Tuesday 29 December 2009

பெங்களூர்-என் உள்மன யாத்திரை!

சற்று அமர்ந்து யோசித்தால், நம் வாழ்வின் ஆரம்பக்கட்டங்களில் நமக்கு மிக முக்கியமான உதவிகளை நண்பர்கள், பக்கத்துவீடுகளில் வசித்த அன்புக்குரியோர்கள்  பலரும் செய்து இருப்பார்கள். அவை மிகச்சிறிய உதவிகளாக இருந்தாலும் ”காலத்தினாற் செய்த உதவிபோல்” அவை மிகவும் உயர்ந்தவை.

அந்த உயர்ந்த உதவிகளைச் செய்தவர்களில்  தற்போது எங்கு இருக்கிறார்கள் என்று தெரியாதவர்கள் சிலரும் இருப்பர்.

அப்படி என் வாழ்வில் அதாவது என் இளமைப்பருவத்தில் எங்களுக்கு உதவிய, நான் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்று தேடும்  சிலரைப்  பற்றியும் அவர்களுடன் நான் வாழ்ந்து களித்த இடங்கள் பற்றியும்  இங்கு எழுதப்போகிறேன்.

என் அப்பாவுக்கு போஸ்டல்& டெலிகிராப் அலுவலகத்தில் வேலை.

வேலை மாறுதலாகி சென்னையிலிருந்து பெங்களூர் சென்றோம். அப்போது நாம் முதல் வகுப்பு படித்ததாக ஞாபகம். நாங்கள் வீடு பார்த்த இடம் ஸ்ரீராமபுரம்! தமிழர்கள் நிறைய இருந்த இடம். பெரும்பாலும் மக்கள் ஊதுபத்தி மாவை குச்சிகளில் அதற்கென இருக்கும்  சின்ன படிக்கும் மர பென்ச் போன்ற பலகையில் உருட்டி ஊதுபத்திகளைத் தயாரிக்கும் வேலையில் அதிகம் ஈடுபடுவர்! பெங்களூரில் வசிப்போருக்கு இது நன்கு தெரியும் என்று நினைக்கிறேன். பத்தி சுத்தும் குடும்பத்தில் இருக்கும்  குழந்தைகளில் மூக்கில் ஒழுகும் சளியே கருப்புக்கலரில் இருக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். ஆணும் பெண்ணும் பத்தி சுத்தி முடித்த இடைவேளைகளில் பீடி குடிப்பதையும் அப்போது அதிகம் கண்டிருக்கிறேன்.

அதே போல் கன்னட மக்களும், தமிழர்களும் மிகுந்த அன்புடனேயே அப்போது பழகிக் கொண்டிருந்தனர். என் இளமைப் பருவத்தில் என் மனதில் பதிந்ததாலோ என்னவோ கன்னட மொழி  எனக்கு மிகவும் பிடிக்கும். அதை அவர்கள் பேசுவதும் அழகு. ”என்ன செய்கிறாய்?” என்பதனை “ஏன் கண்ணா ஏன் மாடுதித்தியா?” என்று, ’கண்ணா’ என்று அழகாக அழைப்பார்கள். என் இளம் வயது கன்னட நண்பர்கள் மிகுந்த அன்புடையவர்கள்.

நாகராஜன், பெருமாள், லாரன்ஸ், ரபெக்கா டீச்சர், காந்தி வித்யா சாலை, என்று மனதில் ஆழ் அடுக்குகளில் புதைந்து கிடக்கும் மனிதர்களும் இடங்களும் என் மனதில் ஒரு அற்புதமான உலகத்தை சிருஷ்டித்துள்ளன.

இந்த அற்புத உலகை நானே உருவாக்கிக்கொண்டேனா? ..இல்லை, “எழுதிச் செல்லும் விதியின் கைகள் எழுதி எழுதி மேற்செல்லும்” என்பதுபோல் இவை, மறைந்து போகும்  காலம் என்னும்  மாய பிம்பம் என்னுள் விட்டுச்சென்றவை. இது எனக்கு மட்டுமே தெரிந்த உலகம். நான் என் உள்ளக் கதவைத் திறந்து அடிக்கடி இதற்குள் செல்வேன்.அந்த என் உள்மனயாத்திரைகள் அற்புதமானவை. இதே போல் எல்லோருடைய உள்ளங்களிலும் தனி உலகங்கள் இருக்கும். நான் ரசித்த என் இளமைக் காலத்தை சிறிதளவேனும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

  அங்கு நான் கண்ட தமிழர்களின் வாழ்க்கை ஏழ்மையும் சுவாரசியமும் நிறைந்ததாகவே என் இளமனதில் பதிவாகியுள்ளது. அந்த நினைவுகள் அற்புதமானவை. இன்றும் என் வாழ்வின் மிகஇனிய பகுதியாகவே அதை அசைபோடுகிறேன்.

இதைப் படிக்கும் பதிவுலக நண்பர்கள் பலரும் நான் எண்ணுவது போலவே பால்ய நினைவுகளை இனிமையாக நினைக்கிறார்களா என்று தெரியவில்லை!

ஆயினும் ஒரு குழந்தையின் குதூகலத்துடன் உங்கள் கைகளுடன் என் கைகளை இணைத்துக் கொள்கிறேன். வாருங்கள் அன்பு நண்பர்களே!!!

(நிறைய எழுதினால்தான் பதிவிடலாம் என்று எண்ணியே பலநாட்கள் பதிவிடாமல் விட்டிருக்கிறேன். சின்னப் பதிவுகளையும் பதிவுலகம் வரவேற்கும் என்று நம்புகிறேன்! )

( தொடரும்..)

Wednesday 23 December 2009

வேட்டைக்காரன்!!

அன்பு நண்பர்களே!!

நேற்றிரவு வேட்டைக்காரன் படம் பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்தது! ஒரு படம் கலைப்படமா இல்லை பொழுதுபோக்குக்காக எடுக்கப்பட்டதா என்பது ஒரு படத்தைப் பார்க்கப் போகும் முன் நாம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

அந்த விதத்தில் இது ஒரு பொழுதுபோக்குப் படம்.  அந்த மன நிலையில் இந்தப் படத்தைப் பார்க்கச் சென்றதில் எனக்குத் தோன்றியவை.

1.விஜய் ஒரு சூப்பர் ஸ்டார் என்று காட்ட டைரக்டர் ஏகப்பட்ட பில்டப் கொடுத்து மிகவும் பிரயாசைப்பட்டிருக்கிறார். இது நாம் ரஜினி உட்பட எல்லா ஆக்‌ஷன் ஹீரோக்களுக்கும் நமது இயக்குனர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்  கொடுத்தாகவேண்டிய கட்டாய ஃபார்முலா!! உங்களிடமோ என்னிடமோ இப்படி ஒரு படத்தை டைரக்ட் செய்யக் கொடுத்தால் இன்றைய ட்ரெண்டில் இதைச் செய்தாக வேண்டும். இல்லையென்றால் படத்திலிருந்து நம்மைத் தூக்கிவிடுவார்கள்!!

2.ஒரு வணிகப் படத்தில் விஜய் இந்தப் படத்தில் செய்திருப்பதைவிடச் சிறப்பாகச் செய்ய வழியில்லை.

3.படத்தில் விஜய் காஸ்ட்யூமில் இன்னும் அக்கரை காட்டி இருக்க வேண்டும். சில இடங்களில் சட்டைக்குப் பொருந்தாத காட்டன் கால்சட்டைகள் பொருந்தவில்லை.

4.கதாநாயகி கட்டாயம் வேறு ஒருவரைப் போட்டிருக்கலாம். முகபாவனைகள் தமிழ் செண்டிமெண்டுக்கு ஒத்துப் போகவில்லை.

5.காதல் சம்பவங்களை இன்னும் ரொமாண்டிக்காகப் பின்னியிருக்கலாம்.

6.படத்தில்  வன்முறை மிக அதிகமாகக் கையாளப் பட்டுள்ளது. இது தற்போது எல்லாத் தமிழ்ப்படங்களிலும் காணப்படும் விரும்பத்தகாத ஒன்று.

7.ஒரு நல்ல  போலீஸ் அதிகாரி போலீஸ் துறையினரின் உதவியுடனேயே தன் குடும்பம், கண் பார்வை இழப்பதும், குடும்பப் பெண்கள் ரவுடி செல்லாவால் கற்பிழப்பதும் நம் சமூக அமைப்பில் சாதாரண மக்கள் மற்றும் நல்ல போலீஸ் அதிகாரிகள்  மதிப்புடன் வாழ முடியாதோ என்ற அவ நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.

8.எல்லாத் தமிழ்ப்படங்களிலும் காட்டப்படும்- டிட் ஃபார் டாட் வகை வில்லன் ஹீரோ பழி வாங்கும் ஃபார்முலா நிகழ்ச்சிகள் இந்தப் படத்திலும் கையாளப் பட்டிருப்பதால் அடுத்து என்ன செய்வார்கள் என்பதை படம் பார்க்கும் நாம் கணிக்க முடிகிறது.

9.படம் முடிந்தவுடன் என் மகன் சொன்னது” அப்பா!! படம் சூப்பர்! ஹிட்டுதாம்பா”.

Monday 21 December 2009

தமிழ் வலைப் பதிவுகள்- சில கருத்துக்கள்!

அன்பு நண்பர்களே!!

பதிவுலகத்தில் நாமும் தொடர்ந்து பல்வேறு விசயங்களை எழுதி வருகிறோம். அவற்றை உடனுக்குடன் தொகுத்து வெளியிட திரட்டிகளும் உள்ளன. பல திரட்டிகளில் பதிவுகளைத் திரட்ட தானியங்கி மின்னணுக்கருவிகளும் உள்ளன! நம் கருத்துக்களை எழுதி, அதனை அஞ்சலில் அனுப்பி, ஆசிரியர் குழு அதனைப் பரிசீலித்து அதன்பின் அதனை வெளியிடும் பழைய முறையை(தற்போதும் பத்திரிக்கைத்துறையில் உள்ள)விட மின்னல் வேகத்தில் இணையத்தில் பதிவிட நம் படைப்புகள் அடுத்த சில நொடிகளில் உலகமெங்கும் பார்க்கப்படுவது முன்னெப்போதும் நாம் கனவில்கூட நினைத்துப்பார்த்திருக்க முடியாத ஒன்று.

ஆயினும் நாம் என்ன எழுதுகிறோம் என்று அலசி ஆராயும் நேரமும், அவற்றை உடனடியாக அறிந்து முறைப்படுத்தி, தவறுகளைத் தடுக்கும் வசதிகள் தற்போதைய திரட்டிகளில் இருக்கிறதா? என்பது தெரியவில்லை.

அவ்வாறு செய்வது தேவையா? அது எந்த அளவுக்கு தமிழ் இணைய வளர்ச்சிக்கும்,பதிவர்களுக்கும் உதவியாக இருக்கும் என்பது விவாதத்துக்குரிய விசயம்.

தமிழ்ப் பதிவர்கள் சந்திப்பு ஈரோட்டில் வெற்றிகரமாக நடந்து முடிந்திருப்பது பாராட்டுதலுக்கும் வரவேற்புக்கும் உரியது. பதிவர் சந்திப்புகளும் பதிவுலக நட்பும் பெருகிவருவது ஆக்க பூர்வமான ஒன்று. பதிவுலக நட்பில் எந்தவிதப் பாகுபாடும் இன்றி அனைவரும் கலந்து கொள்வதும் மிகவும் சிறப்பான விசயம்.

இது போன்ற பதிவர் சந்திப்புகளின் முக்கிய நோக்கங்கள் என்னவாக இருக்கவேண்டும்? அதாவது பதிவர்களின் இந்தச் சந்திப்புகள் ஒரு கலந்து மகிழ்தல் மட்டும்தானா? இல்லை அதையும் மீறிய இலக்குகள் உள்ளனவா? என்பது நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய ஒன்று.

அவ்வாறு பார்க்கும்போது பதிவர்களின் இடுகைகளை தமிழ்ப்பத்திரிக்கை உலகம் தொடர்ந்து கண்காணித்து வருவது நம் இடுகைகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்ற ஒரு பொறுப்புணர்வை நமக்குத்தருகின்றன! அதே போல் பல பத்திரிக்கைகள் நம் பதிவர்களின் பல படைப்புகளை வெளியிடவும் செய்கின்றன.

பல பதிவர்கள் பத்திரிக்கைக்களுக்குத் தொடர்ந்து எழுதும் நிலைக்குச் சென்றிருப்பதும், நிருபர்களாகப் பணிபுரிவதும் பாராட்டவேண்டிய ஒன்று.

பன்றிக்காய்ச்சல் போன்ற மிகவும் சிரமமான நேரங்களில் தமிழ்ச் செய்தித்தாள்கள் பத்திரிக்கைகளை விஞ்சிய செய்திகளையும் தகவல்களையும் உடனுக்குடன் தமிழ்ப் பதிவர்கள் தந்தனர். அவற்றைப் பத்திரிக்கைகளும் வெளியிட்டன.

பதிவுலகப் படைப்புகள் இணையம் என்ற (மாய?) உலகிலிருந்து அச்சுக்குச் செல்லும் அடுத்த கட்டத்தினை இணைய எழுத்தாளர்கள் அடைந்திருப்பது சமீப காலத்தில் நாம் காணும் ஒரு நிகழ்வு. பொன்.வாசுதேவன் அவர்களின் அகநாழிகை பத்திரிக்கையும், அகநாழிகை பதிப்பகமும் அப்பதிப்பகத்தின் சார்பாக வெளியிடப்படும் இணைய எழுத்தாளர்களின் படைப்புகளும் நிச்சயம் புதிய இணைய பதிவர்களுக்கு உற்சாகமூட்டும் என்பதில் ஐயமில்லை.

