனிப்பை  இர த்த த் தி ல்  அதிக மா க் கு வ து எது?
    • அரிசி
    • ராகி கேப்பை
    • சோளம் 
    • கம்பு
    • ஓட்ஸ்
     போன்ற தானிய  உணவு க ள்   அனைத்தும்  இர த்தத்தி ல்  அ தி கமா க்குகி ன்றன.
    மே ற் கூ றிய வை   மா  வு ச்சத்து ப் பொரு ட்க ள்.  இவை      உட னடியாக ஜீர ண மாகி   குளு க் கோ ஸ்  ஆகிவிடுகிறது.  ஆகவே கணையம் அதிகம் இன்சுலினை  சுரக்க வேண்டியுள்ளது.
    ஆகையினால் மாவுச்சத்துப் பொருட்களை அதிகம் உண்ணாமல் பிற வகை உணவுகளுடன் சேர்த்து உண்ண வேண்டும்.
    • சப்பாத்தி, 
    • பூரி
    • பொங்கல்,
    • இட்லி,
    • தோசை,
    அனைத்தும்  மாவுச்சத்துப் பொருட்களே.  இவை செரிக்க அதிகம் இன்சுலின் தேவை.

    இதற்கு என்ன செய்யலாம்?
    •  காலை  உணவு இட்லி எனில்  நான்கு இட்லிக்கு பதில்  இரண்டு இட்லி சாப்பிடலாம்.
    • இரண்டு இட்லிக்கு பதில் காய்கறி, சுண்டல், சாலட் சாப்பிடலாம்.
     இப்படி  உண்பதால் உடலுக்குத் தேவையான சக்தி இருக்காது என்று சிலர் கருதுகிறார்கள். அது தவறு. இன்சுலின் சுரப்பது பாதுகாக்கப்படுவதுடன்  உடலுக்குத் தேவையான விட்டமின்கள், நுண்ணுயிர் சத்துகள், நார்ச்சத்து , தாது உப்புகள்  ஆகியவை கிடைப்பதால்  உடல் சோர்வின்றி  அதிக நேரம் வேலை செய்ய முடியும் என்பதே உண்மை.

    Friday 22 October 2010

    தூக்கம்!



    அன்று எனக்கு 24 மணி நேரப்பணி. அதாவது காலையில் 7.00 மணிக்கு ஆரம்பித்தால் அடுத்த நாள் காலை 7.00 மணிவரை உள்ள  நோயாளிகளை நாம்தான் பார்க்க வேண்டும். பகல் வேலைகள் முடிந்து இரவு  மருத்துவமனைக்கு உள்ளேயே இருக்கும் ஓய்வறைக்குச் சென்றேன்.
    பிரசவ வார்டு அருகில் குழந்தை எப்போது பிறக்கும் என்று எதிர்பார்ப்புடனும், பிறந்த குழந்தையின் உறவினர்கள் என்றும் பலர் ஆங்காங்கே வெறும் தரையில் துணியை விரித்தும், துணியை விரிக்காமல் கைலி, வேட்டியையே போர்த்திக் கொண்டும் தூங்க ஆரம்பித்திருந்தனர்.  கொசுக்களை விரட்ட அவர்களின் அருகில் கொசுவர்த்திச் சுருள்களும் ஆங்காங்கே புகைந்து கொண்டிருந்தன.
    இதைப் பார்த்த எனக்கும் பாவமாகவும் இருந்தது. இந்தக் கொசுக்கடியில் குளிரில் வெறுந்தரையில் எப்படி நிம்மதியாகத் தூங்குகிறார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது.  குழந்தை பிறந்த சந்தோசத்தில் பலரும் சிரித்துப் பேசிக்கொண்டும் இருந்தனர். பணம், வசதி இல்லாத  சூழ் நிலையிலும் இவர்கள் எப்படி மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் என்று எண்ணிக் கொண்டே அறை நோக்கிச் சென்றேன்.
    ஏனோ சில நாள் முன்பு என்னுடன் படித்த மருத்துவ நண்பர்” மனம் விட்டுச் சிரித்தே ரொம்ப நாள் ஆகிறது என்று வருத்தத்துடன் பேசியது நினைவுக்கு வந்தது.
    அறைக்குள் சென்று தொலைக்காட்சியை உயிர்ப்பித்தேன். ஏசி ஓடிக் கொண்டிருந்தது. அவ்வளவு பெரிய அறையில்  நான் மட்டும். வெளியில்  தரையில் படுத்திருந்தோர்  நினைவு வந்தது.
    கொஞ்ச நேரத்தில் ஒரு விசம் குடித்த பெண்ணைத் தூக்கிக் கொண்டு பத்துப் பேர் வந்தனர். மருத்துவமனை ஊழியர் வந்து சொன்னார். சென்று பார்த்து சிகிச்சையை ஆரம்பித்தேன். அறைக்குத் திரும்பலாம் என்று எண்ணிய போது பாம்பு கடித்த இளைஞன் ஒருவனை ஆட்டோவிலிருந்து இறக்கினர். அவனது இரத்தத்தை சோதித்துப் பார்த்து  மருந்துகளைத் தொடர்ந்து ஏற்றிக் கொண்டிருந்தோம். வைரஸ் காய்ட்ச்சல் நேரமாதலால் நடு நடுவே காய்ச்சல் வந்தோர் தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர்.
    இவர்களுக்கு சிகிச்சை செய்து கொண்டிருக்கும் போது போலீஸ் வண்டி ஒன்று வந்து நின்றது. டாஸ்மாக்கில் தண்ணியடித்து விட்டு வண்டியோட்டியதாக நான்கு ஆட்களை வண்டியிலிருந்து இறக்கினார்கள்.  நான்கு பேருடனும் மல்லுக்கட்டி குடிபோதைச் சான்றிதழ்  எழுதிக் கொடுத்தேன். நால்வரையும் அள்ளிப் போட்டுக் கொண்டு வண்டி கிளம்பியது.
    சரியென்று அறைக்குள் வந்து படுக்கையில் படுத்தேன்.  உடல் அசதி கண்ணைப் பொத்தியது. அறைக்குள் வந்து 10 நிமிடம் தான் ஆகியிருந்தது.  கதவைத் தட்டும் சத்தம். கேட்டது. எழுந்து கதவைத் திறந்தேன்.அட்டெண்டர் “ அய்யா! ஆக்சிடென்ட் கேஸ்! சீரியசாக  மூன்று பேரை ஆம்புலன்சில் கொண்டு வந்திருக்கிறார்கள். சீக்கிரம் வாங்கையா! என்றான்”. பரபரப்புடன் கதவைத் திறந்து வந்தேன். மணியைப் பார்த்தேன். அட!  இரண்டு மணி!
    அவசர் சிகிச்சைப்பிரிவை நோக்கி அவசரமாக நடந்தேன்!
    வழியில் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர்.

    Saturday 16 October 2010

    சரி! விடுங்க! நம்ம நேரம்!!

    image

    ஒரு  வாரம் முன்பு சாயங்காலம் 6 மணி இருக்கும்! அன்று  சனிக்கிழமை. வானம் சற்று மேகமூட்டமாக இருந்தது.

    அந்த நேரத்தில் திடீரென்று சதுரங்கம் சொல்லித்தர என்னைச் சேர்த்து விடு என்று மகள் அடம் பிடிக்க ஆரம்பிக்கவும் வானம் இடி மின்னலுடன் குமுறவும் சரியாக இருந்தது. சனி, ஞாயிறு இரண்டு நாட்கள்தான் பயிற்சி வகுப்புகள்!  ஒரு வாரமாக வீட்டில் சொல்லி வருவதால் இன்று கிளம்பாவிட்டால் வீட்டில் குமுறி விடுவார்கள் என்பதால் சரி வருவது வரட்டும் என்று காரை எடுத்து விட்டேன்.

    அதுவரை தூறிக் கொண்டிருந்த மழை காரைப் போர்ட்டிகோவிலிருந்து வெளியே எடுத்தவும் முழுவீச்சில் கொட்ட ஆரம்பித்தது.

    சும்மாவே ஏழரை! மழை,இடியைக் கண்டவுடன் சும்மா இருப்பானா ஈ.பி.(E.B)? கரண்டைக் கட்டிங் போட்டுவிட்டான்.  சரி! இன்னைக்கி சகுனம் நல்லாத்தான் இருக்கு ! என்று எண்ணிக்கொண்டு “ வீட்டம்மாவிடம்” நாளைக்கு …. என்று சொல்ல ஆரம்பிக்கும் போதே அவரின் முகம் போன கொடூரத்தில் வார்த்தைகள் தொண்டையில் சிக்கிக் கொள்ள பயந்து வண்டியை எடுத்து விட்டேன்.   

    சரி! அட்ரஸ் என்னம்மா? என்று கேட்டேன். ”சுப்பிரமணிய புரம் நாலாவது தெருதான் வடக்குப் பக்கமா தெற்குப்பக்கமா என்று தெரியவில்லை போங்க பார்த்துக் கொள்ளலாம்” என்று வீட்டம்மாவிடமிருந்து  அசால்டாக பதில் வந்தது.

    நம்ம ஊரில் எந்தக் கிறுக்கன் பேர் வைத்தான் என்று தெரியவில்லை, சுப்பிரமணியபுரத்தை இரண்டாக வகுந்து முதல் வீதி  வடக்கு, முதல் வீதி தெற்கு  என்று வரிசையாக ஏழு, எட்டுத் தெருக்களுக்கு   மொத்தமாகப் பேர் வைத்து விட்டான்.( நம் போல் தேடுகிறவனுக்குத்தானே சிக்கல் தெரியும்…)

    நம்ம திறமை நமக்குத்தானே தெரியும் .பகலிலேயெ பசுமாடு…. கேஸ் நம்ம!  சரி! என்று  தைரியமாக வண்டியை எடுத்துவிட்டேன். வெளியே நல்ல இருட்டு. கார் கண்ணாடிகளிலோ நல்ல கருப்பு கூலிங் ஒட்டியிருந்தது.. பார்த்தீர்களா… எவ்வளவு சோதனை என்று. குருடன் வண்டியோட்டியதைப் போல் குத்து மதிப்பாக ஹெட்லைட் வெளிச்சத்தில் ஒட்டிக்கொண்டு போனேன்.  நாலாவது வீதி வந்து விட்டது.

    ஏதாவது அடையாளம் உண்டா? என்று மனைவிடம் கேட்டேன். பார்க்குக்கு எதிர் வீடு, செஸ் சொல்லித் தரப்படும் என்று வெளியே போர்டு இருக்குமாம் என்று பதில் வந்தது.

    நமக்குத் தெரிந்து புல்லே இந்த ஏரியாவில் இல்லையே! பார்க் ஏது? என்று குழப்பத்துடன் வண்டியை உருட்டிக் கொண்டு போனேன். அது தவிர பார்கெல்லாம் நம்ம ஊரில் பிளாட் போட்டு விற்று விடுவார்கள்!  ஒரு நாலு கிரவுண்ட் இடம் காலி காம்பவுண்டாக இருந்தது. காரை நிறுத்தினேன்.  உள்ளே பொட்டல், நாலு சிமிண்ட் பென்ச் இருந்தது. இதுதான் பார்க்கோ? குழப்பத்துடன் எதிரில் இருந்த வீட்டைப் பார்த்தேன். 

    நல்ல வேளையாக எதிரில் இருட்டில் ஒரு நபர்  மரத்துக்குக் கீழ் நின்றிருந்தார். அந்த வீட்டில் போர்டும் இல்லை

    “ சார்! பார்க் இதுதானா? “ என்றேன்.

    ”ஆமாம்! என்ன வேண்டும்?” என்றார். பார்க்குக்கு எதிர் வீட்டில் செஸ் சொல்லித்தருகிறார்களாமே? “ என்றேன்.

    ”எத்தனாவது வீதி?” என்றார்.

    சுனா.புரம் 5 வது வீதி என்றேன்.

    அப்படியா? இது 4 வது வீதி, நீங்க அடுத்த தெருவில் போங்க! ஒரு வீட்டில் வெளியில் போர்டு தொங்கும்” என்றார்.( ஆபத்தில்கூட கடவுள் வழி சொல்ல நமக்கு இந்த மழை இருட்டில் ஒரு ஆளை நிறுத்தி இருக்கிறாரே! என்னே உன் திரு விளையாடல்! என்று எண்ணிக்கொண்டு)  அந்த  ஆபத்பாந்தவனுக்கு  நன்றி சொல்லிவிட்டு அடுத்த தெருவுக்குப் போனேன்.

    அவர் சொன்னது போல் போர்டுடன் வீடு!  அருகில் போய்ப் பார்த்தால்( கொட்டும் மழையில் குடையை வேறு விட்டுவிட்டு வந்து விட்டேன்) “ இவ்விடம் சமஸ்கிருதம் சொல்லித் தரப்படும் என்று போர்டு தொங்கியது. பக்கத்தில் ஒரு கடை!

    அதில் “இங்கு செஸ் சொல்லித் தருகிறார்களா? என்றேன்.

    இல்லையே! பாட்டுதான் சொல்லித்தருகிறார்கள் என்றான் அந்தக் கடை ஆசாமி!

    அடையாளம் பார்க்குக்கு எதிரில் 5 வது தெருங்க என்றேன் .

    சார்! என்ன நீங்க, இது 4 வது வீதி, பார்க்கெல்லாம் இங்கு இல்லை! அடுத்த தெருவுக்குப் போங்க, என்று நான் முதலில் தேடிய தெருவைக் காண்பித்தான்.  

    ஒருத்தனுக்கும் தெரியவில்லையே! என்று குழப்பத்துடம் அந்தத் தெருவில் அலைந்து விட்டு மறுபடி முதலில் போன தெருவுக்குப் போய்ப் பார்க்குக்கு எதிர் வீட்டில் பார்த்து விடுவோம் என்று காரை விட்டு இறங்கினேன்.

    வழி சொன்ன அன்பு நண்பர் “ என்ன சார்? கண்டு பிடிக்கலையா?” என்றார்.

    ”இந்த வீடா இருக்குமா? ஏனெனில் 5 வது வீதி இதுதானாம் என்றேன்.”

    அப்படியா? ஒரு மணி நேரமா நிற்கிறேன், குழந்தைகள் யாரும் இங்கு வரவில்லையே! என்றார்.

    சரி சார் இருங்க உள்ளே பார்ப்போம்! என்று காமபவுண்டுக்குள் மழையுடன் உள்ளே நுழைந்தேன்.

    “இங்கு செஸ் சொல்லித் தரப்படும்” என்று சார்ட் பேப்பரில் எழுதில் வெளியில் இருந்து பார்த்தால் தெரியாதபடி கதவில் தொங்க விட்டிருந்தார்கள்.

    வெளியில் நின்றிருந்த நண்பரிடம் கோபத்துடன் திரும்பினேன்.

    சாரி! சார், நான் வாக்கிங் போக பார்க்குக்கு வந்தேன். சும்மா மழைக்கு ஒதுங்கினேன். இதுதான் 5 வது வீதியா? நான் ஒரு வருடமாக வாக்கிங் வருகிறேன், 4 வது வீதின்னு நினைத்துக் கொண்டிருந்தேன்” என்றார்.    

    எனக்கு வந்த கோபத்தில்…….

    சரி! விடுங்க! நம்ம நேரம்!!

    Tuesday 12 October 2010

    ஜெரி ஈசானந்தாவுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்!

    அன்பின் நண்பர்களே!

    இன்று பிரபல பதிவர், மதுரை தந்த பாசக்காரப் பதிவர், மதுரை மண்ணின் மைந்தர் ஜெரி ஈசானந்தாவுக்குப் பிறந்த நாள்!

    மதுரை வலைப்பதிவர் குழுமம் சார்பாகவும் என் சார்பாகவும் அவர் எல்லா நலனும் பெற்று நூறாண்டு வாழ வாழ்த்துகிறேன்!

    http://jerryeshananda.blogspot.com/

    பல ஞானிகளைப் போட்டோ எடுத்தால் படங்களில் சிலர் உருவம் தென்படாது என்று சொல்லுவார்கள்!

    சமீபத்தில் இவரை எடுத்த போட்டோவில் இவர் தலையைச் சுற்றி ஒளி வட்டம் தோன்றியதைக் கண்டு மதுரைக் குழுமமே வியந்து நின்றது.

    இதோ அந்த போட்டோ!

    எச்சரிக்கை! ரொம்பக் கூர்ந்து பார்க்கக் கூடாது! சொல்வதைக் கேட்காமல் ஆராய்ச்சியில் ஈடுபடுவோர்க்கு பார்வைக் கோளாறு ஏற்பட்டால்  நானோ குழுமமோ பொறுப்பல்ல!

     Jeri photo

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்     ஜெரி !

    image

    ஜெரியை வாழ்த்துவோர் கீழேயுள்ள இனிப்பை எடுத்துச் செல்லலாம்!!

    image

    தேவா.

    Tuesday 5 October 2010

    இந்தியா அபார வெற்றி!

    image

    இந்தியா ஒரு நாள் போட்டியில் வெல்வதைப்பார்த்திருப்பீர்கள்!

    20/20 ல் வெல்வதைப் பார்த்திருப்பீர்கள்!

    இன்று முடிந்த இந்தியா ஆஸ்திரேலியா முதல் 5 நாள்  போட்டி போல் பார்த்திருக்க முடியாது.

    காலையில் விளையாட் ஆரம்பித்ததில் இருந்து ஆரம்பித்த பதட்டமும் என்ன நடக்குமோ என்ற ஆர்வமும் கடைசி வரை இருந்தது.