அதே போல் தமிழ்ப்பதிவுலகில் இலக்கியம் சம்பந்தமான இடுகைகளும், செய்தி, அரசியல், சினிமா போன்ற துறைகளிலும் சிறப்பான இடுகைகள் தொடர்ந்து பதிவிடப்படுகின்றன. அரசியல் பற்றி தனி நபர் அல்லாத வலுவான அமைப்புகளும், சில தனி நபர்களும் மிகத்துணிவுடன் பதிவுகள் எழுதுவதைக் காண்கிறோம். நேர்வினையோ, எதிர்வினையோ அரசியல், சினிமா போன்ற பிரிவுகளில் அச்சமின்றி வரும் பதிவுகள் அனைத்தும் எந்தவிதத் தய்க்கமுமின்றி எழுதப்படுகின்றன.

இவ்வாறு இருக்கையில் சட்டம், மருத்துவம் ஆகிய சில துறைகளில் இடுகைகள் மிகவும் குறைவாகவே பதிவிடப்படுகின்றன. கண்ணித் துறை போன்ற தொழில்நுட்பத் துறை சார்பாக வரும் பதிவுகளைக் கணக்கில் கொள்ளும்பொழுது மருத்துவம் சட்டம் சார்ந்த இடுகைகள் மிகக் குறைவு என்பது என் கருத்து.

இத்துறைகளில் இடுகைகள் குறைவு என்பதைவிட இத்துறைகளில் சில சட்டம் சார்ந்த இடுகைகளை பதிவர்கள் அறிந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் எழுதும்போது சில பிரச்சினைகளையும் நாம் சந்திக்க வேண்டியுள்ளது. அவ்வாறு பதிவர்கள் இன்னலில் சிக்கும்பொழுது அவர்களுக்குக் குரல் கொடுக்கவும், சட்ட ரீதியாக அவர்களுக்கு உதவவும் வலுவான அமைப்பு ஒன்று தேவையா? என்பதே இப்போதைய கேள்வி.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பதிவர்களும், பதிவுகளும் அதிகரித்திருக்கும் நிலையில் இதன் முக்கியத்துவத்துவத்தையும் தேவையையும் நாம் ஆராய வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

ஈரோட்டில் பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டோரின் எண்ணிக்கையும், பதிவர் சந்திப்புகளின் வெற்றியும் பதிவர்களுக்கு பாதுகாப்பு வழங்குதல், பதிவு சுதந்திரம் அவற்றிற்கான நெறிமுறைகள் ஆகியவற்றை வகுக்கவும் வழிவகுக்க வேண்டும் என்ற கருத்தை நான் இங்கு முன் வைக்கிறேன்.

அதேபோல் கோவையில் உலகச் செம்மொழி மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாட்டில் இணைய எழுத்தாளர்களுக்கு என்ன பங்கு உள்ளது? அதில் 2010 க்கான உலகத் தமிழ் இணைய மாநாடும் நடைபெறும் நடைபெறும் என்று தெரிகிறது. அதில் இணையப் பதிவர்களின் பங்கு என்ன? என்பதையும் நாம் உறுதிசெய்யவேண்டும். இதற்கான சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளதா? அக்குழு முதல்வரைச் சந்தித்து இது பற்றிக்கலந்தாலோசிக்குமா? போன்ற பல கேள்விகள் எழுகின்றன.இது பற்றி பதிவுலக முன்னோடிகள், ஆர்வலர்கள் ஆலோசிக்க வேண்டும்.

புனைப் பெயரில் பதிவுகளை எழுதினாலும் நாம் யார் எங்கிருந்து எழுதுகிறோம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. ஆங்கிலம் போன்ற மொழிகளில் உள்ளது போல் அனைத்துப் பிரிவுகளிலும் தமிழ் சிறக்கவேண்டும் என்பதே என் அவா. தமிழை இணையப் பதிவுகளே தமிழை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் சிறப்பான ஊடகமாகத் தெரிகிறது. அதற்குப் பதிவர்களின் வலிமையும் மிக அவசியம். வாழ்க தமிழ்!

Wednesday 16 December 2009

குழந்தைகளுக்கு முழங்கையில் அடிபட்டால் ? அறியவேண்டிய-7 குறிப்புகள்!!

பொதுவாக மருத்துவம் என்பது பற்றி அறிவியல்பூர்வமாக நாம் அறிந்து கொள்வது மிக அவசியம். அதுவும் நம் குழந்தைகளுக்கு என்று வரும்போது இன்னும் எச்சரிக்கை தேவை!!
குழந்தைகள் கீழே விழும்போது முழங்கை எலும்பு முறிவு ஏற்பட்டால் என்ன செய்யக்கூடாது என்ன செய்யலாம்? என்று நாம் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும்.
1.குழந்தைகளுக்கு முழங்கையில் அடிபட்டு வீக்கம், வலி காணப்பட்டால் அவசியம் எலும்பு உடைந்துள்ளதா? என்று எக்ஸ்ரே எடுத்துப் பார்ப்பது சிறந்தது.
2.முழங்கையில் எண்ணை, வலிக்கான களிம்புகள் போட்டு தேய்த்துவிடக் கூடாது.அப்படிச்செய்தால் முழங்கையைச் சுற்றியுள்ள தசை, சவ்வுப்பகுதிகளில் உபரியான எலும்புகள் தோன்றி முழங்கை மடக்க விடாமல் தடுக்கும். இதற்கு மயோசைடிஸ் ஆஸ்ஸிபிகன்ஸ் என்று பெயர்(Myositis ossificans) என்று பெயர்.
3.எலும்பு உடைந்திருந்தால் நாட்டு வைத்தியம் செய்யக்கூடாது. அப்படி செய்தால் கை திரும்பி இணையும் அபாயம் அதிகம்.
4.முழங்கைக்கு சற்று மேல் எலும்பு உடைந்து இருந்தாலோ அல்லது முழங்கை எலும்பு விலகி இருந்தாலோ எலும்பு மருத்துவரிடம் காண்பித்தல் அவசியம்.
5.முழங்கைக்கு சற்று மேலே உடைந்திருந்தால் பல நேரங்களில் மருத்துவரிடம் கேட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தால் அறுவை சிகிச்சை செய்து கொள்வதே மிக நல்லது.
6.முழங்கை எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சையின் மூலம் உடைந்த வித்தியாசம் தெரியாத அளவுக்கு மிகச் சரியாகப் பொறுத்த முடியும்.
7.ஏற்கெனவே முழங்கை எலும்பு உடைந்து நாட்டுக் கட்டுப் போட்டு எலும்பு தவறாக இணைந்திருந்தாலும் அதையும் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ளலாம்.

Thursday 10 December 2009

அழித்துவிடு இவர்களை!

கண்ணுக்குத் தெரியாத
எதிகளின் இரவு
அணிவகுப்பு!

நினவா கனவா என்ற
நிலை புரியாத
அவஸ்தை!

எழ முடியாமல்
மூட்டுக்களை முடக்கும்
கயமைத் தனம்!

அனலாய்க் கொதிக்கும்
மூச்சு!
மாறி மாறி
உடலையும்
உள்ளதையும் சிதைக்கும்
வன்மம்!!

எதற்காக இந்த கொடூரம்?
எலும்பையும் சதையையும்
முடக்கி
மானுடத்தைச் செயலிழக்கும்
உன்னை யார் தண்டிப்பர்?

எந்த எதிரிகள்
ஏவிய பானம் நீ!!

எழுத்தில் சொல்ல முடியாத
அவஸ்தைக்கு
நீதான் காரணம் என்பதறிவாயா?

தான் என்ன செய்கிறோம்
என்று அறியாத
இவற்றிற்கு ஏன்
இவ்வளவு சக்தி?

இறைவா!
அழித்தி விடு இவர்களை!
உறக்கக் கலக்கத்தில்
நீ உருவாக்கிய
இவை எல்லா
உயிர்களையும் அழிக்குமுன்
நீ விழித்தெழு!!

Wednesday 9 December 2009

வைரஸ் காய்ச்சல்!

”காய்ச்சலுக்கு அரசு ஆஸ்பத்திரியில் ஸ்பெசல் ஊசி!!” என்று பதிவு போட்ட மறுநாளே வைரஸ் காய்ச்சல் படுக்க வைத்து விட்டது.
சரியாக நேற்றிரவு 3.00 மணிக்கு படுக்கையிலிருந்து விழிப்பு வந்தது. நெற்றி சுடுவது போல் இருந்தது. முழங்கால் இரண்டும் நகற்ற முடியவில்லை. இடுப்பு வலியோ அதை விட.காலை ஆறு மணிக்கு மேரி பிஸ்கட்டுடன் பால் சாப்பிட்டு மாத்திரை சாப்பிட்டேன். ஊசியும் போட்டுக் கொண்டேன்.( டாக்டருக்கே ஊசியா என்று கேட்கிறீர்களா?).ஓரளவு பரவாயில்லை. இதோ இப்போது உடல் கண கண என்றுள்ளது. இன்றிரவும் தூக்கமற்றுப் போகுமோ? தூக்கம் இல்லாமல் நினைவும்,கனவும் கலந்தார்ப் போல் காய்ச்சலுடன் கூடிய இரவு கொடியது. நோயாளிகளும் இப்படித்தானே அவதிப் படுவார்கள் என்று உணரும்போது மனம் வருத்தம் அடைகிறது. இந்தக் காய்ச்சல் இன்னும் நோய்வாய்ப் பட்டோருக்கு சிறந்த கவனிப்பையும், சிகிச்சையையும் அளிக்க உதவட்டும். ரொம்ப யோசிக்கவோ, எழுதவோ முடியவில்லை.
“ தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும்” என்பார்கள். எனக்கு நன்றாகப் புரிகிறது.
மீண்டும் இழந்த ஆற்றல்களைச் சேகரித்துக் கொண்டு வருகிறேன். எவ்வளவு காய்ச்சலையும் தாங்கிப் பதிவு போடுகிறான்கப்பா!!என்று எண்ணத் தோன்றும். அதுவே பதிவுலகம் நமக்குத் தந்திருக்கும் உற்சாகம்.
வருகிறேன்.
தமிழ்த்துளி தேவா!

Saturday 5 December 2009

காய்ச்சலுக்கு அரசு ஆஸ்பத்திரியில் ஸ்பெசல் ஊசி!!

காய்ச்சல் இந்த முறை தீவிரவாதியின் தாக்குதல் போல் மக்களை வறுத்தெடுக்கிறது. தமிழகம் முழுவதும் காய்ச்சல் இருந்தாலும் காரைக்குடி வட்டாரத்தில் காய்ச்சல் வராதவர்களே இல்லை என்று சொல்லலாம்.

புயல் சின்னம் உருவாகுவதும், தூறல் போடுவதுமாக ஒரு வினோதமான இயற்கை விளையாட்டின் பலனாய் காய்ச்சல் உசுப்பிவிடப்பட்டிருக்கிறது!

குடும்பத்தில் ஒரு ஆளுக்கு வந்தால் போதும் எல்லோருக்கும் பரவிவிடுகிறது!! இதனால் அரசுமருத்துவமனைகளில் கூட்டம் அலை மோதுகிறது. ஒரு முறை வந்தாலே இந்த வைரஸ் காய்ச்சல் ஆளைச்சாய்த்து விடுகிறது. பலரும் கை,கால் வீங்கிப்போய் நடக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். அதில் தற்போது பலருக்கும் இரண்டாம் முறையாக வேறு வந்துகொண்டிருக்கிறது!!

பலருக்கும் இரத்தம் சோதித்தல், உள்நோயாளியாகச் சேர்த்தல், குளுக்கோஸ் ஏத்துதல் என்று படு பிஸியாக உள்ளன அரசு மருத்துவமனைகள்!!

பிரச்சினை என்னவென்றால் உள்நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் இருப்பதால் அனைவரும் பெட் வேண்டும் என்று தினமும் குடுமிப் பிடிச்சண்டையாக உள்ளது!!பெட் கொடுக்க ரெகமெண்டேசன் போனிலும்,நேரிலும், தெரிந்தவர்,தெரியாதவர் என்று ஏகப்பட்ட குழப்பங்கள்!!
ஏழை என்றில்லாமல் தற்போது எல்லாத்தரப்பு மக்களும் வரிசையில் நின்று ஊசி போட்டுக்கொண்டு செல்கிறார்கள்.

ஜி.எச். பக்கம் வரமாட்டீங்களே!! இப்ப்ப வந்திருக்கீங்க! என்ன விசயம்? என்று நமக்குத் தெரிந்த வசதியுள்ள ஆசாமி ஒருவர் காய்ச்சலுக்கு ஊசி போட்டுக்கொண்டு மாத்திரை வாங்கிக்கொண்டு போகும்போது கேட்டேன். அவர் சொன்னதுதான் ஆச்சரியம்- ஜி.எச் சில்தான் இப்ப வந்திருக்கிற காய்ச்சலுக்கு மருந்து இருக்குன்னு ஊரெல்லாம் பேசிக்கிறாங்க, அதுதான் வந்தேன் ! என்றார்.
அடக் கொடுமையே!!

ஜி.எச்சில் கூட்டத்தைச் சமாளித்து ”இவ்வளவு பேருக்கும் மருந்து கொடுப்பது எப்படி? நிறையத்தேவைப்படுமே!! என்ன செய்வது?” என்று மண்டையைப் பிய்த்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில் இப்படி ஒரு கோஷ்டி கிளம்பி அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டுக்கொண்டிருக்கிறது!!

அது பரவாயில்லை!!காய்ச்சல் இல்லாட்டியும் பரவாயில்லை எங்களுக்கும் வந்துவிடாமல் அந்த ஊசியைப் போடுங்கள் என்று கேட்கும் மக்களையும் சமாளிக்கவேண்டியுள்ளது!! எவ்வளவோ சமாளிக்கிறோம். இதைச் சமாளிக்க மாட்டோமா!!

Thursday 3 December 2009

சங்கரின் டி.வி. நிகழ்ச்சி!!