    பாராட்டப்பட வேண்டிய வீரர் வி.வி.எஸ் லக்ஷ்மண்தான் ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்த வேளையில் 73 ரன்களை 78 பந்தில்  மன உறுதியுடன் அடித்திருக்கிறார். 

    அத்துடன் வி.வி.எஸ் இடுப்புப் பிடிப்புடன் இன்று விளையாடினார். இஷாந்த் ஷர்மா முட்டிக் காயத்துக்கு ஊசி போட்டுக்கொண்டு வந்தார்.

    வாழ்த்துகள் வி.வி.எஸ்!

    Sunday 3 October 2010

    வெற்று கலோரி-EMPTY COLORIES –என்றல் என்ன?

    empty-calories[1]

      நாம் தினமும் புதுப்புது வார்த்தைகள், சொற்களை ஆங்கிலக் கட்டுரைகளில் பார்க்கிறோம்.  அந்த வார்த்தைகளைத் தமிழில் அறியச் செய்வது மிக அவசியம். “வெற்றுக்கலோரி உணவு” என்ற சொல்லும் அப்படித்தான். Empty clories அல்லது வெற்றுக்கலோரி உணவு என்றால் என்ன?

    வெற்றுக்கலோரி உணவு என்பது அதிக கலோரியும் குறைந்த அத்தியாவசிய நுண் சத்துக்களும் கொண்ட உணவு ஆகும்.

    வெற்றுக்கலோரி உணவுகளில் சில::

    • வறுத்த, பொரித்த கோழி
    • சிப்ஸ்
    • எண்ணெயில் பொரித்த உணவுகள்
    • துரித உணவு வகைகள்
    • மிட்டாய், பதப்படுத்தப்பட்ட இனிப்புகள்,ஐஸ்கிரீம்
    • பீர், வொயின், இதர மது வகைகள்
    • வெள்ளை கோதுமை ரொட்டி, அரிசி சாதம்
    • வெண்ணை, நெய்

    மாறாக,

    1225684_f520[1]

    • பொரித்த உணவுக்கு பதில் அவித்த உணவுகள்- அவித்த தோலில்லாத கோழி, அவித்த காய்கறிகள்
    • இனிப்பான குளிர்பானங்களுக்கு பதில்  புதிய இனிப்பு சேர்க்காத பழச்சாறுகக்
    • முழு தானிய ரொட்டிகள், முழு தானிய உணவுகள்- இவற்றில் நார்ச்சத்து மற்றும் நுண் சத்துகள் அதிகம் உள்ளன.
    • கொறிக்கும் உணவுகளூக்கு பதில் பழங்க்களைச் சாப்பிடலாம்.

    Friday 1 October 2010

    இன்சுலின் போடலாமா?

    இன்றைய சர்க்கரை நோயாளிகளிடம் உள்ள பல் சந்தேகங்களில் மிக முக்கியமான ஒன்று மருத்துவர் இன்சுலின் போடச் சொல்கிறார். போடலாமா வேண்டாமா? என்பதுதான்.

    • நான்தான் சர்க்கரையையே சேர்த்துக்கொள்வதில்லையே!
    • தொடர்ந்து நடைப்பயிற்சி செய்கிறேனே?
    • உணவுக் கட்டுப்பாட்டை தீவிரமாகக் கடைப்பிடிக்கிறேனே,
    • வேப்பிலைக் கொழுந்து, குறிஞ்சாக்கீரை, நாவல்பழக் கொட்டைப்பொடி, பாகற்காய் ஆகியவற்றைத் தினமும் சாப்பிடுகிறேனே!

    இவ்வளவு செய்து நான் தெம்பாக இருக்கிறேன். மருத்துவர் இன்சுலின் போடச் சொன்னாலும் நான் இந்த வழிகளில் சர்க்கரையைக் குறைத்துக் கொள்கிறேன். முன்பு எழுதிக் கொடுத்த மாத்திரைகளையே தொடர்ந்து சாப்பிடப் போகிறேன் என்று கூறுவோர் உண்டு.

    மெல் சொன்னபடி நிறையப் பேர் குழம்பி இருப்பார்கள். யாருக்கு இன்சுலின் அவசியம்? என்று பார்ப்போம்.

    1. முதல் வகைச் சர்க்கரை நோய் உள்ளவர்கள்- முதல் வகைச் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்குப் பிறவியிலேயே இன்சுலின் சுரக்கும் பீட்டா செல்கள்      image கணையத்தில் இல்லாது இருப்பதால் கணையம் இன்சுலினைச் சுரக்காது. ஆகையினால் இன்சுலினைத் தேவையான அளவு போட்டுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை 
    2. இரண்டாம் வகைச் சர்க்கரை நோயாளிகளுக்கு மாத்திரையானது சர்க்கரையைக் குறைக்க முடியாத நிலை ஏற்படும்போது- இரண்டாம் வகை நீரிழிவு நோயில் பீட்டா செல்களின் இன்சுலின் சுரக்கும் சக்தி குறையும் மற்றும் பீட்டா செல்களின் எண்ணிக்கையும் குறைய ஆரம்பிக்கும்.
    3. அவசர நோய் சிகிச்சையின் போது இரத்த சர்க்கரை அளவானது அதிகம் இருந்தால் இன்சுலின் போட்டுக் குறைக்க வேண்டும்.
    4. சர்க்கரை நோயினால் உடலில் உள்ள பல உறுப்புகள் செயலிழக்க ஆரம்பிக்கும். சிறுநீரகங்க்கள் பாதிப்பு ஏற்பட்டால் இன்சுலின் போட வேண்டி வரும்.
    5. சர்க்கரை  நோய் உள்ள பெண் கர்ப்பம் தரித்தால் இன்சுலின் மூலம் சர்க்கரையைக் குறைக்க வேண்டும்.
    6. இருதய அறுவை சிகிச்சையின்போது. அதன் பிறகும் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் கொண்டுவர.
    7. கண்ணுக்கு லேசர் அறுவை செய்துகொண்ட  சர்க்கரை நோயாளிகளுக்கு.
    8. பத்து வருடங்களுக்கு மேல் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பொதுவாக மாத்திரைகளால் சர்க்கரையை குறைக்க இயலாது என்பதால்!]

    எனவே பிறவியிலேயே  சர்க்கரை நோய் இல்லாதவர்கள் தகுந்த உட்ற்பயிற்சி உணவு முறை மூலம்  சர்க்கரை நோயிலிருந்து காத்துக்கொள்வதே சிறந்தது.

    Tuesday 28 September 2010

    டீன் ஸ்டார்-ஜஸ்டின் பீபர் !

    image

    சென்னையில் பள்ளிக்கூடப் பிள்ளைகளிடம் கேளுங்கள, அவர்களின் மனதுக்குப் பிடித்த பாடகர்கள் யாரென்று?  ஜஸ்டின் பீபரின் பெயர் கட்டாயம் அதில் இருக்கும்.

    ஜஸ்டின் பீபர் என்ற இந்தப் பெயர் ஆங்கிலப் பாடல் உலகில் பிரசித்தம். எனக்கோ உங்களுக்கோ பீபரைத் தெரியவில்லையெனில் நமக்கு வயதாகி விட்டது என்றுதான் அர்த்தம்! ஏனெனில் பீபர் பிறந்ததே கனடாவில் 1994ல் தான்.

    தந்தையால் பிறந்தவுடன் கைவிடப்பட்ட தன் அம்மாவுக்கு 18 வயதில் பீபர் பிறந்து விட்டான். தந்தையால் கைவிடப்பட்டாலும் அவனுள் புதைந்திருந்த  வீரியம் அவனைக் கைவிடவில்லை. 12 வயதில் சின்ன இசைப்போட்டியில் கலந்து இரண்டாம் இடம் பெற்ற அவன் வீடியோக்களை அவன் அம்மா மேல்லெட் யூடியூபில் போட்டார். அப்புறமென்ன?

    அவன் யூடியூப் வீடியோக்கள் ஸ்கூட்டர் பிரான் என்ற மார்க்கெட்டிங்க் மந்திரவாதியின் பார்வையில்பட 13 வயதில் அட்லாண்டா பறந்தான்.

    image

    அவன்  பாடிய முதல் பாட்டேOne Time" “ஒரு முறை”  கனடா டாப் 12 ல் வந்துவிட்டது. அதிர்ஷ்ட தேவதை அவசரகதியில் அவனைத் தழுவிக்கொள்ள பீபர் ஆங்கில இசையுலகின் இளவரசனாகிவிட்டான்.

    2010ல் அவனுடைய பாடல்கள் உலகெங்கிலும் பெரும் வெற்றியைப் பெற்றன."Baby" பேபி என்ற அவனுடைய ஆல்பம் யூடியூபில் மிகவும் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோவாகியது.

    ஸ்டீவ் வொண்டருக்கு அடுத்து மிக இளம் வயதில் புகழின் உச்சியை அடைந்தது ஜஸ்டின்தான்!

    புகழின் உச்சியில் இருக்கும் நட்சத்திரங்களைப்பற்றி பொய்ச்செய்திகள் பரப்பப்படுவது வாடிக்கை! ஜஸ்டினும் அதற்கு விலக்கல்ல!

    அடிக்கடி ஜஸ்டின் இறந்துவிட்டதாகப் புரளிகள் கிளப்பிவிடப்பதும் அவற்றில் உண்டு!

     Justin Bieber Died - Biebs is Dead?

    Is Justin Bieber dead? Did Fox News report Justin Bieber died?

    ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து பாப் பாடல் உலகில் புகழின் உச்சியில் இருக்கும் ஜஸ்டின் பீபர் கண்டுபிடிக்கப்பட்டது யூடியூபில்தான்.

    என்ன இளைஞர்களே! உங்கள் பாடல்களை யூடியூபில் ஏற்றத்தயாராகி விட்டீர்களா?

    Saturday 25 September 2010

    குழந்தை-தாய்ப்பால்-H1N1!

    image

    ஆறுமாதத்துக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடலாமா?                                                                                                

    • போடுவதில்லை.குழந்தைகளை நோய் தாக்காமல் பாதுகாப்பாக வைத்திருத்தல் அவசியம். கர்ப்பிணித் தாய்க்கு அளிக்கப்படும் தடுப்பூசியே பிறக்கும் குழந்தைக்குப் போதும். 

    பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி போடப்பட்ட தாய் பாலூட்டலாமா?                                                                                           

    • பாலூட்டலாம். தாய்க்குப் போடும் தடுப்பூசி அவருக்கு வரும் நோயிலிருந்து காப்பதுடன் தாய்ப்பால் வழியாக குழந்தைகளுக்கும் தடுப்பாற்றல் கிடைக்கிறது.

    தாய்க்கு பன்றிக்காய்ச்சல் வந்தால் பாலூட்டலாமா?

    • தாய்க்கு பன்றிக்காய்ச்சல் வந்தால் தாயின் உடலில் அதற்கான எதிர்ப்பு ஆன்டிபாடிகளை உருவாக்கும். தாய்ப்பாலில் அந்த ஆன்டிபாடிகள் மட்டுமே இருக்கும். நோய்க்கிருமி வைரஸ் இருக்காது. ஆகையினால் தாய் நோயுற்றிருந்தாலும் பாலை சுத்தமான முறையில் சேகரித்து பாட்டிலின் மூலம் கொடுக்கலாம்.

    பன்றிக்காய்ச்சல் நோய்க்கு மருந்து சாப்பிடும்போது தாய்ப்பால் கொடுக்கலாமா?

    • தாய் நோயால் பாதிக்கப்பட்டால் குழந்தையை அவர் இருமுதல்,தும்முதல் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க வேண்டும். ஏனெனில் அவற்றின் மூலம் நோய் பரவலாம். ஆகையினால் தாயின் பாலை சேகரித்துக் கொடுக்கலாம்.

    குழந்தைக்குப் பன்றிக்காய்ச்சல் வந்தால் தாய்ப்பால் கொடுக்கலாமா?

    • குழந்தைக்கு பன்றிக்காய்ச்சல் வந்திருந்தாலும் தாய்ப்பால் கொடுக்கலாம். எந்த நிலையிலும் தாய்ப்பாலைப்போலச் சிறந்த உணவு குழந்தைக்கு வேறெதுவும் இல்லை!.

    --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

    பன்றிக்காய்ச்சல் சாதாரண சளி வித்தியாசங்கள்!

    அன்பு நண்பர்களே! பன்றிக்காய்ச்சல் பயம் மறுபடியும் பரவியுள்ளது. பன்றிக்காய்ச்சலில் இருந்து சாதாரணக்காய்ச்சலை எவ்வாறு அடையாளம் காண்பது என்பது பற்றி சில கருத்துக்களை உங்களுடன் பகிர்கிறேன்.

    மேலும் படிக்க!

    -----------------------------------------------------------------------------------------------============================================================                                                                                                                                  பன்றிக் காய்ச்சல்- காத்துக்கொள்ள-14 !!                                                                                                                   பன்றிக்காய்ச்சலிலிருந்து நம்மைக் காத்துக்கொள்வது எப்படி? என்பதே இப்போதைய முக்கியமான கேள்வி. அதைப் பற்றிப் பார்ப்போம்.                                                                                          மேலும் படிக்க!                                                                                      

    ------------------------------------------------------------------------------------------------------------------------

    Friday 24 September 2010

    பன்றிக்காய்ச்சலிலிருந்து குழந்தைகளைக் காக்க!

    Sleeve sneeze poster clip_image002

    குழந்தைகளைப் பன்றிக்காய்ச்சலிலிருந்து காக்க என்ன செய்யலாம்? சில எளிய சுகாதார விசயங்க்ளை அவர்கள் கடைப்பிடித்தால் போதும்.

    குழந்தைகளை அடிக்கடி கைகளை சுத்தமாகக் கழுவச் சொல்லவும்

    • விளையாடி விட்டு வரும் போது,
    • வெளியிலிருந்து வரும்போது,
    • கடைகளுக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வரும்போது
    • அதிக மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களுக்குச் சென்று திரும்பும்போது
    • எஸ்கலேட்டர், லிஃப்ட் ஆகியவற்றில் அதிகம் கிருமிகள் இருக்கும். அதில் உள்ள கைப்பிடிகள், கதவுகளில் நம் கை படும்போது நிச்சயம் கிருமிகள் நம் கையில் தொற்றும்.
    • ஆட்கள் கூடும் இடத்தில் யாரும் தும்மினாலோ, இருமினாலோ நம் குழந்தையின் மூக்கையும் வாயையும் கைக்குட்டையால் மூடிக்கொள்ளவும்.
    • குழந்தைகள் அவர்கள் தும்மும் போது  திசுத்தாள்  ( TISSUE PAPER ) இல்லையெனில் கைகளில் தும்மாமல் முழங்கைப்பகுதியில் தும்மவோ இருமவோ செய்யலாம்.
    • உங்கள் பகுதியில் பன்றிக்காய்ச்சல் முன்னரே பலருக்கு இருந்தால் குழந்தைகளை வெளியில் கூட்டிச் செல்ல வேண்டாம்.
    • உங்கள் குழந்தை படிக்கும் பள்ளிக்கூடத்தில், விடுதியில் குழந்தைகளுக்குத் தொடர் காய்ச்சல் இருந்தால் உடனடியாக பள்ளி நிர்வாகியிடம் பேசி தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும்.
    • உங்கள் பகுதியில்  இந்த வியாதி பரவுதல் பற்றி செய்திகளைத் தொடர்ந்து படித்து விழிப்புணர்வுடன் இருக்கவும்.
    • உங்கள் குழந்தைக்கு இந்த வியாதி பற்றி விளக்கமாகச் சொல்லவும். அதைத் தடுப்பதற்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகளை அவர்களுக்குப் புரிய வைக்கவும்.
    • கைகளால் மூக்கு,வாய்,கண் ஆகிய பகுதிகளை அடிக்கடி தொடக்கூடாது..
    • குழந்தைகளுக்குத் தனியாகத் துடைக்கும் துண்டு, சோப் ஆகியவற்றை வைக்கவும்.  
    • நல்ல சத்தான உணவு மிகவும் அவசியம்.
    • குழவ்தைகஃள் தவறாது உடற்பயிற்சி செய்வதும் நல்லது.

    குழந்தைகளின் கைகளைக் கழுவ சோப்பு இல்லாவிட்டால் கைகழுவும் திரவம் வாங்கி பையில் வைத்திருக்கவும். அடிக்கடி அத்திரவத்தால் குழந்தைகளின் கைகளைத் துடைத்து விடவும்.

    Thursday 23 September 2010

    முட்டை உண்பவர் அறிய வேண்டியவை-5

    முட்டை நம் உணவில் முக்கியமானது. கறி,மீன் விரும்பி உண்ணாதவர்கள் கூட முட்டையை விரும்பிச் சாப்பிடுவார்கள்!

    முட்டையிலிருந்து கோழி வந்ததா? இல்லை கோழியிலிருந்து முட்டை வந்ததா? என்பதெல்லாம் விஞஞானிகளின் தலையைப் பிய்த்துக்கொள்ளும் வேலை. நமக்கு அது வேண்டாம்

    கோழியால் பறவைக்காய்ச்சல் வந்தது! அது போல் முட்டையால் வியாதி எதுவும் வருமா? வரும்! அதைப் பற்றிக்கொஞ்சம் பார்ப்போம்.

    நம் ஊரில் முட்டை வாங்கினால் கோழி முட்டையின் மேல் கோழியின் கழிவு அப்படியே ஒட்டியிருக்கும், பார்த்திருப்பீர்கள். நோயுள்ள கோழியின் கழிவில் உள்ள கிருமி  சரியாகக் கழுவாமல்  முட்டையை உடைப்பதால் முட்டைக்குள் சென்று நோயை உண்டாக்குகிறது என்றுதான் நம்பிக்கொண்டிருந்தார்கள். ஆனால் உடையாத முட்டையிலிருந்தும் நோய் பரவுமாம்.