சங்கரின் நண்பர்கள் குழு அவன் ரூமிலிருந்த டி.வி.யின் முன் குழுமியிருந்தது. எல்லோரும் சந்தோச மூடில் மானிட்டருடன் சோடாவைக் கலந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தொண்டைக்குள் தள்ளிக் கொண்டிருந்தனர். சிப்ஸ்,வறுத்த கடலை, வெட்டப்பட்ட கேரட், தக்காளிகள் ஒரு பக்கம் தட்டுகளில்.
”மாப்ஸ் ! நான் நடிச்ச புரோக்ராம் வரப்போகுது” எழுந்து சிகரெட் புகையின் நடுவில் உற்சாகத்துடன் கத்தினான் சங்கர்.
அனைவரும் அடுத்த அரை மணி நேரம் நிகழச்சியை ஆர்வத்துடன் பார்த்தார்கள்.
”வெல்டன் மாப்பிள்ளை” செமத்தியா நடிச்சிருக்கடா சங்கர் , ஆளாளுக்கு உற்சாகத்துடன் பாராட்டினர்.
”சரி! வாங்கடா ! சாப்பிடப் போவோம்” குழு இறங்கி அடுத்ததெருவை நோக்கி நகர்ந்தது.
” ஏண்டா மாப்பிள்ளை! நம்ம நிகழ்ச்சியை மக்கள் பார்த்திருப்பாங்களா?” இனிமேல் ஒரே ரசிகர் தொல்லையாயிடுமேடா! ரோட்டில் நடக்க முடியாதே” சங்கர் சரக்கின் உற்சாகத்துடன் ஓவர் படம் காட்டினான்..

தெரு முனையில் திரும்பினர். கொஞ்ச தூரத்தில் மெஸ்!! மெஸ்ஸிலிருந்து வந்த இருவர் சங்கர் குழுவை நோக்கி சந்தேகக் கண்ணுடன் நெருங்கினர்.
”சார் இப்ப டி.வி யில வந்தது நீங்கதானா?” அவர்களில் ஒருவன் கேட்டான். மூச்சில் மெல்லிய சரக்கு வாடை!!
’ஆமா’ சங்கர் சொன்ன அடுத்த வினாடி”ஏண்டா! அப்பாவி ஜனங்க பணத்தைப் போட்டா அபேஸ் பண்ணிட்டு சவடாலா நடந்து வரியே! நீதானே அந்த பைனாஸ் ஓனரு”
”அண்ணா ! இல்லீங்கனா அது கதை! – வார்த்தைகள் குழறி கைகால் நடுங்க ஆரம்பித்தது சங்கருக்கு!!
“ என்னடா கதை சொல்றே எங்களுக்கு, புடிடா அவனை” – அவன் சொல்லி முடிப்பதற்குள் சங்கர்&கோ சிட்டாய்ப் பறந்து விட்டனர்!!

Wednesday 2 December 2009

அவங்க பைத்தியமா? நாம் பைத்தியமா? -10!

எதைத்தின்றால் பித்தம் தெளியும் என்று பொதுவாக சொல்லக்கேட்டிருப்போம்.

பித்துப் பிடித்தவன்பாடு கொடுமைதான்!. உண்மையில் தெருவோரங்க்களில் அனாதைகளாக குடும்பத்தவர்கள் கவனிக்காமல் அலையும் அவர்களைப் பார்க்கும் போது நமக்கு வருத்தமாகத்தான் உள்ளது!
அவர்களுக்கு உணவும் உறையுமிடமும் கொடுக்கவேண்டியது அரசின் கடமை!! போதுமான அளவு மனநோயாளிகளுக்கான காப்பகங்கள் நம் நாட்டில் இல்லை என்பதுதான் உண்மை.

இந்த இடுகையில் அதைப்பற்றி நாம் பார்க்கப்போவதில்லை. உண்மையில் பித்துப்பிடித்தவர்கள் ஒருபுறமிருக்க சட்டத்துக்குப் புறம்பான செயல்களைச் செய்து அதிலிருந்து தப்பிக்க பைத்தியம் போல் நடிக்கும் நபர்களைப் பற்றித்தான் பார்க்கப்போகிறோம்.

இவர்களால் மருத்துவர்களுக்கும் தலைவலிதான். ஏனென்றால் இவர்களை உண்மையான பித்தனா? இல்லை பொய்ப்பித்தனா என்று கண்டுபிடிக்க பல நேரங்க்களில் மருத்துவரும் மண்டையைப் பிய்த்துக்கொள்ள வேண்டிவரும்.

பொதுவாக உண்மைப்பித்தனுக்கும், பொய்ப்பித்தனுக்கும் என்ன என்ன வேறுபாடு இருக்கும் என்று பார்ப்போம்!

1.திடீரென்று தமிழ்சினிமாபோல் "நான் எங்கே இருக்கிறேன்?" ஆசாமிகளை நடைமுறையில் பார்ப்பதா¢து! உண்மையான பைத்தியம் மெதுவாக ஆரம்பித்து படிப்படியாக முற்றிய நிலையை அடையும். திடீர்ப் பித்தர்கள் பெரும்பாலும் "பொய்ப்பித்தர்கள்"!!

2.உண்மையில் ஒருவனுக்குப் பைத்தியம் பிடித்திருப்பதற்குக் காரணம் இருக்காது( காதல் பைத்தியங்கள் இந்தக் கட்டுக்குள் அடங்க்காது!.) பொய்யாக நடிப்பவர்கள் பைத்தியமாக நடிப்பதற்கு காரணம் ஏதாவது இருக்கும். பல நேரங்க்களில் கி¡¢மினல் குற்றமாக இருக்கும்!

3.உண்மையான பித்தர்களின் பரம்பரையில் யாருக்காவது பைத்தியம் பிடித்திருப்பது, அல்லது மிகப்பொ¢ய நஷ்டம் என்று ஏதாவது இருக்கும். ஆனால் சூப்பர் ஆக்டிங்க் கொடுக்கும் கி¡¢மினல்களிடம் இதெல்லாம் இருக்காது!

4.உண்மையில் மன நிலை பாதிக்கப்பட்டு பைத்தியமாகிவிட்டவர்களிடம் அறிகுறிகள் 24 மணி நேரமும் சீராக ஒரேபோல் இருக்கும். ஆனால் பித்தனாக நடிக்கும் ஆசாமிகள் ஆட்களைக் கண்டவுடன் ஓவர் "குணா கமல்" ஆக்டிங்க் கொடுப்பார்கள்,

5.உண்மையில் பித்துப் பிடித்தவர்களின் முகம் வித்தியாசமாக இருக்கும். வெறுமையான பார்வை காணப்படும். ஆனால் சீட்டிங்க்க் ஆசாமிகளின் முக பாவம் மாறிக் கொண்டே இருக்கும். வலுக்கட்டாயமாக முகத்தைப் பல கோணங்க்களில் வைத்துக்கொள்வார்கள்!

6.இன்சோம்னியா என்னும் தூக்கமின்மை உண்மையான பைத்திய நிலையில் இருக்கும். பொய்யாய் நடிப்பவர்கள் தூங்காமல் இரண்டு நாட்களுக்கு மேல் தாக்குப்பிடிப்பது கஷ்டம்.

7.உண்மைப் பித்தர் சோறு,தண்ணி தூக்கமில்லாமல் சுறுசுறுப்பாக இயங்க்குவர். ஆனால் நம்ம ஆள் சில நாளிலேயே சோர்வாகிப் படுத்துவிடுவார்.

8.உண்மைப் பித்தன் அழுக்காகவும், சுத்தபத்தமில்லாமல் இருப்பான். ஆனால் நம்ம "நடிகர்திலகம்" கொஞ்சம் சுத்தமாக இருப்பார்.

9.உண்மைப் பித்தனின் தோல்,உதடுகள் வரண்டு, சொரசொரப்பாக இருக்கும். பொய்யாய் நடிப்பவருக்கு அப்படி இருக்காது

10.உண்மைப் பித்தனை எத்தனை முறை வேண்டுமானாலும் சோதிக்கலாம். கண்டுக்க மாட்டான். பொய்யாய் நடிப்பவன் அப்படியில்லாமல் அடிக்கடி சோதித்தால் எ¡¢ச்சல்படுவான், கோபப்படுவான்.

இதெல்லாம் பொதுவாக காணப்படும் அம்சங்கள்!! இதை வைத்து நாம் பித்தன் உண்மையில் பாதிக்கப்பட்டவனா அல்லது நடிகனா என்று கண்டுபிடித்துவிடலாம்!!

Monday 30 November 2009

ஒரு வருடம் முடிந்தது- 300+!!

வாழ்க்கை ஒரு நதி போல்தான் இருக்கிறது. ஒரு நதி எப்படித் தன் போக்கைத் தீர்மானித்துக் கொள்ள முடியாதோ அது போல் வாழ்வின் போக்கையும் நம்மால் தீர்மானிக்கவியலவில்லை. அது எனக்கு மட்டும்தானா அல்லது அனைவருக்குமான பொதுக் கோட்பாடா என்று எனக்குத் தெரியவில்லை.

நிகழ்வுகளும், மனிதர்களும் பனிபோல் மறைந்து கொண்டிருக்க வாழ்க்கை காலப்பயணியாய்ச் சென்று கொண்டிருக்கிறது. இந்தப் பயணத்தைத் தீர்மானித்தது யார்? அல்லது எது? என்ற கேள்விகள் பதிலில்லாமல், அனைவருடைய வாழ்விலும் தொக்கி நிற்கிறது!!

அந்நிகழ்வுகளின் தொடரில் ஒரு திருப்பத்தில் பதிவுலகம் என்ற பூஞ்சோலையும் எனக்கு அறிமுகமானது. கிடைத்த பொம்மையை விடாமல் பத்திரப்படுத்தும் ஒரு குழந்தையின் மகிழ்வுடன் நானும் என் வழியில் பதிவுலத்தை விடாது பிடித்துக்கொண்டிருக்கிறேன் ஒவ்வொரு நாளும் பதிவிடுவதற்காக என் சிந்தனையின் ஒரு பகுதியை இதற்காக செலவழிக்கிறேன். என்னில் ஒரு பகுதியைப் பிய்த்து இடுகைகளில் சொற்களாய் நெய்கிறேன். அந்தச் சொற்கள் எத்தனை பேரை மகிழ்வித்தது என்று என் பின்னூட்டங்களில் தேடி  மகிழ்கிறேன்.

சில்லரையை எண்ணி எண்ணி மகிழும் மிட்டாய் வாங்கச் செல்லும் சிறுவனின் குதூகலத்தை எனக்கு இப்பதிவுலகம் தந்தது.

இது ஒரு சுகானுபவம்.

ஆயிற்று! நானும் பதிவுலகம் வந்து ஒரு வருடம் முடிகிறது.300 பதிவுகள் என்னால் எழுத முடிந்தது என்றால் அது நிச்சயமாக என்னைப் பாராட்டி ஊக்குவித்த  பதிவுலக நண்பர்களால்தான். முகம் அறியாத அவர்கள் அனைவரையும் என் நண்பர்கள் என்று சொல்லிக்கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.  

என் எழுத்துக்கள் பெற்றுத்தந்த நண்பர்கள், என் பதிவைப் பின் தொடரும் 300 க்கு சற்றே அதிகமான தோழர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.

இன்னும் நிறைய எழுதலாம். என் உணர்வுகளையெல்லாம் சொற்களாக வடிக்கும் வல்லமை  எனக்கு இல்லை. ஆயினும் நான் சொல்லாத சொற்களின் அர்த்தங்களை இந்த வரிகளைப் படிக்கும் உங்களால் உணர முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது!! அதுவே என்னை இன்னும் நிறைய எழுதத் தூண்டும்.

அதற்கான உற்சாகத்தையும், உந்துதலையும் எனக்குத் தாருங்கள் நண்பர்களே!!

அன்புடன்,

’தமிழ்த்துளி’ தேவன்மாயம்!!

Friday 27 November 2009

பக்ரீத் நல்வாழ்த்துக்கள்!

அன்பின் வலைச் சகோதர சகோதரிகளே!!!

உங்கள் அனைவருக்கும் என்

புனித பக்ரீத் நல்வாழ்த்துக்கள்!!

இன்று நம்ம வீட்டிலும் பிரியாணிதான்!!

தமிழ்த்துளி தேவா.

கொஞ்சம் தேநீர்- நான் உறங்க!

 

 

ஒரு சிறு அமைதி,

ஒரு சமாதானம் போதும்

நான் இன்று உறங்க!

 

ஒவ்வொரு நாளும்

போதுமான வார்த்தைகள்

வேண்டியிருக்கிறது,

நம் மனங்கள்

காதலில் முயங்க!!

 

கனம் தாளாமல்

இதயத்தில் சுவர்களில்

கசிந்துகொண்டிருந்தன,

உன்னுடன்

பேசாமல் மீதமிருந்த

சொற்கள்!

 

கேள்விகளால்

நிரப்பப்பட்ட

உன் கண்களின் தீவிரம்

தாளாமல்

குனிந்து பருகினேன்

உன் மவுனத்தை!

 

நெஞ்சின் ஓரங்களில்

மீதமிருந்த

பனித்துளிகளைத் திரட்டி

கடந்து போன நாளின்

வெம்மையைச் சொன்னேன்.

 

சாகசமும் சாதுர்யமுமாய்த்

தொடுக்கப்பட்ட வரிகளை

புனிதமான தேவதையின்

சிரிப்புடன் கேட்டுக் கொண்டிருந்தாய்!!

 

தட்டிலிருந்த பருக்கைகளுடன்

மெதுவாக, மீதமிருந்த

சொற்களும்

கரைந்து போயிருந்தன!!

 

உன் மூச்சுக் காற்றின்

கதகதப்பில்

மெதுவாய் உறங்கிப்போனேன்!!

Wednesday 25 November 2009

பெண்களே! வாழ்த்துக்கள்!!

வாழ்த்துக்கள் !! ஒவ்வொரு புதிய சாதனைகளைப் பெண்கள் படைக்கும்போதும் மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

அதே நேரம் இந்தியாவின் மிகப் பெரிய ஆற்றலான மகளிர் சக்தி  இன்னமும் அடக்கு முறையாலும் பிற்போக்கு சிந்தனைகளாலும் வீட்டில் முடங்கிக் கிடப்பது வருந்துதலுக்குரியதாக உள்ளது.