    1. கோழிமுட்டையிலிருந்து நோய் எப்படிப் பரவுகிறது?                                                                                           அ. உடைந்த கோழி முட்டை மூலம், உடையாத முட்டையில் சிறு துவாரங்கள் உள்ளன- அவற்றின்மூலம் கிருமி உள்ளே சென்றிருந்தால்,  நோயுள்ள கோழியின் வயிற்றில் முட்டை உருவாகும் போதே!   
    2. நோய்க்கிருமியின் பெயர் என்ன?                                                                                                   சால்மனெல்லா  (Salmonella Enteritidis )
    3. சால்மனெல்லா நோயுள்ள கோழிமுட்டையால் என்ன விளைவுகள் ஏற்படும்?                                                                                             உண்ட 12-72 மணி நேரத்தில்  காய்ச்சல், வாந்தி,அடிக்கடி மலம் போதல், வயிற்று வலி ஏற்படும். 4 லிருந்து 7 நாட்களுக்கு இந்த வியாதி இருக்கும். சாதாரணமாக நோய் எதிர்ப்பு மருந்துகள் இதற்க்குப் போதும்.
    4. இந்த நோய் வராமல் காத்துக்கொள்வது எப்படி?                                                                                                   முட்டையை குளிர்பதனப்பெட்டியில் பாதுகாக்கவும். உடைந்த முட்டையை உண்ண வேண்டாம். முட்டையை நன்கு வேக வைத்துச் சாப்பிடவும். 2 மணி நேரத்துக்கு மேல் முட்டையை குளிர்பெட்டியிலிருந்து அறையில் வெளியில் வைக்க வேண்டாம்.  பச்சை முட்டை சாப்பிட வேண்டாம்.  
    5. சால்மனெல்லாவால் யார் யாருக்கு ஆபத்து?            குடலை முதலில் இது பாதிப்பதால் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. இது இரத்தத்தில் கலந்தால் ஆபத்து. குழந்தைகள், வயதானவர்கள், கல்லீரல் வியாதி உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை இது கடுமையாக பாதிக்கும்.

    ____________________________________________________________

    ************************************************************************************************

      ஜிடாக்கில் ஒரு அசைவ சாட் !http://abidheva.blogspot.com/2010/08/blog-post_04.html

    புதிய நண்பர் பிரதாப் ஜிடாக்கில் வந்தார். ம்துரை ஓட்டல் முட்டை வடியல் பற்றிப் பேசும்போது தமிழ்நாட்டில் முட்டையின் பல்வேறு வகைகளைச் சொன்னார். ஆச்சரியமாக இருந்தது. நீங்களும் படித்துப்பாருங்கள்! உங்க ஊர் முட்டையைப் பற்றிச் சொல்லுங்க!

    Prathap: //இங்கு ‘வடியல்’ நன்றாக இருக்கும் என்றார்கள்//

    சில இடங்களில் வழியல் என்பார்கள்

    சென்னையில் ஒரு கடையில் ”டிங்டாங்” என்றார்கள்...

    என்னடா என வாங்கிப்பார்த்தால் இது...

    thevan: முட்டைதானே! எனக்கு சரியாகத்தெரியவில்லை

    . மேலும் படிக்க!!

    *************************************************************************************************

    ____________________________________________________________

    Tuesday 21 September 2010

    தசைநார்த் தேய்வு(Muscular Dystrophy)

            தசைநார்த் தேய்வு என்பது ஒரு மரபியல் நோயாகும். தசைநார்த்தேய்வு நோய் நரம்புகளைத் தாக்காமல் குறிப்பிட்ட தசைகளை மட்டும் படிப்படியாக செயலிழக்கச் செய்யும்.

    • தசை தொடர்ந்து பலமிழத்தல்
    • தசைப் புரதக் குறைபாடுகள்
    • தசைச் செல்கள் அழிவு – ஆகிய மூன்று முக்கிய குறைபாடுகள் இந்நோயில் காணப்படுகின்றன.

    ஏறக்குறைய 30 வகைகள் இவற்றில் இருந்தாலும் இவை ஒன்பது முக்கிய வகைகளாகப் பகுக்கப்பட்டுள்ளன

    Duchenne MD-டுஷென் மஸ்குலர் டிஸ்ட்ரோபி- டுஷன் தசை நார்த்தேய்வு இதில் முக்கியமானது.

    Duchenne de Boulogne- டுஷென்-

    1806-1875 – பிரென்சு நரம்பியல் நிபுணர்-

     clip_image002

    நவீன நரம்பியல் மருத்துவ முன்னோடியான இவர் இந்நோய்

    பற்றி முதலில் ஆராய்ந்து கூறினார். டுஷென் த.தே. தாயின் மரபணுவிலிருந்து ஆண் குழந்தைக்கு வருகிறது. ஆனால் தாய்க்கு இந்த வியாதியின் அறிகுறிகள் இருப்பதில்லை.

    நோயின் அறிகுறிகள்:

    • தசைகள் வலுவிழப்பு விரைவில் சோர்வடைதல்
    • ஓடுதல், குதித்தல்,படிகளை ஏறுதலில் சிரமம்.
    • உடலை சம நிலைப்படுத்தி நிற்கவோ நடக்கவோ இயலாமை.
    • இந்த நோயில் தசைகள் சிறுத்துப் போதல் பலமிழந்து போதல் உடலில் இருபுறமும் சமமாக இருக்கும்.
    • இந்த நோய் பெரும்பாலும் குழந்தைப் பருவத்திலேயே ஆரம்பித்து விடுகிறது. 2-5 வயதில் இதன் அறிகுறிகள் தோன்றும் தசைகள் சிறுத்து, பலமிழந்து இருப்பதால் இவர்களால் நடக்க இயலாமல் விரைவில் சக்கர நாற்காலி உபயோகிக்கும் நிலைக்கு ஆளாகின்றனர்.
    • டுஷென் த.தே. ஆண்களையே அதிகம் பாதிக்கிறது.
    • இதயம் நுரையீரலும் பாதிப்படைகிறது.
    • முதுகெலும்பு வளைந்து போவது (SCOLIOSIS) ம் ஏற்படுகிறது.
    • இதனால் மூச்சுவிடச் சிரமம் ஏற்பட்டு வென்டிலேட்டர் சுவாசக் கருவிகளின் சிகிச்சைக்குத் தேவைப்படுகிறது.

    பரிசோதனைகள்:

    1. எலக்ட்ரோமயோகிராபி பரிசோதனைகள்
    2. இரத்தத்தில் கிரியேட்டினின் கைனேஸ் அதிகமாக இருத்தல்.
    3. ஜீன் பரிசோதனைகள்.

    ஆகியவற்றைக் கொண்டு இந்த நோயைக் கண்டறியலாம்.

    இந்த நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

    இந்தியாவில் அதிக அளவில் (கால் மில்லியன்) குழந்தைகள் பாதிக்கப்பட்டிருந்தாலும் மக்களிடம் விழிப்புணர்வு போதிய அளவு இல்லை.

    டிஸ்கி:    ஆக்சிலெரான் மருந்துக் கம்பெனி Acceleron Pharma  ACE-031 என்ற புதிய மருந்தை இந்த தசைனார்த்தேய்வு நோயாளிகளிடம் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது. : இது ஆய்வு நிலையிலுள்ள மருந்து. தசை வளர்ச்சிக்கும், தசை வலிமைக்கும் உதவும் என்று நம்பப்படுகிறது.விலங்குகளில் இது தசை வளர்ச்சியை உண்டாக்குவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த மருந்து தற்போது இரண்டாம் கட்ட ஆய்வில் உள்ளது.

    Saturday 18 September 2010

    பன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்!

    அன்பு நண்பர்களே! பன்றிக்காய்ச்சல் பயம் மறுபடியும் பரவியுள்ளது. பன்றிக்காய்ச்சலில் இருந்து சாதாரணக்காய்ச்சலை எவ்வாறு அடையாளம் காண்பது என்பது பற்றி சில கருத்துக்களை உங்களுடன் பகிர்கிறேன்.