இதை மாற்ற திறமையுள்ள பெண்கள் முன் வரவேண்டும். இத்தகைய பெண்களே நாளை இந்தியாவின் வல்லரசுக் கனவை நனவாக்குவார்கள்.

இந்தியாவில் முப்படைகளிலும் இரண்டாயிரம் பெண் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ராணுவத்தில் உள்ளனர்.

ஆனால், போரின் போது, போர் முனைகளில் பணியாற்ற இவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

அதேபோல, கடற்படையில் பணியாற்றும் பெண் அதிகாரிகள், போர்க்கப்பல்களில் பணியாற்ற அனுமதிக்கப்படுவது இல்லை.

விமானப்படையில் பெண் பைலட்டுகள் இருந்தாலும், அவர்கள் சரக்கு போக்குவரத்து விமானங்களை மட்டுமே இயக்குகின்றனர்.

இந்தத் தடைகளை உடைத்து புதிய சாதனையை இருவர் படைத்துள்ளனர்..

அவர்கள் சப் லெப்டினண்ட் அம்பிகா ஹூடா(ஹரியானா) மற்றும் ஷீலா ராணி ஷர்மா(உத்தரப்பிரதேசம்).

..

இருவரும் கப்பல்படையில் டார்னியர் விமானங்களை  ஓட்டி கடல் பகுதியை அலசுவர். அதுமட்டுமல்லாமல் இந்த விமானத்தில் குண்டுமழை பொழியும் வசதியும் உண்டு.

ரேடார் மூலம் கடலைக் கண்காணித்தல், நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு சாதனம்க்களைக் கையாளுவது, விமானப்படையுடன் இணைந்து போர் விமானங்களின் வருகையைக் கண்டுபிடிப்பது போன்ற மிகத்திறமையான வேலையில் இவர்கள் தம் திறமையைக் காட்டி மேலும் பல பெண்கள் இத்தகைய நாட்டைக் காக்கும் சீரிய பணியில் ஈடுபட முன்னுதாரணமாக விளங்க வாழ்த்துவோம்!!

வாருங்கள்!! வரலாறு படையுங்கள்!!!

Tuesday 24 November 2009

கொஞ்சம் தேநீர் -அது!

 

 

ஏதுமற்ற சூன்யத்தில்

சஞ்சாரிக்கிறது மனது..

 

தேடலின் வழியில்,

பலரிடமும் புகுந்து

உருமாறி, உருக்குலைந்து,

அல்லது உருப்பெற்றுக்

கிடக்கும் பலவும்

நான் தேடிய

ஏதோவொன்றின் சாயலில்.

 

இடையிடையில் அறுந்து

நினைவுப் படுகைகளில்

ஒழுங்கற்றுக் கிடக்கும்

சிதிலங்கள் உருப்பெறாமல்,

மரணத்துக்கும் பிறப்புக்குமான

இடைவெளியில்

சுவாசிக்கத்

துடிக்கும் சிசுவின்

அவஸ்தையுடன்!

 

ஒன்றிணைந்தும்,

கூடியும் குறைந்தும்

ஏதோவொன்றாய் ஒவ்வொரு

நொடியும் உருக்கொள்ளும்

என்னிலிருந்தும்

உன்னிலிருந்தும்

அனைவரிடமிருந்தும்

பிறந்து கொண்டே இருக்கும்,

எல்லாவுமாகிய அது!

Monday 23 November 2009

படுக்கை அறைப் பாட்டு!

சில விசயங்களைப் பற்றிப் பேசுவதற்கு மிகவும் கூச்சப்படுவோம்.

பொதுவாகப் பேசக் கூச்சப்படும் விசயங்களையும் நாசூக்காகச் சொல்லுவோம். அப்படி ஒரு மேட்டரைப் பார்ப்போம்.

பொது இடங்களில் பேசவே சிலர் கூச்சப்படுவார்கள். சார் “ ஒரு பாட்டுப் பாடுங்க” என்று கேட்டால் ஓடி ஒளிபவர்கள் அதிகம்.

இப்படி ஓடி ஒளிபவர்களும் ரசித்துப் பாடும் இடம் உண்டு. உங்களுக்கே தெரியும்- குளியலறைதான் அது!!

கல்யாணம் ஆனவுடனேயே நம்ம ஊரில் ஒரு கொடுமை நடக்கும். என்ன என்றால் அட்வைஸ்! ஆளாளுக்கு உபதேசம்!!

முன்னேமாதிரி விளையாட்டுப்பிள்ளை இல்லை நீ!! இப்போ உனக்குக் கல்யாணம் ஆகிவிட்டது. உன் வேடிக்கை , விளையாட்டையெல்லாம் நிறுத்திவிட்டு குடும்பப் பொண்ணா, லட்சணமா நடந்துக்கணும்!! சரியா?”

சிரித்து கலகலப்பாக இருந்த சுடிதார்ப் பெண்ணை ஒரு நாளில் புரட்டிப்போடும் கல்யாணம் பெண்ணிடத்தில் ஒரு பயத்தை ஏற்படுத்துகிறது.

எதற்காக ஒரு ஆணோ, பெண்ணோ திருமணத்துக்குப் பின் தன் சிறு சிறு விருப்பங்களை, சந்தோசங்களை இழக்க வேண்டும். இந்தச் சிறு சிறு சந்தோசங்கள்தான் வாழ்க்கையில் இன்பத்தைக் கொடுப்பவை.

சினிமாப் பாடலை டி.வி யில் பார்க்கும்போது பாடலுடன் சேர்ந்து  ரசித்துப் பாடுவது ஒரு இளைஞிக்கோ  இளைஞனுக்கோ  பிடிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதனை திருமணமானவுடன் ஏன் மாற்றிக்கொள்ள வேண்டும். சொல்லப் போனால் அப்படிப் பாடுவது நிச்சயம் மன இறுக்கத்தைக் குறைக்கும்.

குரல் எப்படி இருந்தால் என்ன!! எல்லோரும் லதா மங்கேஷ்கர் போலப்பாட முடியுமா? நீங்கள் லதாவின் குரலை ரசிப்பவராக இருக்கலாம்.

ஆனால் உங்கள் மனைவியின் குரல் அதை விட இனிமையாக இருக்கும். பாடச்சொல்லிக் கேட்டுத்தான் பாருங்களேன்!!

”என் மனைவி பாடமாட்டாளே!! கூச்சப்படுவாளே!” என்கிறீர்களா?   பாடுவார்கள்!! எல்லோரும் இருக்கும் ஹாலிலோ , பகலிலோ பாடக் கூச்சப்படலாம். ஆகையால் படுக்கும் போது நீங்கள் அவருக்காகவும் பாடுங்கள்!!  நிச்சயம் நெஞ்சுக்குள் பெய்யும் காதல் மழை!!!

”எப்படிச் சொல்கிறீர்கள்?” - என்கிறீர்களா? நானும் அவ்வப்போது பாடுகிறேனே!!!

என்னுடைய பேவரைட்” ராஜாப் பொண்ணு அடிவாடியம்மா, கொஞ்ச ஆனந்த நாட்டியம் ஆடடி!!”

உங்களுக்குப் பிடித்த  பாடலை நீங்களும் பாடுங்கள்!! நிச்சயம் வாழ்க்கையில் ஒரு சின்ன சந்தோசம் கூடும்!!

Saturday 21 November 2009

கட்டுப்படுத்த முடியாத சக்கரையா?

100% சக்கரையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியுமா? இது ஒரு மில்லியன் டாலர் கேள்வி.

பொதுவாகவே மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையில் ஒரு இடைவெளி உண்டு. அதாவது, மருத்துவர் உணவு இப்படியெல்லாம் சாப்பிடவேண்டும் என்று ஒரு கதைபோல் சொல்லுவார். நோயாளியும் வெகு சிரத்தையுடன் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு வீட்டுக்கு வருவார். அவர் சொன்னதில் பாதிதான் நோயாளிக்குப் புரிந்திருக்கும்.

மருத்துவரைச் சந்தித்து நான்கு நாட்கள் கழித்து யோசித்தால் அதிலும் பாதி மறந்து போய் இருக்கும். இந்த இடைவெளியை நிரப்புவதில்தான் சக்கரையைக் குறைப்பதற்கான சூட்சுமம் இருக்கிறது.

இந்த சூட்சுமத்தைப் புரிந்துகொள்வதற்கு முன் நாம் உணவின் சத்துக் குறிப்பீடு பற்றி அறியவேண்டும். நாம் உண்ணும் உணவுகளில் இத்தனை கிராமுக்கு இவ்வளவு சத்துக்கள் உள்ளன என்ற அளவுதான் அது.

ஏன் இது முக்கியம் என்று கேட்கிறீர்களா? மருத்துவர் மதியம் ஒரு கப் சாதம் அல்லது ஒரு பிளேட் சாதம் சாப்பிடுங்கள் என்று கூறுவார். ஆனால் எவ்வளவு பெரிய கப், எவ்வளவு பெரிய தட்டு என்று அளவு தெரியாது.

உதாரணத்துக்கு கார்த்தி, ஸ்ரீதர்,அன்பு என்று மூன்று பேர் வீட்டிலிருந்து அவர்கள் சாப்பிடும் தட்டைபோய்ப் பார்த்தால் கார்த்தியின் தட்டு பெரிதாகவும் ஸ்ரீதரின் தட்டு நடுத்தரமாகவும் அன்புவின் தட்டு சிறியதாகவும் இருக்கும்.(ஒரு குத்து மதிப்பாகக் சொல்கிறேன்!!)

அதே போல் கப்பின் அளவும் வீட்டுக்கு வீடு மாறுபடும். இது போல் இட்லி.தோசை சப்பாத்தி ஆகியவற்றின் எடை, அளவுபற்றி நாம் சொல்லவேண்டியதில்லை. இதற்கு என்ன செய்யவேண்டும்?

உண்வை எடைபோட்டுச் சாப்பிடவேண்டும்! சக்கரை நோயாளிகள் அனைவரும் இப்படித்தான் செய்ய வேண்டுமா? என்றால் எல்லோரும் செய்தால் நல்லதுதான்.

ஆனால் யாருக்கு இத்தகைய கட்டுப்பாடு மிகவும் அவசியம்?

1.உடல் எடை குறையாமல் இருப்போர் 2.இன்சுலினைக் குறைக்க விரும்புவோர் 3.இன்சுலினிலிருந்து மாத்திரைக்கு மாற விரும்புவோர் 4.சக்கரை கட்டுப்பாட்டில் இல்லாதோர் 5.சக்கரை நோயின் பக்கவிளைவுகளால் பாதிக்கப்படுவோர் 6.எச்.பி.ஏ.1.சி-இரத்தப் பா¢சோதனை-7%க்கு மேல் உள்ளோர்.

எப்படி, எவ்வளவு எடைபோட்டு சாப்பிடவேண்டும் என்று பார்ப்போம்.

காலை டிபன்-150 கிராம்

மதியம்-250 கிராம் சாதம்,

இரவு-150 கிராம் டிபனுடன் 100 கிராம் பழங்கள்,100கிராம் சுண்டல்

மூன்று வேளையும் 200கிராம் காய்கறிகள் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

இதற்கு அவசியம் ஒரு நிறுக்கும் தராசு வேண்டும். அதே போல் தினமும் எடை போடவேண்டும். இப்படி எடை போட்டு சாப்பிட்டு வீட்டிலேயே சுய பரிசோதனைக்கருவி மூலம் இரத்த சக்கரை அளவைக் கணித்து அதன் படி உணவின் அளவை மாற்றிக்கொள்ளலாம்.

நினைவில் கொள்ளவும்- சக்கரை 24 மணி நேரமும் சரியான அளவு இருந்தால்தான் சக்கரை வியாதியின் பின் விளைவுகளிலிருந்து தப்பிக்க முடியும்.

Wednesday 18 November 2009

ஆணும் பெண்ணும் சேர்ந்து குளிக்கலாமா? +18 !!

ஆணும் பெண்ணும் சேர்ந்து குளிக்கலாமா? படிப்பவர்கள் ஆச்சரியப்பட வேண்டாம்! திருமணமான ஆணும் பெண்ணும் சேர்ந்து குளிக்கலாமா? நிச்சயமாக சேர்ந்து குளிக்கலாம் என்று மனமொத்து வாழும் தம்பதியினரிடம் எடுத்த புள்ளி விபரங்கள் கூறுகின்றன!
 நம் நாட்டில் பொதுவாக சேர்ந்து குளிப்பது அபூர்வம். பெரிய குளியல் அறைகளோ, வீட்டில் நீச்சல் குளமோ இருக்காது. ஏன் குளிக்கும் பாத் டப் கூட நாம் உபயோகிப்பதில்லை! ஆனால் பிற நாடுகளில் படங்களில் பார்ப்பதுபோல் குளிப்பதையும் அனுபவித்துக் குளிக்கிறார்கள்.

இது ஒரு புறம் இருக்க தற்போது விவாகரத்து என்பது இளம் தம்பதியினரிடம் அதிகமாகிவருகிறது. வேலைக்குச் செல்லும் தம்பதியர்களில் இது மிகவும் அதிகம்!

விவாகரத்துக்கு சொல்லப்படும் காரணங்களில் பெண் பெரும்பாலும் வரதட்சிணை கேட்கிறான், அடிக்கிறான் போன்ற காரணங்களைப் பொதுவாகச் சொல்லுவார்கள்.

இரண்டுபேருக்கும் மனசு ஒத்துவரலைன்னு சொல்லுவதும் உண்டு.இதையும் மீறி பாலியல் சிக்கல்களும், உளவியல் பிரச்சினைகளும் நிறைய இருக்கு. அவற்றையெல்லாம் மேலோட்டமாக கண்டுபிடித்து திருத்துவது கஷ்டமான வேலை.

சரி, அதையெல்லாம் வல்லுனர்களிடம் விட்டுவிடுவோம். பொதுவா ஏதாவது புதுசா இருக்கா? புதுசுதான் ஆனா பழசு!

அதுதான் மணப் பிரச்சினை! மணப் பிரச்சினைன்னா.... உடல் மணப் பிரச்சினை!! இதென்ன பிரமாதம்ன்னு சொல்றீங்களா? நான் சொல்லலைங்க!! மலேசியா அரசாங்க்கமே சமீபத்தில் சொல்லியிருக்கு.

பொதுவாகவே ஒருவருக்கு தன் உடலின் மணம் அவருக்குத்தெரியாது. பக்கத்தில் இருப்போர் கதிதான் அதோகதி. பக்கத்தில் இருக்கும் நமக்கே இப்படின்னா கணவன் மனைவிக்கு எப்படியிருக்கும்?.

நிறையப் பெண்களுக்கு சினிமாத் தியேட்டருக்குள் சூழ்ந்திருக்கும் சிகரெட் புகை பிடிக்காது. குமட்டும். அந்தத் தொடர் புகைவண்டி ஆசாமியிடம் " அப்பா! வெளியே போய் ஊதிவிட்டு வாப்பான்னா" அவன் நம்மை ஒரு பார்வை பார்த்துட்டு வெளியே போவான். இல்லைன்னா சிகரெட்டை நசுக்குவான்.

இது இப்படின்னா வெளியூர் போகும்போது சில கார் டிரைவர்கள் அவசரத்தில் குளிக்காம வண்டியில் ஏறிவிடுவார்கள். காருக்குள்ளே நம்ம உட்கார முடியாது. இதெல்லாம் நல்லாத்தெரிந்தும் நம்மில் பலர் நம்ம உடல் மணத்தின்மேல் அக்கரை காட்டுவதில்லை.

சில பேர் நான் பவுடரே போடமாட்டேன்னு பெருமையா சொல்லிக் கொள்வார்கள். அதுல என் உடம்பில் கெட்ட மணமே வராதுன்னுவேறு!! தமிழ் நாட்டில் சாப்பிட்டவுடன் தாம்பூலம் போடுவதும் இதற்காகத்தான்( இது எல்லாருக்கும் தெரியும்). மலேசியாவில் நடந்த ஆராய்ச்சியில் பத்தில் மூன்று கல்யாணங்கள் விவாகரத்தில் முடியுதாம். அதற்குக் கூறப்படும் காரணங்களில் உடல் மணமும் ஒன்று.
பொதுவாக நான் பார்க்கும் புது மணத்தம்பதியினரிடம் பெண்ணிடமோ, ஆணிடமோ நல்ல மணம் இல்லாமல் இருப்பது கண்டால் உடனே  கூறி அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றும் அறிவுறை கூறிவிடுவேன். ஏனெனில்  பெரும்பான்மையானவர்களுக்கு இது பற்றிய விழிப்புண்ர்வு இருக்காது.

சேர்ந்து வாழும் தம்பதியினர் நல்ல துவைத்த சட்டை அணிவதையும், உடலில் சென்ட் போன்ற நறுமணப்பொருட்களை உபயோகிப்பதையும் விரும்புவதாகச் சொல்லியிருக்கிறார்கள்.தொள தொள உடைகளைவிட சரியான அளவுள்ள உடைகளே அவர்களுக்குப் பிடிக்குதாம்.

இதெல்லாம் எல்லோரும் செய்யலாம். கடைசியா ஒரு தம்பதியினர் சொன்னதுதான் ஆச்சரியம்!! ஆமாங்க, இருவரும் சேர்ந்து ஒன்றாகக் குளிப்பதுதான் அவர்கள் மணவாழ்க்கையின் ரகசியம் என்று கூறியிருக்கிறார்கள். சேர்ந்து ஒன்றாக வெளியில் செல்வதையே இன்னும் பலர் கடைப் பிடிப்பதில்லை. மனைவி அழகாக இல்லாத பலர் இன்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு மனைவியை அழைத்துச் செல்வதில்லை. அப்படியிருக்கும்போது சேர்ந்து குளிப்பது என்பது எவ்வாறு சாத்தியம். மிகவும் மனமொத்த தம்பதியினர் மட்டுமே இந்த அளவு அன்னியோன்னியமாக இருக்க முடியும்.
உடல் மணத்தில்  அக்கறை காட்டுதல் மிகவும் நல்லது. இதற்கு வாசனைத்திரவியங்கள் விலை அதிகமாகுமே என்று எண்ண வேண்டாம். புரூட் போன்ற டியோடரண்டுகளில் 24 மணிநேரம் உடல் நறுமணம் தரும் ஸ்பிரேக்களை  விற்கின்றன. ஆனால் தற்போது வரும் பாண்ட்ஸ் பவுடரே போதும். குளித்தவுடன் ஏதாவது ஒரு பவுடரை உடலில்  தடவினாலே போதும்.

மக்களே!! எல்லாத்தையும் கடைப்பிடிங்க!! உடல் மணத்தில் தம்பதியினர் கவனம் செலுத்துங்க.
ஜோக் நம் நாட்டுக்கு தம்பதிகள் சேர்ந்து குளிப்பது தேவையா? என்கிறீர்களா? இருக்கிற மக்கள் தொகையில். நம்ம நாடு தாங்குமா?.. !!! ஹி.... ஹி... ஹி..!!!

Tuesday 17 November 2009

மோசமானவைங்கள்ளேயே முக்கியமானவைங்க!!!

ஏர் இந்தியாவில் ஆப்பிரிக்காவில் இருந்து  வந்திறங்கிய நண்பனையும் அவன் நண்பர்களையும் என் நண்பர்கள் புடைசூழ வரவேற்றேன்.

வாடா மாப்பிள்ளை!! எப்படியிருக்கீங்க எல்லாம்? என்று வழக்கமான கேள்வியைக் கேட்டேன்.

அதுதான் பார்க்கிறாயே!! எப்படியிருக்காங்க நம்ம தோஸ்துங்கள்ளாம் பார்த்தியா?

அப்போதுதான் அவன் கூட வந்தவர்களைப் பார்த்தேன். எல்லாம் செம கெட்டப்பில் இருந்தார்கள்.  நமக்கு   ஆப்பிரிக்கா நண்பர்கள் அதிகம்!! நிறையப் பேரைத் தெரியும். இருந்தாலும் இவர்கள் போன முறை வந்தவர்கள்தான்.

கொடிய வியாதிகளில் ஆராய்ச்சி மாணவர்களான அவர்கள் இரண்டு குழுவாக இருந்தனர். இரண்டு குழுக்களிலும் நிறையப்பேர்  இளம் வயதினராகவும் நல்ல சக்திவாய்ந்தவர்களும்  இருந்தனர்.

இந்த இடத்தில் நாங்கள் யார் என்று கொஞ்சம்  சொல்லிவிடுகிறேன்.

நாங்கள் ஒன்றும் நாட்டுக்கு நல்லது செய்யும் ஆராய்ச்சியாளர்கள் அல்ல!!! இது மட்டும் இப்போது போதும்.

சரி!! நீங்கள் வந்திறங்கியது அரசாங்கத்துக்குத் தெரியுமா?  பயணம் எப்படி? ஏர் இந்தியா எப்படி? அடுக்குக் கேள்விகள் சரமாகத் தொடுத்தேன். கொஞ்சம் தெரியும். ஆனால் இப்போது இந்தக்குழு வந்திருப்பது தெரியாது என்று நினைக்கிறேன்.

ஏர் இந்தியாவில் மழையினால் கொஞ்சம் சிரமமாக இருந்தது. மற்றபடி ட்ராவல் ஓகேதாண்டா!!

சரி!! நீ ஏண்டா சோகமா இருக்கே!! ”எங்கேடா இந்தியாக் காரனுக்கு இந்தியாவில் எவன் பயப்படுகிறான். 

சரி வாங்க!! போய் ரெஸ்ட் எடுத்துக் கொண்டு வேலையை ஆரம்பிப்போம்!!

மனித உடலில்  புதுப் புது பிரச்சினைகளை உண்டாக்கும்  என் நண்பர்களை அழைத்துக்கொண்டு கிளம்பினேன் நான்!!

இவர்கள் தாக்கிய மனிதர்களிடமிருந்து எனக்கும் ரத்தம் கிடைக்கும் அல்லவா!!! ..ஹி   ...ஹி   ..ஹி!!

பின்குறிப்பு:

1.ஏர் இந்தியா- இந்தியக் காற்று!

2.இரண்டு குழுக்கள்- 1.சிக்குன் குன்யா 2. டெங்கு கொசு வைரஸ் குழுக்கள்!!

3.நான் - சாதாக்காய்ச்சல் கொசு!!

சும்மா மொக்கையாக எழுதியது!! சீரியஸா அறிவியல் பூர்வமா சிந்தித்து மணடையைக் குழப்பிக்கொள்ள வேண்டாம்.

படிச்சிட்டு சிரிச்சுட்டுப் போங்க!

நகைச்சுவை, மொக்கை 

Sunday 15 November 2009

பிரேதப்பரிசோதன- நீரில் மூழ்கி இறப்பு!

 

சமீபத்தில் விஜய் டி.வி. "நடந்தது என்ன?" நிகழ்ச்சியில் தன் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தொடர்ந்து போராடும் ஒரு தந்தையைப் பற்றி ஒரு நிகழ்ச்சி வந்தது.

கல்யாணாமாகி சென்ற மகள் ஏரியில் மூழ்கி இறந்ததாகக் கூறப்படுவதை மறுத்தும் போஸ்ட்மார்ட்டம் பற்றி சந்தேகப்பட்டும் பல கேள்விகள், சந்தேகங்கள் அதில் சொல்லப்பட்டன.

தண்ணீரில் மூழ்கி இறந்தால் எப்படி இறப்பு ஏற்படும் என்பது நம்மில் பலர் அறியாத ஒன்று. ஆனால் அவசியம்  நாம் இதைப்பற்றித் தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும். அறிவியல் விளக்கங்களெல்லாம் தெரியாவிட்டாலும் சில அடிப்படை விசயங்கள் நமக்குத் தெரிய வேண்டும்.

நாம் அதுபற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.

ஒவ்வொரு வருடமும் ஏறத்தாழ 150000 பேர் நீரில் மூழ்கி இறக்கின்றனர்.

பொதுவாக தண்ணீரில் மூழ்கிய 4-8 நிமிடத்தில் இறப்பு ஏற்படுகிறது.

பிரேதப்பரிசோதனையில் தண்ணீரில் மூழ்கி இறந்ததைக் கண்டுபிடிக்கமுடியுமா?

நீரில் மூழ்கி இறந்த உடலில் பல வெளிப்புற உடல் மாற்றங்கள் இருக்கும். உதாரணமாக நீண்ட நேரம் தண்ணீரில் மூழ்கி இருந்தால் கையில் தோலெல்லம் சுருங்கிக் காணப்படும். இதுபோன்று நிறைய விசயங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் விடுத்து முக்கியமானவைகளை மட்டும் பார்ப்போம்.

தண்ணீரில் மூழ்கிய உடலில்

1.மூக்கிலும் வாயிலும் நுரை தள்ளியிருக்கும்.

2.கைகளில் செடி,கல் போன்றவை கெட்டியாகப் பிடித்து கை இறுக்கமாக மூடியிருக்கும்.

3.மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரலில் நுரை காணப்படும்.

4.நுரையீரல் வீங்கி தண்ணீருடன் காணப்படும்.

5.தண்ணீர் இரைப்பை, குடலில் இருக்கும்.

6.ஏரி,குளத்தில் காணப்படும் டையடோம்ஸ் எனப்படும் நுண் தாவரங்கள் நுரையீரல் மற்றும் உடல் திசுக்களில் காணப்படும்.

இவற்றை வைத்துத்தான் பிரேதப் பா¢சோதனையில் நீரில் மூழ்கி இறந்ததைக் கண்டுபிடிக்கிறோம். சரி! அதுதான் இதை வைத்துக் கண்டுபிடிக்கலாம் என்கிறீர்களே!! அப்புறம் என்ன பிரச்சினை என்கிறீர்களா? பிரச்சினை உள்ளது.

தண்ணீரில் மூழ்குபவர் வாய்வழியாகத் தண்ணீர், தொண்டை, மூச்சுக்குழாய், நுரையீரல் ஆகியவற்றில் உறிஞ்சப்பட்டு நுரையீரல் வீங்கிக்காணப்படும். நுரையீரலில் நுரை,இரத்தத்துடன் அதிக அளவு நீர் இருக்கும்.  தண்ணீரில் மூழ்கி இறப்பவர்களிடம் 80%மேல் சொன்னது போல் நுரையீரல் வீக்கம் காணப்படும்.

தண்ணீரில் மூழ்குபவர் தண்ணீருக்குள் மூழ்கி மூச்சுக்காகப் போராடி இறக்கும்போது மேல்சொன்ன நுரையீரல் மாற்றங்கள் இருக்கும்.

ஆனால் தண்ணீரில் மூழ்குபவர் வேறுவிதங்களிலும் இறக்க வாய்ப்பு உள்ளது

கீழ்க்கண்டவாறு இறப்பவர்களில் மேலே சொன்னதுபோல் நுரையீரல் மாற்றங்கள் இருக்காது.

1.குளிர்ந்த நீர் உடலில் பட்டவுடன் நரம்புகள் தூண்டப்பட்டு ஏற்படும் உடனடி மரணம்.

2.தண்ணீரில் விழுந்தவுடன் மயங்கி இறத்தல்.

3.தண்ணீரில் விழுந்தவுடன் கல், பாறை போன்ற பொருள்மீது தலைமோதி உடன் மரணம்.

ஆகிய மேலே சொல்லப்பட்டவிதத்தில் இருந்தால் பிரேதப் பரிசோதனையில் மாற்றங்களிருக்காது. ஆகையால் ஒருவர் தண்ணீரில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா இல்லை தண்ணீரில் விழுவதற்கு முன்பே இறந்தாரா என்று கண்டு பிடிப்பது பிரேதப் பரிசோதனையில் சிரமமாகிறது.