    நோய்க்குறிகள்

    சாதாரண சளி பன்றிக்காய்ச்சல் 
    .
    காய்ச்சல் காய்ச்சல் பெரும்பாலும் குறைவு. 80% காய்ச்சல் இருக்கும். 100 டிகிரிக்குமேல் காய்ச்சல் 3-4 நாட்களுக்கு இருக்கும். 
    .
    இருமல் இருமலும் நல்ல சளியும் இருக்கும். சளியில்லாத வறட்டு இருமல் இருக்கும். 
    .
    உடல் வலி உடல் வலி மிதமாக இருக்கும். கடுமையான உடல் வலி பன்றிக்காய்ச்சலில் இருக்கும். 
    .
    மூக்கடைப்பு மூக்கடைப்பு இருக்கும். தன்னாலேயே ஒரு வாரத்தில் சரியாகிவிடும். 
    .
    பன்றிக்காய்ச்சலில் மூக்கடைப்பு அரிது.
    குளிர் நடுக்கம் குளிர் நடுக்கம் பெரும்பாலும் இருக்காது. 
    .
    60% பன்றிக்காய்ச்சலில் பாதிக்கப்பட்டோருக்கு குளிர் நடுக்கம் இருக்கும்.
    உடல் சோர்வு உடல் சோர்வு குறைவாக இருக்கும். 
    .
    உடல் சோர்வு அதிகமாக இருக்கும்.
    தும்மல் தும்மல் சாதாரணமாகக் காணப்படும். 
    .
    தும்மல் பன்றிக்காய்ச்சலில் காணப்படுவதில்லை.
    நோய்க்குறிகள் தோன்றும் காலம். சாதாரண சளி மெதுவாக ஆரம்பிக்கும். சில நாட்களில் அதிகமாகும். இதன் தாக்குதல் உடனே தெரியும்.3-6 மணி நேரத்தில் அதிக காய்ச்சல், உடல் வலி,பலகீனம் ஆகியவை ஏற்படும். 
    .
    தலைவலி சாதாரண சளியில் தலைவலி அதிகமாக இருக்காது. பன்றிக்காய்ச்சலில் தலைவலி மிக அதிகமாக இருக்கும். 80% பேருக்கு தலைவலி இருக்கும். 
    .
    நெஞ்சில் பாரம்,வலி சாதாரண சளியில் நெஞ்சில் வலி, மூச்சுத்திணறல் இருக்காது. பன்றிக்காய்ச்சலில் நெஞ்சு வலி, மூச்சுத்தினறல், நெஞ்சில் கட்டை போட்டது போன்ற உணர்வு ஆகியவை இருக்கும்.
         

    பன்றிக் காய்ச்சலுக்கும் சாதாரண சளிக்கும் உள்ள வித்தியாசங்களை மேலே கொடுத்து இருக்கிறேன். இவை பொதுவானவைதான். இவற்றை 100% எடுத்துக்கொள்ள வேண்டாம். தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே தொகுத்துள்ளேன்!!

    மேலும் பன்றிக்காய்ச்சல்பற்றி அறிய கீழுள்ள என் இடுகைகளைப் படிக்கவும்!

    பன்றிக் காய்ச்சல்- காத்துக்கொள்ள-14 !

    Monday 13 September 2010

    இவர் ஆசிரியர்!

    image

    தலைமை ஆசிரியர் திரு.கருப்பையா- இவர் புதுக்கோட்டை அருகில் நெடுவாசல் என்ற கிராமப் பள்ளியின் தலைமை ஆசிரியர்.

    இவரின் சாதனைகள் ஆச்சரியம் தருபவை! ஆம்! பாழடைந்த பள்ளிக்குப் புதிய கட்டிடம் கட்டியிருக்கிறார்.  பள்ளியில் செடிகளை வளர்த்து தோட்டம் அமைத்திருக்கிறார்.

    இதெல்லாம் சாதாரணம் என்கிறீர்களா? 

    பள்ளியில் கரும்பலகைகளை அகற்றிவிட்டு ப்ரொஜெட்க்டர்கள் வாங்கி பாடமே அதில்தான் நடத்தப்படுகிறது.

    அது தவிர பத்து கணினிகள் இணைய இணைப்புடன் இயங்க்குகின்றன. டி.வி.டியில் பாட சி.டிக்கள் போட்டு மாணவர்கள் படிக்கிறார்கள். கணினியை இயக்குதல், பிரிண்ட் எடுத்தல் எல்லாம் மாணவர்கள் அவர்களே செய்கின்றனர்.

    இவற்றையெல்லாம் இவர் பொறுப்பேற்ற 5 வருடங்களில் செய்திருக்கிறார்.

    இதெல்லாம் செய்த இவர் தற்போது அதே மாவட்டத்தில் வேறு ஒரு பள்ளிக்கு மாறுதல் கேட்கிறார். ஏன்? அறிவொளி நகர் என்ற அந்த இடத்தில் நரிக்குறவர்கள் அதிகம் வசிக்கிறார்கள்.

    அங்குள்ள நரிக்குறவ இன மக்களின் பிள்ளைகளை பள்ளிக்கு வரவழைத்து, கல்வியின் பலனை அவர்களும் அனுபவிக்கச் செய்ய வேண்டுமென்பது இவரின் அடுத்த இலக்கு என்கிறார்!!

    தனிமரம் தோப்பாகாது, நான் ஒருவன் நல்லது செய்தால் உலகமே மாறி விடுமா? என்று தத்துவம் பேசும் நம்மிடையே இவர் ஒரு சாதனையாளராக ஜொலிக்கிறார்.

    இவர் போன்ற நல்லோர்கள் சிறந்த மாணவர்களை  உருவாக்குவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

    கம்பியூட்டருக்கென தனியாக பணம் வாங்கிவிட்டு கம்பியூட்டர் பற்றி மேம்போக்காகப் பாடம் எடுத்து விட்டு ஏமாற்றும் தனியார் பள்ளிகளுக்கிடையில் அரசுப்பள்ளி மாணவர்களை கம்பியூட்டர் வல்லுனர்களாக உருவாக்கும் இவர் நிச்சயம் போற்றத்தகுந்தவர்தானே!

    Saturday 11 September 2010

    டெங்கு காய்ச்சல்

    டெங்கு காய்ச்சல் பற்றி அடிக்கடி செய்தித்தாள்களில் படிக்கிறோம். அதன் சில முக்கிய விபரங்க்களைப் பார்ப்போம்.

    டெங்குவை பரப்பும் ஈடிஸ் கொசு- காலில் வெண்ணிறப் பட்டைகள் இருக்கும்.

    1.டெங்குக் காய்ச்சல் எந்தக்கிருமியால் உண்டாகிறது?

    டெங்கு ஒரு வைரஸால் உண்டாகும் காய்ச்சல் ஆகும். ஈடிஸ் (AEDIS AEGYPTI) என்ற வகைக்(பெண்) கொசு இந்த வைரசைப் பரப்புகிறது.

    2.டெங்குக் காய்ச்சலின் அறிகுறிகள் என்ன?

    • திடீர்க் காய்ச்சல்,
    • தலைவலி,
    • தசைவலி,
    • மூட்டுவலி,
    • கண் பகுதியில் வலி 
    • தோல் தடித்து சிவத்தல் (RASHES)
    • தோலில் இரத்தப் புள்ளிகள் (PETECHIAE)- இவை முதலில் கால்களிலும், நெஞ்சிலும் ஆரம்பித்து சிலருக்கு உடல் முழுதும் பரவும்.
    • வயிற்றுவலி, உமட்டல்,வாந்தி,வயிற்றுப்போக்கு
    • வாந்தியில் இரத்தம் கலந்து வருதல்

    3.தீவிரமான டெங்கு காய்ச்சல் என்ன விளைவுகள் உண்டாக்கும்?

    • அதிக காய்ச்சல்
    • கண்,மூக்கு,வாய்,காது,வயிறு மற்றும் தோலில்இரத்தக்கசிவு

    4.டெங்கு ஷாக் சின்ட்ரோம்-என்றால் என்ன?

    • டெங்கு இரத்தக் கசிவினால் இரத்தத்திலிருக்கும்  நீரானது இரத்தக்குழாயிலிருந்து கசிந்து நுரையீரல் மற்றும் வயிற்றைச் சுற்றித் தேங்கும். இன்னிலையில் உயிரிழப்பு அதிகம்.

    5.டெங்குவை கண்டறிய  இரத்தப் பரிசோதனைகள் எவை?

    • இரத்தத்தில் பிளேட்லெட்டுகள் குறைதல் <100,000
    • பி.சி.ஆர் ( P C R ) பரிசோதனை

    6.டெங்கு வருவதைத் தடுப்பது எப்படி?

    • கொசு உருவாகும் இடங்களான உபயோகமற்ற டிரம், டயர்,பாட்டில் ஆகியவற்றை அகற்றுதல்
    • சாக்கடை நீர் தேங்காது சுத்தப்படுத்தல்
    • கொசு மருந்தடித்தல்

    Saturday 4 September 2010

    தட்டம்மை(MEASLES)

    தட்டம்மையும் வைரஸ் கிருமியால் வரும் தொற்று நோய்தான்.

    தொற்றுவழிகள்:

    • தும்முதல்,இருமுதலால் எச்சில் தெரிக்கப்படுவதால்.
    • ஒரே வீட்டில் வசிப்போருக்கு
    • நேரடித் தொடர்பின் மூலம்.

    நோய் எதிர்ப்பு சக்தி குறைவாய் உள்ளோருக்கு மிக எளிதில் பரவுகிறது.