பிரேதப் பரிசோதனை முடிவுகளை மட்டும் கருத்தில் கொள்ளாமல் தீவிர விசாரணை மூலமே இத்தகைய இறப்புக்களைக் கண்டுபிடிக்க முடியும்.

தண்ணீரில் மூழ்கி இறப்பதில் நிறைய விசயங்கள் உள்ளன. ஆனால் அவற்றின் சாரத்தை  சுருக்கமாக  நான் இங்கு கொடுத்துள்ளேன்.

உங்கள் கேள்விகளைப் பொறுத்து விளக்கங்களைத் தருகிறேன். 

Thursday 12 November 2009

தெற்கத்திக்கார்!! வடக்கத்திக்கார்!!!

தெற்கத்திக்கார், வடக்கத்திக்கார் - தலைப்பைப் பார்த்தவுடன் சிலருக்குப் புரிந்திருக்கும்!!

பலருக்கு இது என்னவென்றே தெரியாது!! சமீபத்தில் ஒரு கட்டுரை படிக்கும்போது எதையும் இயற்கையோடு சாப்பிட்டால் உடல் நலத்துக்குக் கெடுதல் குறைவு என்று.

சப்பாத்தி சாப்பிட்டும் நிறையப்பேர் சக்கரை குறையவில்லை என்று வருத்தப்படுகிறார்கள். காரணம் என்ன? தற்போது கோதுமை மாவு யாரும் கோதுமை வாங்கி அரைத்து உண்பது இல்லை. கோதுமை மாவாகவே பாக்கெட்டுகளில் வருகிறது. அதனையே வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். பாக்கெட்டில் வரும் மாவில் கோதுமை உமியானது நீக்கப்படுகிறது. அதன் தோல்பகுதி நீக்கப்பட்டு வெறும் மாவுப்பகுதி சலிக்கப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு வருகிறது. இது சலிக்கப்படாமல் வாங்கி அரைக்கும் கோதுமை  மாவைவிட அதிகமாக சக்கரையை உயர்த்தும்!! ஆகையால் தோலுடன் அரைக்கப்பட்ட கோதுமை ரொட்டியே நல்லது.

அதேபோல் கோதுமை தோசை எடை அதிகம். அது சக்கரையைக்கூட்டும். 

கிராமங்களில் பாலிஷ் செய்யப்படாத  நீளமான அரிசியில் சோறு வடிப்பார்கள். அதற்கு வெள்ளைக்கத்தரிக்காயில் குழம்பு வைத்து சாப்பிடும்போது மிகவும் சுவையாக இருக்கும். அந்த நீளமான அரிசி வகையில் பிரபலமானவையே கார் அரிசி வகைகள். தற்போது நாம் சிறு பொன்னி வகை அரிசி உண்பதால் இந்தக் தெற்கத்தி, வடக்கத்திக்கார் வகைகள் நிறைய பயிரிடப்படுவதில்லை. அப்படிப் பயிரிட்டாலும் அவை கேரளாவுக்கு  நல்ல விலைக்கு விற்கப்படுகின்றன. நாம் கர்நாடகா, ஆந்திரா பொன்னியை சாப்பிடுகிறோம்.

இந்த சின்ன தீட்டப்பட்ட அரிசியை சாப்பிட்டுப் பழகிய நாக்கு கார் அரிசியைச் சாப்பிடுமா? கேரளாக்காரர்களால் முடிகிறது, நம்மால் முடியவில்லை!!

Monday 9 November 2009

கொஞ்சம் தேநீர்-மழைக் காதல்!

image

உன் கண்களில்

தெறிக்கும் மின்னலில்,

இன்று பெய்யவிருக்கும்

மழைக்கான குறிப்புகள்!

 

சாளரம் தாண்டி அடிக்கும்

கூதல் காற்றில்

வாடையில் கிளர்ந்தெழும்

உன் உடலின்

மணம்!

 

உன் மோகச்சுரப்பிகளினின்றும்

பெருகும் காதல் மழையில்

மீண்டும் மீண்டும்

மூழ்கிப் பிறக்கிறேன்

நான்!!

 

கூரையில் பெய்யும்

மழையின் சத்தத்தில்

நம் இதழ் சுரங்கள்

புணர்ந்து பிறக்கும்,

நமக்கு

மட்டுமேயான

உயிர் ராகம்!!

 

மறைந்தும் நிர்வாணமாயும்

மழையை

வரவேற்கும்

உன் உடல் பூமி.

 

ஓசை வலுத்த

ஒரு கணத்தில்

புதைந்து கிடந்த

ஆழங்களில் பெய்தது

சிறு துளிகளால்

ஆன

அந்தப் பெருமழை!!!

Saturday 7 November 2009

அடிக்‌ஷன்! - குறுங்கதை!!

”ஏங்க !!! இங்கே ஒரு நிமிடம் வாங்களேன்” மனைவியின் குரல் கேட்டது.

அமைதியாக இருந்தான் ஸ்ரீ !

”கூப்பிட்டா உடனே வரமாட்டீங்களே!”  மனைவியின் குரலில் கொஞ்சம் காரம் ஏற ஆரம்பித்திருந்தது!!

இதுதான் எச்சரிக்கை மணி!! இனியும் எழுந்து உள்ளே போகாவிட்டால்  அடுத்து ......கடுகு தாளிப்பது போல் பொரிய ஆரம்பித்து விடுவாள்.

ஏற்கெனவே எழுத உட்கார்ந்து யோசித்து மண்டையை உடைத்துக்கொண்டாலும் ஒன்றும் பிடிபடாத கடுப்பு வேறு ஸ்ரீக்கு!!

சரி ! மனைவியின் அடுத்த குரல் வருவதற்குள் ஹாலுக்குள் நுழைந்தான்.

ஹாலில் டி.வி.ஓடிக்கொண்டிருந்தது!! மூத்த மகன் கார்த்தியும், இளையவன் அன்புவும் “ ஜெட்டிக்ஸ்” ல் சீரியல் பார்த்துக்கொண்டிருந்தனர்.

கையில் கரண்டியுடன் கோபாவேசத்துடன்  நிற்கும் மனைவியைப் பார்த்தவுடன் ஸ்ரீக்கே கைகால் லேசாக நடுங்க ஆரம்பித்தது!!

”இப்பப் பாருங்க மணி 8 ஆகுது!! 6 மணிக்கு படிக்கிறேன்னு உட்கார்ந்த ரெண்டு பேரும் இன்னும் படித்து முட்டிக்கலை” டி.வி தான் பார்க்கிறாங்க!!

உங்கப்பா சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறாங்க!! நீங்க சொல்லுங்க”

ஹாலில் அப்பா ’சீனா’ ஈசி சேரில் பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். இவனைப் பார்த்துவிட்டு மீண்டும் பேப்பருக்குள் மூழ்கிவிட்டார்.

ஸ்ரீக்கு கட்டுரையை முடிக்க முடியாத எரிச்சல் வேறு!

”ஏண்டா! அம்மா சொன்னாக் கேக்க மாட்டிங்களா?” கோபத்துடன் கார்த்தியை ரெண்டு அப்பு அப்பினான. டி.வி.யை அணைத்தான்.

பசங்க ரெண்டு பேரும் பயத்துடன் புத்தகத்தில் முகத்தை மறைத்துக்கொண்டு படிக்கும் பாவனையில் இருந்தார்கள்.

“ இதிலேயே அடிக்ட் ஆகிட்டானுங்க!! இந்தட் டீவி கேபிளைக் கட் பண்ணாதாண்டா நீங்க சரியா வருவீங்க..”  கோபத்துடன் கத்தினான்.

’கப் சிப்’  ஹாலில் நிசப்தம்!!

சே!! அலுப்புடன் வந்து நான்கு மணி நேரமாக யோசித்தும் பாதி கூட முடியாத கட்டுரையை எழுத ஆரம்பித்தான் தன் பிளாகில்!!!

Thursday 5 November 2009

பிடித்ததும்!! பிடிக்காததும்!!!

இரண்டு நாட்களாக எதையுமே எழுதப் பிடிபடவில்லை! உண்மைதான். ஏதாவதொரு அலுவல் அல்லது சின்னப் பிரச்சினைகள்  இருந்தால்கூட மனது அதை ஒட்டியே சிந்திக்கிறது. அதை முடித்தால்தான் அடுத்தவேலை செய்யமுடிகிறது. 

பதிவுகள் பயன்பெறும் வகையில் இருக்கவேண்டும் என்று மனது சொல்கிறது. மொக்கையாக, ஜாலியாக எழுது என்று அதே மனதின் இன்னொரு பக்கம் சொல்கிறது.

அனேகமாக மனித மனமே இப்படித்தான் என்று நினைக்கிறேன். இதில் நம் மனதுக்கு, அறிவுக்கு தெரிந்த விசயங்களைக் கொண்டே நாம் பிடித்தது பிடிக்காதது என்று அபிப்பிராயப்படுகிறோம்.

அதே போல் ஒரு முக்கிய பிரமுகரை நாம் நேரில் சந்தித்துப் பேசிப் பழகி இருக்க மாட்டோம். உதராணம்: அரசியல்வாதிகள், திரைப்படத் துறையினர். ஆனால் அவர்களின்  செயல்களை நாம் பத்திரிக்கை, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களின் மூலம்தான் அறிந்துகொள்கிறோம். அனைவரும் அனைத்துச்செய்திகளையும் படித்திருப்பது என்பது சாத்தியமான ஒன்று அல்ல.

பதிவர்களை எடுத்துக் கொண்டால் பிடித்தவர் என்று பலர் குறிப்பிட்டிருக்கும் பலரை நான் படித்ததே இல்லை. எல்லோரும் எல்லோருடைய பதிவுகளையும் படித்திருக்க முடியாது. அப்படியே படித்தாலும் பதிவரின் எல்லாப் பதிவுகளையும் படித்திருக்க முடியாது. இதுவே உண்மை. ஆகையால் பிடித்தது பிடிக்காததை படிக்கும் நண்பர்கள் சீரியசாக( இதற்கு இணையான தமிழ்ச்சொல் சட்டென்று நினைவுக்கு வரவில்லை!!) எடுத்துக் கொண்டு பின்னூட்டமிட வேண்டாம் என்று நான் உங்களிடம் சொல்லமுடியாது. ஏனெனில் பல நேரங்களில் உணர்வுபூர்வமான பதில்களும், எதிர்வினைகளும் ஒரு  பதிவுக்கு ஒருவிதமான  சுவையையும், சுவாரசியத்தையும் ஊட்டுவது உண்மைதான். அதுவே பலருடைய கருத்துக்களையும் நாம் அறிந்துகொள்ளவும் உதவுகிறது. ”உங்கள் பதிவு அருமை” என்று வரும் பின்னூட்டங்களைவிட இவற்றில் அதிகம்தானே!!

சரி..சரி.. கத்தி போட்டது போதும்! என்று பலர் முனுமுனுப்பது கேட்கிறது!!!

பதிவர் நண்பர் பீர்  என்னை பிடித்ததும் பிடிக்காததும் எழுத அழைத்திருக்கிறார்.

என் பதிவுகளின் காட்டம் தாங்க முடியவில்லை அவரால்........

பீர் | Peer said...

டாக்டர், பதிவுகள் ரொம்ப சீரியஸா போய்கிட்டிருக்கு...
வாங்க, ஷார்ட் கமர்ஸியல் ப்ரேக் எடுத்துக்கலாம். உங்களை ஒரு தொடர் பதவி விளையாட்டிற்கு அழைத்துள்ளேன்.
பத்துக்கு பத்து - பிடித்ததும் பிடிக்காததும்

ஆயினும்

பிடித்த பதிவர்..பிடிக்காத பதிவர் ல் நர்சிம் என் இடுகைக்கு பதக்கம் அளித்து விட்டார்.
 
9.பிடித்த பதிவர் :இதில் பிடித்த பதிவு என்று இருக்க வேண்டும்.சமீபத்தில் டாக்டர் தேவன்மயம் எழுதிய விரிவான கட்டுரை பிடித்திருந்தது.
 

மிக்க நன்றி நண்பரே!! இத்தகைய பாராட்டுக்களே பதிவில் கிடைக்கும் மகிழ்ச்சி!!! வேறு என்ன வேண்டும் நமக்கு!!

இந்தப் பதிவோட விதிகள்:

1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும்.

2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்.          

3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம்.                                                                       

4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.

இனி
1.அரசியல் தலைவர் :
 அ.கலைஞரிடம்:

பிடித்தது: அரசு ஊழியர் மீது அன்பு காட்டுவது!  ஏழைகளுக்கும் மருத்துவக்காப்பீடு அளித்தது.

பிடிக்காதது: ஈழத்தமிழர் விசயத்தில் விரைவான முடிவு எடுக்காதது!

ஆ. ஜெயலலிதாவிடம்:

பிடித்தது: மன உறுதி!

பிடிக்காதது: அரசு ஊழியர்கள்கள் மேல் அடக்குமுறையைப் பிரயோகித்தது, ஆடம்பரத்தை வெளிக்காட்டி நம் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டது!

2.எழுத்தாளர்

நான் படித்ததில் அசோகமித்திரன் - தண்ணீர்!

தி.ஜானகிராமன்: மரப்பசு

லா.ச.ரா: அபிதா

மனைவியின் மரணம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட ஸ்டெல்லா ப்ரூஸின் - அது ஒரு நிலாக் காலம்!

பிடிக்காதது: எவருமில்லை! எல்லோருடைய எழுத்துக்களிலும் ஏதாவதொரு சங்கதி இருந்துகொண்டே இருக்கிறது...

3.கவிஞர்
பிடித்தவர் :கமலாதாஸ்,

பழமலய், சுகிர்தராணி

பிடிக்காதவர்:

நான்!! தொடர்ந்து கவிதை எழுத முயற்சித்தும் வார்த்தைகளையும் கருவையும் கலக்க முடியாததால்!!!

4.இயக்குனர்
மகேந்திரன்: உதிரிப்பூக்கள்!

மணிரத்தினம்: நாயகன்

கமலஹாசன்: விருமாண்டி


5.நடிகர்
பிடித்தவர் :

சிவாஜி: மிகைநாடிய கலைஞனாக இருந்தாலும் ! பாசமலர், பாவமன்னிப்பு ..... இன்ன பிற!!

கமலஹாசன்: நாயகன், விருமாண்டி...

ரஜினி: இமயமலையின் இடுக்குக் குகைக்குள் நுழைந்தது ஒரு ஆச்சரியம்!


6.நடிகை
பிடித்தவர் : பத்மினி- தில்லானா மோகனாம்பாள்

ஷோபா: முள்ளும் மலரும், பசி

ஸ்ரீதேவி: மூன்றாம் பிறை

 

7.இசையமைப்பாளர்
பிடித்தவர் : இளையராஜா

பிடிக்காதது: பிடிக்கவில்லை என்று எழுத!!( கலைஞர், ஜெ தவிர!!)

 

தொடர அழைப்பது
1.நேசமித்திரன் http://nesamithran.blogspot.com/2009/11/blog-post_04.html 

2. அம்மா அப்பா-ஆ.ஞானசேகரன்

3.மேனகா சாத்தையா-.Mrs.Menagasathia.

4.ஹரிணிஅம்மா-http://www.hariniamma.blogspot.com/

5.கிரி -கிரி Blog

தமிழ்த்துளி தேவா

Tuesday 3 November 2009

சக்கரை நோயாளிக்கு வரும் தொற்று நோய்கள்!- தடுக்க 14 குறிப்புகள்!!

 

 

சக்கரை நோயாளிகளுக்கு சக்கரைநோய் தவிர வேறு தொற்றுநோய்களும் வருகின்றன. அவற்றை அறிந்துகொள்வது அவர்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பதற்கும் நோய்கள் வருவதற்குமுன் தடுத்துக் கொள்ளவும் உதவும்.

சக்கரை நோய் கட்டுப்பாட்டில் இருத்தலே மிக நல்லது. கட்டுப்பாட்டில் இல்லாத சக்கரையினாலேயே உடலில் நோய் எதிர்ப்புசக்தி குறைந்து நோயாளிகள் பல இன்னல்களுக்கும் ஆளாகிறார்கள்.

1.கால்கள்:சக்கரை நோயாளிகளுக்கு கால்களில் பாதத்தில் உணர்ச்சிக் குறைவு, மதமதப்பு ஆகியவை ஏற்படும். அதனால் காலில் அடிபட்டால் அதனை உணரும் தன்மை குறைந்து இருக்கும். இதனால் காலில் ஏற்படும் காயத்தில் நோய்க்கிருமிகள் பெருகி ஆறாத புண் ஏற்படுகிறது. இதனால் விரல்களையும் பல நேரங்களில் காலையும் எடுக்க நேரிடுகிறது.

2.சிறுநீரகம்: சிறுநீர் கழிக்கும் பகுதியில் வெடிப்பு, சிறுசிறு புண்கள், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், பெண்களுக்கு வெள்ளைப்படுதல் ஆகியவை ஏற்படுகின்றன.

3.வயிறு, குடல்:அசுத்தமான தண்ணீர், சுகாதாரமற்ற உணவுகளால் வயிற்று வலி,வயிற்றுப் போக்கு ஆகியவை ஏற்படுகின்றன.

4.மூக்கு: சளி அடிக்கடி பிடித்தல், தொண்டைவலி, காய்ச்சல் ஆகியவை சாதாரணமாக எல்லோருக்கும் ஏற்படும். ஆனால் சக்கரை நோயாளிகளுக்கு விரைவில் குணமாகாமல் நாள்பட இருக்கும். அதுபோல் அடிக்கடி சளி,காய்ச்சல் ஏற்படும்.

5.பல்,ஈறுகள்: பற்கள்,ஈறுகளில் வீக்கம், சீழ்வடிதல் ஆகியவை ஏர்படலாம். ஆகையால் பற்கள்,ஈறுகளில் கவனம் வைப்பது அவசியம்.

6.கண்கள்: கண்களில் கட்ட்டிகள், கண்ணின் வெண்ணிறப் பகுதியில் வைரஸ் தொற்றால் ஏற்படும் (கஞ்சங்டிவைடிஸ்) ஆகியவை ஏற்படலாம்.

7.காது: காதில் நுண்கிருமிகள் தொற்று ஏற்பட்டால் காதில் சீழ்பிடித்தல் ஏற்படும்.

இவை நுண் கிருமிகளால் ஏற்படும் தொற்றுநோய்கள்தான். சக்கரை வியாதியின் பின்விளைவுகள் என்பவை வேறு.

தொற்றுக்களை தடுக்க:

1.சக்கரை கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்.

2.ஊட்டச்சத்து, நுண்ணுயிச்சத்துக்கள்  நிறைந்த உணவுகள் சாப்பிடுவது.

3.ஆரஞ்சு,எலுமிச்சை ஆகிய விட்டமின் சி நிறைந்த உணவு சாப்பிடுதல்.

4. உடற்பயிற்சி,மூச்சுப் பயிற்சி

5.தினமும் 2 முறை பல் விளக்க வேண்டும்.

6.தினமும் 1 அல்லது 2 முறை குளிக்கவேண்டும்.

7.வெளியில் சுகாதாரமற்ற உணவுகள் சாப்பிடக்கூடாது.

8.சுத்திகரிக்கப்பட்ட நீரானாலும் 3 நிமிடம் கொதிக்கவைத்து குடிக்க வேண்டும்.

9.சிறுநீர் கழிக்குமிடத்தில் புண் உள்ளவர்கள் சிறுநீர் கழித்தவுடன் சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும்.

10.வெளியில் சாப்பிட்டால் சாலட், சட்னி, தண்ணீர் போன்றவற்றைத் தவிர்க்கவும்.

11.சாப்பிடும் முன் கைகளை 5 நிமிடம் சோப்பால் கழுவவும்.

12.பிரிஜ்ஜில் வைத்த உணவை தவிர்க்கவும். மூன்று வேளையும் புதிய உணவே உண்ணவும்.

13.கால்களை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும்.

14.மீறி தொற்றுநோய் ஏற்பட்டால் உடன் மருத்துவரை அனுகவும்.

Saturday 31 October 2009

இதய நோய் வருமா?-இந்த 5 பாயிண்ட் இல்லைன்னா ஓகேதான்!!

நம்மில் பலருக்கு இந்தக் குழப்பம் இருக்கும். பலருக்கும் திடீரென்று ஹார்ட் அட்டாக் வருகிறதே? எப்படி? ஏன்?

ஹார்ட் அட்டாக் வருவதை முன்னரே கண்டுபிடிக்க முடியாதா?

கண்டுகொள்ளலாம். அதற்கு சில வழிகள் உள்ளன. கீழே கொடுத்துள்ள ஐந்து தவறான அளவுகள் (கீழே கொடுத்துள்ள ஐந்தும் நார்மல் அளவுகள் அல்ல,  ரிஸ்க் அளவுகள்!!!) உள்ளதா என்று பார்த்தால் போதும்.

கீழெ உள்ள இருக்கக் கூடாத ரிஸ்க் அளவுகள்:

1.ரத்த அழுத்தம்- 130/85 க்கு மேல்.

2.அதிகாலை வெறும் வயிற்றில் சர்க்கரை-100 மி.கி/டி.எல் க்கு மேல்.

3.T.G.L டி.ஜி.எல்-கொலெஸ்ட்ரால்-150 மி.கி/டி.எல் க்கு மேல்.

4.H.D.L கொலஸ்ட்ரால்:

                       ஆண்களுக்கு 40 மி.கி/டி.எல் லுக்கு கீழ்

                       பெண்களுக்கு 50 மி.கி/டி.எல் லுக்கு கீழ்

5.இடுப்பு சுற்றளவு:

                       ஆண்கள்: 90 செ.மீ.க்கு மேல்

                       பெண்கள்: 85 செ.மீ.க்கு மேல்.

இந்த ஐந்து காரணிகளில் ஏதேனும் மூன்று உங்களுக்கு இருந்தால் இதய நோய் வரும் வாய்ப்புகள் உள்ளதாகக் கருதலாம்.  அதற்கான முறையான சிகிச்சை, உடற்பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்வது அவசியம்..

Friday 30 October 2009

பேராண்மை-8!

 

வீட்டில் டி.வி.டி க்களிலேயே படம் பார்க்கும் இந்நாளில் பேராண்மை திரைப் படத்தை நான் தியேட்டரில் பார்க்கும் வாய்ப்பு அமைந்தது. இந்தப் படத்தில் கண்ட சில முக்கிய விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 

1.சராசரி தமிழ்க் கதாநாயகனுக்காகக் கதையை  மாற்றி அவருக்காக பிரத்தியேகக் காட்சிகளைப் புகுத்தி ஏகப்பட்ட பில்டப்பில் நடந்து வரும் கதாநாயகனை இதில் காணோம். 

2.பழங்குடி இன மக்கள் இந்தியக் காட்டுப் பகுதிகளில் துன்புறுத்தப் படுவதையும் இடம் பெயர்வதையும் சிறிதளவேணும் காட்ட முயன்றிருப்பது அருமை.

3.படம் ஆரம்பித்ததிலிருந்து கதாநாயகி எங்கே என்று தேடும் சராசரி தமிழ்ப் படபாணியிலிருந்து துணிச்சலாக விலகி நாயகி இல்லாத ஒரு தமிழ்ப் படம்! ஆச்சரியம்!

4.தமிழ் சினிமாவின் அத்தியாவசியப் பொருளான காமெடி ட்ராக்கை கையிலெடுத்தாலும் அடக்கி வாசித்திருப்பது டைரக்டரின் தைரியம்தான்.

5.கல்லூரிப்பெண்களின் துடுக்குத்தனங்களை நன்றாகச் சித்தரிக்கும்  அதே நேரம் இரட்டை அர்த்த வசனங்களைத் தவித்திருக்கலாம்.

6.மார்க்ஸியத்தை அவ்வப்போது தொடும் இயக்குனர் அதேபோல் பழங்குடியினர் பிரச்சினையையும் ஊறுகாய்போல் தொட்டிருக்கிறார். ஆகையினால் பழங்குடியினர் இடம்பெயருவதெல்லாம் மனதைத் தொடாமல் மேம்போக்காக உள்ளது.(படத்தின் மையக்கதை வேறு என்பது ஒரு காரணம்).

7.உடல் தகுதியில்லாத  கதாநாயகர்கள் போல் அல்லாமல் தற்கால தமிழ்க் கதாநாயகர்கள் உடல் விசயத்தில் அக்கறை காட்டுவது, சிக்ஸ்பேக் அமைப்புக்களுடன் வருவது வரவேற்கத் தகுந்த விசயம். ஜெயம் ரவியின் உடல் உழைப்பும் படத்தில் தெரிகிறது.

8.சரித்திரத்தில் இடம் பெறாத, பெயர் தெரியாத எண்ணற்ற வீரர்கள் காடுகளிலும் எல்லைப் புறத்திலும் தாய் நாட்டுக்காக உடல்,உயிர் இழக்கும் தியாகத்தைப் படமாக்க நினைத்திருப்பது போற்றப்பட வேண்டிய விசயம்.

தமிழ்ப் படத்துக்கே உரிய சில குறைகள் இருந்தாலும் அவற்றை நான் இங்கு எழுதவில்லை.

Thursday 29 October 2009

இன்றைய பெண்களின் பிரச்சினைகள்!-பாகம்-3.

அன்பின் நண்பர்களே!! பெண்களின் பிரச்சினைகள் என்று நாம் சொல்லும் வேளையில் ஆண்களும் அதில் பங்குள்ளவர்கள் பாதிக்கப்படுகிறவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே! அதே போல் இதில் பல பிரச்சினைகள் வேலைக்குப் போகும்,போகாத, சுயதொழில் செய்யும் பெண்கள் என்று அனைத்துத் தரப்பினருக்கும் பொதுவாகவே இருப்பதையும் நாம் பார்க்கிறோம். ஆகையால் உறவுகளுக்குள் உள்ள பிரச்சினைகளைப் பார்க்கும்போது அவை குடும்பத்திற்குப் பொதுவானவையாகவும் அமைகின்றன!

மிகவும் எளிய பிரச்சினை என்று எண்ணும் விசயங்கள் கூட நம்மை மிகவும் பாதித்துவிடுகின்றன.முதலில் சரியான தூக்கம், எந்த வேளை உணவையும் தவிர்க்காமல் சரியான நேரத்தில் உண்பது, கொஞ்சம் உடற்பயிற்சி ஆகியவை உங்கள் தினசரிக் கொள்கையாக மாற்றிக் கொள்ளுங்கள்.

காலையில் உணவு சரியாக உண்ணாதவர்கள் அதன் பின் அன்றைய தினசரி வேலைகளைச் சரியாகச் செய்யமுடியாது. காரணம் உடலில் தேவையான அளவு சக்தி இருக்காது. உடலில் குளுக்கோஸ் (சக்தி) குறையும் போது, எரிச்சல், கோபம், வேலையைச் சரியாகச் செய்ய முடியாமை ஆகியவை ஏற்படுகின்றன! நீங்கள் நினைத்துப்பாருங்கள் காலையிலேயே வேலைகளைச் சரியாகச் செய்ய தெம்பும் சக்தியும் இல்லை என்றால் எப்படி நாம் அந்த நாள் முழுக்க உற்சாகத்துடன் இருக்கமுடியும். சிறிய விசயமாக இருந்தாலும் இதனை நாம் சரிசெய்து கொண்டால் அல்சர், சக்திக்குறைவு, சோர்வு ஆகியவற்றிலிருந்து தப்பிக்கலாம். உற்சாகத்துடன் அலுவலகத்தில் வீட்டில் வேலை செய்தால் மகிழ்ச்சிதானே!