    நோய்காப்புக்காலம்:(INCUBATION PERIOD):

    • 6-19  நாட்கள்

    நோய்க்குறிகள்:

    • நான்கு நாள் காய்ச்சல், இருமல், மூக்கில் நீர் வடிதல்,
    • கண் சிவத்தல், கண் கூசுதல்,
    • கொப்ளிக் புள்ளிகள்- வாயின் உட்புறம் சிறு  புள்ளிகள்.
    • கொப்ளிக் புள்ளிகளை வைத்து நாம் தட்டம்மை நோயை அறியலாம்.
    • அதன் பின் சிவந்த தடிப்புகள் ( RASHES ) முதலில் காதின் பின்புறமும் நெற்றியிலும் தோன்றும்.
    • அதன் பின் உடல் முழுவதிலும் புள்ளிகள் பரவும்.
    • இததடிப்புகள் மறைய ஆரம்பித்தவுடன் காய்ச்சல் குறைந்துவிடும்.

    நோயின் பின் விளைவுகள் என்ன?

    • வயிற்றுப்போக்கு
    • நிமோனியாக் காய்ச்சல் (நுரையீரல் அழற்சி)
    • மூளைக் காய்ச்சல் (ENCEPHALITIS)
    • கண் கருவிழி பாதிப்பு (CORNEAL ULCER)

    பொதுவாக பின் விளைவுகள் வயது வந்தோருக்கு இந்நோய் தாக்கும்போது அதிகம் காணப்படுகிறது.

    தடுப்பூசி

    • MMR (MUMPS, MEASLES, RUBELLA) என்ற முத்தடுப்பூசியாக இது போடப்படுகிறது.
    • ஒன்றரை வயதில் முதல் முத்தடுப்பூசி போடப்படுகிறது.
    • இரண்டாவது ஊசி நோய் எதிர்ப்பை அதிகரிப்பதற்காக நான்கிலிருந்து ஐந்து வயதுக்குள் போடப்படுகிறது.

    இது மிகப்பெரிய உயிர்க்கொல்லி நோய் அல்ல. ஆயினும் 1000 ல் 1 அல்லது 2 பேர் இறப்பதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

    Wednesday 1 September 2010

    சின்னம்மை சில கேள்விகளும் விடைகளும்!

    இதற்கு முந்தைய பதிவில் சின்னம்மை பற்றிய சில முக்கிய தகவல்களை எழுதி இருந்தேன். அதுபற்றி இன்னும் சிறிது விளக்கம் கேட்டிருந்தனர். குழந்தைகள் சம்பந்தமானது என்பதால் சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்வது உபயோகமாக இருக்கும் என்பதாலேயே இதனை எழுதுகிறேன்.

    என் முந்தைய பதிவு சின்னம்மை(CHICKEN POX)-5 

    நான் என் குழ‌ந்தைக்கு ஒரு வ‌ய‌து இருக்கும் போது சின்ன‌ம்மைக்கான‌ த‌டுப்பூசி போட்டிருக்கிறேன். இது எவ்வ‌ள‌வு தூர‌ம் இந்த‌ நோயை அல்லது அத‌ன் க‌டுமையைத் த‌விர்க்கும் என்று விள‌க்க‌ முடியுமா?

    பொதுவாக ஒரு வயது இருக்கும்போது போடுவது வழக்கமானதுதான்.

    இந்தத் தடுப்பூசி எத்தனை வருடம் நோயிலிருந்து பாதுகாப்புக் கொடுக்கும் என்று இதுவரை அறுதியிட்டுச் சொல்லவில்லை. ஆனால் 10 வருடங்கள் வரை அதன் வீரியம் இருக்கும் என்றும் அதன் பிறகு அதன் தடுப்பாற்றல் குறைவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சக குழந்தைகளுக்கு வரும் சின்னம்மை நோயானது வீட்டிலுள்ளோர், மற்றும்  தொடர்பில் உள்ளோருக்கு எதிர்ப்பு சக்தியைத் தூண்டி விடுவதால் அதன் பின் தடுப்பூசி தேவைப்படுவதில்லை.

    இதுவரை தடுப்பூசி போடப்படவில்லை என்றால் ஒரு வயதிலிருந்து  12 வயதுவரை உள்ளோருக்கு ஒரு முறை தடுப்பூசியும், அதற்கு மேல்பட்ட வயதினருக்கு இரண்டு முறை அதாவது ஆறு முதல் பத்து வார இடைவெளியில் இரண்டு ஊசிகள் போடப்பட வேண்டும்.

    யாருக்கு இந்த ஊசி போடக்கூடாது?

    • அதிக காய்ச்சல்
    • கர்ப்பிணிகள்
    • புற்று நோய் சிகிச்சை பெறுவோர்
    • ஏமக்குறை நோய் (AIDS) உள்ளோர்
    • இரத்தம் ஏற்றப்பட்டோருக்கு மூன்று மாதம் வரை.

    உலகம் முழுவதும் இத்தடுப்பூசி போடுகிறார்களா?

    • ஜப்பானில் போடப்படுகிறது.
    • அமெரிக்காவிலும் போடப்படுகிறது.
    • ஐரோப்பிய நாடுகளில் பொதுவாகப் போடப்படுவதில்லை.
    • ஆஸ்திரேலியா,கனடாவில் பெருமளவில் உபயோகிக்க ஆரம்பித்துள்ளனர்.
    • பொதுவாக உலகெங்கும் பரவலாக உபயோகிக்கப்படுகிறது.

    இதன் நோய் தடுக்கும் திறன் எவ்வளவு?

    • நோயின் கொடிய விளைவுகளிலிருந்து 95% பாதுகாப்புத்தருகிறது.
    • 70-90 சதவிகிதம் நோய் வராமல் தடுக்கிறது.

    Monday 30 August 2010

    சின்னம்மை(CHICKEN POX)-5

    சின்னம்மை என்ற சிக்கன் பாக்ஸ் குழந்தைகளைத் தாக்கும் முக்கிய வைரஸ்  நோய்களில் ஒன்று..

    ஏற்கெனவே இருந்த SMALL POX  பெரியம்மை  நோய் வைரஸ்  தற்போது உலகின் சில பரிசோதனைக் கூடங்களில் மட்டுமே  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

    சின்னம்மையைப் பற்றிய முக்கிய விபரங்கள் மட்டும் பார்ப்போம்.

    1.சிக்கன் பாக்ஸ் எப்படிப்பரவுகிறது?

    1. இருமும்போதும் தும்மும் போதும் காற்றில் எச்சில்,சளி நுண் துளிகள் தூவப்படுகின்றன.  இவற்றை சுவாசிப்போருக்கு இந்தத் தொற்று பரவுகிறது.(  தும்மும் போதும், இருமும்போதும் கைக்குட்டை வைத்துக்கொள்ள வேண்டும்!)
    2. நோயாளியின் உடலில் தோன்றும் கொப்புளங்கள் உடைந்து அதில் உள்ள நிண நீர் பரவுவதன் மூலம்.

    2.இது எந்த வயதினரை அதிகம் தாக்குகிறது?

    • 10 வயதுக்குட்பட்டோரையே அதிகம் தாக்குகிறது.- ஆயினும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்நோயை எதிர்க்கும் திறன் அதிகம்.
    • இளைஞர்களுக்கும், நடுத்தர வயதினருக்கும் இந்நோய் தாக்கினால் விளைவுகள் சிறிது கடுமையாகவே இருக்கும்.
    • நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோருக்கும்,லுகிமியா போன்ற நோய் உள்ளோரும் சிகிச்சை பலனளிக்காமல் இறப்பதும் உண்டு.
    • இதன் நோய் காப்புக்காலம் (INCUBATION PERIOD)  14-21 நாட்களாகும்.

    3.இந்நோயால் உடலில் எற்படும் விளைவுகள் என்ன?

    • தோலில் சிவந்த தடிப்புகள் (RASHES)
    • உடலில் வயிறு, மார்பு போன்ற மையப்பகுதிகளில் இத்தடிப்புகள் நோயின் இரண்டாம் நாளில் தோன்றும்.
    • அதன் பிறகு முகத்திலும் பின்பு கை,கைல் போன்ற பகுதிகளிலும் தடிப்புகள் ஏற்படும்.
    • தோல் கொப்புளங்கள் தோன்றி, பழுத்து, உடலில் அரிப்பும் ஏற்படும். கொப்புளங்களைச் சொறிவதால் தோலில் தழும்புகள் ஏற்படலாம்.
    • இதன் முக்கிய அம்சம் பழுக்காத கொப்புளங்களிலிருந்து, பழுத்த கொப்புளம் வரை உடலில் ஒரே நேரத்தில் காணலாம்.

    4.இதன் பிற விளைவுகள் என்ன?

    • நோய் பொதுவாக கொடிய விளைவுகளை ஏற்படுத்துவதில்லை. எனினும் சில நேரங்களில் கீழ்க்காணும் விளைவுகள் ஏற்படலாம்.
    • நிமோனியா
    • இதயச் சுவரில் தொற்று (MYOCARDITIS)
    • மேற்கண்ட இரண்டும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு உள்ளோருக்கு ஏற்படும்.
    • மூளைத் தொற்று(மூளையழற்சி)
    • சிறு நீரக பாதிப்பு
    • மூட்டுகளில் சலம் பிடித்தல், எலும்பில் சலம்

    நிறைய பாதிப்புகள் இருந்தாலும் மேற்சொன்னவையே முக்கியமானவை.

    5.சிகிச்சை:

    • பொதுவாக எந்த சிகிச்சையும் தேவைப்படுவதில்லை.
    • நோய் எதிர்ப்பு குறைவாக உள்ளோருக்கு மருந்துகள் தேவைப்படலாம்.
    • பாக்டீரியா தொற்று தோலில் ஏற்பட்டால் ஆன்டிபயாடிக் மருந்துகள் தேவைப்படும்.

    சின்னம்மை பற்றிய மிக அவசிய தகவல்களை மட்டுமே தொகுத்திருக்கிறேன். இன்னும் அதிகம் தகவலுக்கும் சந்தேகங்களயும் கேளுங்கள் பின்னூட்டங்களில்.

    தமிழ்த்துளி தேவா.

    Wednesday 25 August 2010

    பெத்திடின்

    போதைப்பொருட்கள் பற்றிய என் இடுகைகள்:

    1.கொக்கைன்http://abidheva.blogspot.com/2010/02/blog-post_22.html

    2.கீட்டமைன்http://abidheva.blogspot.com/2010/01/blog-post_24.html

    3.ஜாகசனின் போதைhttp://abidheva.blogspot.com/2009/08/blog-post_24.html

    4.குழந்தைகளை போதையிலிருந்து காக்கhttp://abidheva.blogspot.com/2009/07/blog-post_08.html

    என் முந்தைய இடுகைகளில் போதைப் பொருட்களைப் பற்றியும் அவற்றின் தீய விளைவுகள் பற்றியும் கூறியுள்ளேன். அந்த வரிசையில் பெத்திடின் பற்றியும் பார்ப்போம்.

    பெத்திடின்பற்றி அனைவரும் அறிந்திருப்போம். பெத்திடின் என்றால் போதைப்பொருள் என்றுதான் தோன்றும். உண்மையாக பெத்திடின் எதற்காகப் பயன்படுகிறது என்று பார்ப்போம்.
    1.பெத்திடின் பொதுவாக எந்த வடிவில் கிடைக்கிறது?
    பெத்திடின் பொதுவாக ஊசி மருந்தாகக் கிடைக்கிறது.
    2.இது எந்த வகையைச் சேர்ந்தது?
    ஓப்பியம் அல்லது அபின் வகையைச் சேர்ந்தது.
    3.அபின் என்றால் என்ன?
     அபினிச்செடியின் காயைக்கீறினால் ஒரு வித பால் வடியும். இதனைக் காய வைத்தால் கிடைக்கும் தூள் அபின்(OPIUM) எனப்படுகிறது.
    4.அபின் காயின் விதைகள் போதைப் பொருளா?
    இல்லை. அதற்கு கசகசா என்று பெயர். சமையலில் உபயோகிக்கிறோமே கசகசா அதுதான்.
    5.பெத்திடினுக்கும் ஓப்பியத்துக்கும் என்ன தொடர்பு?
    பெத்திடின் செயற்கையாக உருவாக்கப்படும் ஓப்பியம்.
    6.பெத்திடினின் மருத்துவப்பயன்கள்?

    • பித்தப்பை வலி
    • சிறுநீரகக் கோளாறுகளால் ஏற்படும் வலி
    • பிரசவகால வலி
    • பெத்திடின் வலி நிவாரணியாக தற்போது குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்படுகிறது.
    6.பெத்திடினின் பக்க விளைவுகள் என்ன?
    • மயக்கம், கிறுகிறுப்பு, போதை- இதற்காகவே இது போதைப்பொருளாக உபயோகப்படுத்தப்படுகிறது.
    7.இதனை போதைப்பொருளாக உபயோகிப்போருக்கு ஏற்படும் விளைவுகள் என்ன?
    • நடுக்கம்
    • தசைத் துடிப்பு
    • மனக் குழப்பம்
    • வாய் உலர்ந்து போதல்
    • இல்லாத உருவங்கள், சப்தங்களை உணரும் குழப்பமான நிலை.
    • கை, கால் வலிப்பு
    8.இந்தியாவில் போதைப் பொருள் உபயோகிபோரின் எண்ணிக்கை எவ்வளவு?
    ஏறத்தாழ 5 மில்லியன் இந்தியர்கள் ஹெராயின் என்ற பிரவுன் சுகர் உபயோகிக்கிறார்கள்.(இதும் ஓபியம் வகையைச் சேர்ந்தது.).
    9.பள்ளி, கல்லூரி மாணவர்களில் போதைமருந்தை உபயோகிப்போர் எவ்வளவு      பேர்?
    ஆந்திராவிலும் வங்காளத்திலும் 60% மாணவர்கள் போதை மருந்தை உபயோகிப்பதாக ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது.
    போதை மருந்துகள் பற்றிய விபரங்களும் விழிப்புணர்வும் பெற்றோருக்கு அவசியம் தேவை. போதைப் பொருள் உபயோகிப்போர் எச்.அய்.வி, ஹெபடைடிஸ் ஆகிய நோய்களுக்கும் ஆளாகிறார்கள். இது தனி மனிதனை மட்டுமல்லாமல் குடும்பத்தையும், நாட்டின் எதிர்காலத்தையும் சீரழிக்கக் கூடியது. 
    இந்தக் கட்டுரையின் ஆரமபத்தில் கொடுக்கப் பட்டுள்ள சுட்டிகள் மூலம் போதைப்பொருள்கள் பற்றியும் அவற்றை உபயோகிக்கும் இளைஞர்களைக் கண்டறிவதுபற்றியும்  அறியலாம்.

    Monday 23 August 2010

    ஏன் நீதிபதி விசாரணை?

                  


                     சில நேரங்களில் நீதிபதி அரசு மருத்துவமனைகளில் உள்ள தீக்காய நோயாளிகளை  இறப்பதற்கு முன் விசாரிப்பதைப் பார்த்து இருப்போம்.
                     அதே போல் சில குறிப்பிட்ட விவகாரங்க்களில் நீதிபதியின் விசாரணை நடக்கும். நீதிபதியின் விசாரணை என்றால் என்ன  என்பதனைப் பற்றிச் சுருக்கமாகப் பார்ப்போம்.
                      நீதிபதியின் விசாரணை-ஆங்கிலத்தில் Magistrates Inquest எனப்படும்.
    Inquest என்றால் பெரிதாக ஒன்றுமில்லை! விசாரணையைத்தான்  Inquiry அல்லது enquiry  என்று கூறுகிறார்கள்.
    ( இன்க்வெஸ்ட் an inquiry into the cause of an unexpected death
    enquiry, inquiry - a systematic investigation of a matter of public interest)
                      சாதாரண குற்றங்க்களை காவல்துறையினர் விசாரிப்பர். சில குறிப்பிட்ட குற்றங்களில் நீதிபதியின் விசாரணை வேண்டப்படுகிறது.

    1.எந்த மாதிரியான நிகழ்வுகளில் நீதிபதியின் விசாரணை தேவை?
    • சிறையில் இறப்பு
    • காவல் துறை விசாரணையின் போது காவல் நிலையத்தில்,
    • காவல் துறையால் சுடப்பட்டால்,
    • மனநோய் மருத்துவமனையில் இறந்தால்,
    • வரதட்சணை இறப்பு,
    • சந்தேகமான முறையில் இறந்ததாகக் கருதப்பட்ட சடலத்தை புதைகுழியிலிருந்து தோண்டி விசாரணை மேற்கொள்ள,
    இந்த மாதிரியான விசாரணை செய்யும் தகுதி நீதிமன்ற நீதிபதி தவிர மாநில அரசால் வேறு பதவிகளில் உள்ளோருக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதனைக்கீழே பார்ப்போம்.
    2. எந்தப் பதவியில் உள்ளோர் இதனை விசாரிக்க நீதிபதிகளாகக் கருதப்படுவார்கள்?
    • மாவட்ட நீதிபதி அவர்கள் 
    • சப் டிவிசனல் நீதிபதி
    • சிறப்பு நீதிபதிகள்
    3.சிறப்பு நீதிபதிகள் என்பவர்கள் யார்?
           இவர்கள் மாநில அரசால் நியமிக்கப்படுபவர்கள்
    • மாவட்ட ஆட்சியர்
    • மாவட்ட உதவி ஆட்சியர்
    • தாசில்தார்
         நமக்குத் தேவையான எளிய சட்ட விவகாரங்களைத் தொடர்ந்து எழுதுகிறேன்.

    தமிழ்த்துளி தேவா.
    Related Posts with Thumbnails

    blogapedia

    Blog Directory