முப்பது வயது பெண்களில் பாதிப்பேருக்கு கர்ப்பம் தரித்தலில் பிரச்சினை இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  வேலையின் காரணமாக புதுமணத் தம்பதிகள்கூட இப்பொழுது குழந்தை வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம் என்று கூறுவதைப் பார்க்கிறோம். பின்பு அவர்களே குழந்தை தரிக்கவில்லை என்று சிகிச்சைக்கு வருகிறார்கள்.இத்தகைய பிரச்சினைகளுக்கு  மிகவும் பொறுப்பான இரவு பகல் உழைக்கவேண்டிய கடினமான வேலையில் இருக்கும் பெண்களே ஆளாகிறார்கள். வேலைக்கும் வாழ்க்கக்கும் இடையில் ஒரு உறுதியான முடிவு எடுக்கத்தெரியாமல் தடுமாறுவதே இதன் முக்கிய காரணம்.

மண வாழ்க்கை என்ற ஒன்றை ஆரம்பித்து விட்டால் வேலைக்குச் செல்லும் பெண்கள் சில விசயங்களைத் தீவிரமாக ஆராய வேண்டும். கல்யாணத்துக்கு முன் இருந்ததுபோல் 24 மணி நேரமும் அலுவலக வேலையில் ஈடுபட முடியாது. அடுத்து நம் வாழ்வில் செய்ய வேண்டியது என்ன? அதற்கு நாம் எவ்வளவு நேரத்தை நாட்களை, மணிகளை ஒதுக்க வேண்டியிருக்கும் என்று திட்டமிட வேண்டும்.

கடினமாக இரவு பகல் உழைக்கும் பெண்களுக்கு கர்ப்பம் தரிக்கும் பிரச்சினைகள், நாம் முன்பே பார்த்த பி.சி,ஓ.டி ஆகியவை மிக அதிகமாக ஏற்படுகிறது.

இவர்கள் தங்கள் வாழ்க்கை முறையைக் கட்டாயம் மாற்றிக் கொள்ளவேண்டும். உடல் எடை குறைத்தல், சர்க்கரை அளவைக் குறைத்தல், மன அழுத்தம், மனச்சோர்வுதரும் கடினமான வேலைகளைத் தற்காலிகமாவது குறைத்துக் கொள்ளுதல் ஆகியவையே மிக மிக அவசியமானவை.

ஒரு பெண் தன் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது போல் வேறு யாராலும் முடியாது. இதைப் பெண்கள் ஒத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.  அதுவும் பெண் குழந்தைகள் என்றால் மிக அதிகமாக அம்மாவின் வழிகாட்டுதல், அரவணைப்பு மிக மிக அவசியமாக உள்ளது.

சாதாரண ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம். 40 வயதுப் பெண் ஒருவரின் வாழ்வைப்பார்ப்போம்.  அவர்  ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் முத்திரை பதிப்பவர். புதிய புதிய ப்ராஜெக்ட்களை வெற்றிகரமாக முடித்து உள்ளவர். தற்போதும் அந்தவேலையில் தொடர்ந்து இருப்பவர். இரவிலும் கம்பியூட்டரில் அமர்ந்து வேலை செய்வார். அவரின் பெண் குழந்தைகள் வளந்த்து வரும் நேரம். இதற்கிடையில் இன்னொரு பெரிய ப்ராஜெக்டில் பார்ட்னராக அழைப்பு வருகிறது. வீட்டிலும் பெண் குழந்தைகளைக் கவனிக்க வேண்டும். தற்போது உள்ள வேலையே சிரமமானதுதான். ஆனால் தற்போது குழந்தைகளை அவர் இல்லாத போது கணவரும் கவனித்துக் கொள்கிறார்.

அவர் நிலையில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்? பின்னூட்டத்தில் சொல்லுங்கள். அவர் என்ன செய்தார் என்பதையும் அடுத்த பதிவில் பார்ப்போம்.

---------------------------------------------------------------------  

சில செய்ய முடிந்தசெயல் முறைகளைப் பார்ப்போம்.

1.உங்கள் அன்றாட செயல்களை அட்டவணைப் படுத்துங்கள்.

2.காலையில் நல்ல உணவு, மதியம் அளவான உணவு, இரவில் குறைந்த உணவு உண்பது சிறந்தது.

3.மல்டிவிட்டமின், கால்சியம் மாத்திரைகள் மருத்துவரைக் கேட்டு சேர்த்துக் கொள்ளுங்கள்.

4.பொழுதுபோக்குகளுக்குக் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள்.

5.குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் நேரம் ஒதுக்கவும்.

6.உங்கள் வாழ்க்கைத்துணை, மற்றும் நெருங்கிய நண்பர்களிடம் உங்கள் மனப் பிரச்சினைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

-----------------------------------------------------------------------

Tuesday 27 October 2009

இன்றைய பெண்களின் பிரச்சினைகள்!-பாகம்-2

இன்றைய பெண்களின் பிரச்சினைகள்!-பாகம்-1

http://abidheva.blogspot.com/2009/10/1.html.

 

இன்றைய மருத்துவர்களின் நோயாளிகளை கவனித்தால் ஒன்று புலனாகும். 25-45 வயதுடைய பெண்களிடம் குறிப்பாக சில பிரச்சினைகள் அதிகரித்திருப்பதைக் காணலாம். அவை

1.உடல் சோர்வு

2.தூக்கமின்மை

3.சின்னச் சின்ன விசயங்களிலெல்லாம் எரிச்சல் படுதல்

4.உடல் வலி

5.மனச்சோர்வு

6.குற்ற மனப்பான்மை

7.இறப்பைப் பற்றிய சிந்தனை

8.தற்கொலை எண்ணங்கள் ஆகியவையே அவை. இதனை சாதாரண சோர்வு என்று எடுத்துக்கொண்டு சிகிச்சைபெறும் அவர்களின் பிரச்சினைகள் தீருவதில்லை. பெரும்பாலும் நிறைய மருத்துவர்களிடம் காட்டியும் பிரச்சினை சாதாரணமாகத் தீருவதில்லை.

அவர்களை ஆராயும்போது சரியான நேரத்தில் உண்ணாமை, சரியாகத் தூங்காமை,அதிகரிக்கும் உடல் எடை ஆகியவையும் காணப்படுகின்றன. வீட்டுக்குள்ளேயும்,அலுவலகத்துக்குள்ளேயும் வசிக்கும் பெரும்பான்மையான பெண்களுக்கு விட்டமின் டி குறைபாடு வருகிறது என்றால் நம்மால் நம்ப முடியாது.

பெரும்பான்மையான நகரப் பெண்கள் கிராமத்துப் பெண்களைவிட நடக்க, படிகளில் ஏற, தரையில் உட்கார்ந்து எழுந்துகொள்ள சிரமப்படுவதின் காரணங்களில் இது முக்கியமானது.இதன் தொடர்ச்சியாக எலும்பு தேய்மானம், ஆஸ்டியோபோரோசிஸ்,இடுப்பெலும்பு சவ்வு விலகுதல் ஆகியவை மிக இளம் வயதிலேயே ஏற்படுகிறது.

தற்காலப் பெண்கள் ஆண்களுடன் போட்டியிட்டு பலதுறைகளிலும் சாதித்துவருகிறார்கள்.இதுவரை ஆண்கள் ஏற்றுக்கொண்ட அலுவலக முடிவுகள் எடுத்தல், அலுவலக சிக்கல்களுக்கு தீர்வுகாணுதல், அதிகப் பணத்தைக் கையாளுதல், சரியான நேரத்தில் பணங்களை செலுத்துதல், வங்கிக் கணக்குகளைக் கையாளுதல், இடம், பொருள்,சொத்துக்கள் வாங்குதல் ஆகியவை அவர்களுடைய புதிய உபரியான வேலைகளாகச்சேர்ந்துள்ளன.

இவை படிக்கும்போது எளிமையாகத்தோன்றும். ஆனால் நடைமுறையில் கையாளுவதற்கு மிகவும் கடினமானவை.
இப்படி பாதிக்கப்பட்ட பெண்கள் பெரிய வேலைகளில் இடைவிடாத சந்திப்புகள், கான்ஃபரன்ஸ் என்றிருக்கையில் அவர்களால் இந்தப் பிரச்சினைகளுக்கு மருத்துவர்கள் கூறும் சிகிக்கைகளை நடைமுறையில் கடைப்பிடிக்க முடிவதில்லை.

இதனால் அவர்கள் இன்னும் அதிகமான மனச்சோர்வு, உடலும் மனமும் சக்தியிழத்தல் ஆகியவற்றுக்கு உள்ளாகி மருத்துவமனைகளில் உள்நோயாளியாக சிகிச்சை பெறும் அளவுக்கு பாதிக்கப் படுகிறார்கள்.
இவற்றால் அவர்களுக்கு வரும் வியாதிகளத் தொகுத்தால் ஒரு நீண்ட பட்டியலே வருகிறது.
1.மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் மனநிலை மாற்றங்கள், அதிக வலி,
2.சினைப்பை நீர்க்கட்டிகள்(பாலிசிஸ்டிக் ஓவேரியன் டிசீஸ்)
3.இளம் வயதிலேயே நீரிழிவுநோய்,
4.உயர் இரத்த அழுத்தம்
5.கருவுறாமை
6.உடல் எடை கூடுதல்
7.முடிகொட்டுதல்
8.தோலில் கொப்புளங்க்ள் தொன்றுதல்
9.கருச்சிதைவு
10.முகத்தில் முடி வளருதல்
11.ஒற்றைத் தலைவலி
12.ஆஸ்டியோபோரோஸிஸ்
13.பாலியல் பிரச்சினைகள் இவை அனைத்தையும் தனித்தனியாகவும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவைகளை சேர்த்தும் பார்ப்பூம்.முதலில்
முக்கியமான பிரச்சினையான பி.சி.ஓ.டி.(பாலிசிஸ்டிக் ஓவேரியன் டிசீஸ்) எனப்படும் கர்ப்பப்பை நீர்க்கட்டிகள் பற்றிப் பார்ப்போம். பி.சி.ஓ.டி - அதிகமாக ஆன் ட்ரோஜன் சுரப்பதால் கருமுட்டைகள் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.இதனால் கர்ப்பம்தரிப்பதில்லை.
அதிக மன அழுத்தம் சுரப்புக்களை அதிகரிக்கிறது. இதனால் சக்கரை கூடுதல், தசைகள் இறுக்கம்,தாழ்ந்த மூச்சு, இதயத்துடிப்பு அதிகரித்தல் ஆகியவை ஏற்படுகின்றன.மன அழுத்தத்தால் 1.கோபம்,எரிச்சல் அதிகமாதல்,பசி அதிகமாதல், சந்தோசமின்மை, ஆகியவை ஏற்படுகின்றன.2.உடல் பருமனாதல்-வயிற்றில் கொழுப்பு அதிகமாகுதல் 3.சிலருக்கு பசியின்மை, அனோரெஃஸியா,புல்லீமியா போன்ற தீவிரமான வியாதிகள் ஏற்படுகின்றன.4.உடலுறவில் நாட்டமின்மை ஆகியவை ஏற்படுகின்றன. மனப் பிரச்சினைகள், உறவுப் பிரச்சினைகளை அடுத்துப் பார்ப்போம்.

Monday 26 October 2009

இன்றைய பெண்களின் பிரச்சினைகள்!-பாகம்-1

 

தற்கால சூழ்நிலையில் படித்த பெண்கள் வினோதமான சில பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள்! சாதாரணமாக வேலைக்குச் செல்லும் இந்தியப் பெண்கள் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் புதிய பிரச்சினைகள் இவைதான் என்று அறிய முடியாமல் தடுமாறுகிறார்கள்.

பெண்கள் இதுவரை ஆண்கள் செய்து வந்த பொறுப்புகளைக் கூடுதலாக ஏற்றுக் கொள்ளும்போது ஏற்படும் வாழ்வியல் வியாதிகள் சாதாரணமானவை அல்ல. அவை அவர்களால் வாழ முடியாத சூழ்நிலைக்குக் கொண்டுசெல்லும் அளவுக்கு தற்போது பூதாகாரமாக வடிவெடுத்துள்ளன!

68% இந்திய வேலைக்குச் செல்லும் பெண்கள் வாழ்வியல் வியாதிகளான

1.Anxiety-மன நிலைக் கலக்கம்

2.Fear-பயம்

3.Uneasyness-இயல்பாக இருக்கமுடியாமை

4.Hysteria-ஹிஸ்டீரியா- வீட்டிலும், அலுவலக டென்ஷன்களிலும்!

இவற்றால் உறவுகளை சரிவர பராமரிக்க முடியாமை(Battling Relationship Issues),

பணியிடச் சுமைகளைச் சமாளிக்க இயலாமை ( Not able to copeup with job and studies pressure)

வீட்டிலிருப்போரிடமிருந்தும், அலுவலகத்தில் உள்ளோரிடமிருந்தும் விலகிப்போதல் ஆகியவை ஏற்படுகின்றன.

இத்தகைய நோய்க்குறிகளை மிகவும் படித்த பெண்கள், மற்றும் அவருடைய குடும்பத்தினர், நண்பர்கள், கணவன் ஆகியோர் கூட உணர முடிவதில்லை. அப்படிக் கூறினாலும் தான் படித்தவர், தனக்குத் தெரியாததா? என்ற அதீத நம்பிக்கையினால்  பிறர் கூறுவதை ஒத்துக்கொள்ளவோ, அதனைக் கேட்டு அதன்படி சீரமைப்பு முயற்சிகளிலோ ஈடுபடுவதில்லை. அவர்கள் தங்களுடைய மனநிலைக் குழப்பங்கள், மனநிலைமாற்றம் ஆகியவற்றை உணருவது இல்லை என்பது ஒருபுறமிருக்க, தன்னுடைய பிரச்சினைகளுக்குப் பிறர்தான் காரணம் என்று எண்ணி அதீத கோபம் வெறுப்பு ஆகியவற்றைத் தன் குடும்பத்தாரிடம் காட்டி அவர்களிடமிருந்து விலகிச் செல்கிறார்கள்.

பெரும்பாலான பெண்கள் குடும்பம்,வேலை ஆகிய இரண்டின் அழுத்தத்தையும் தாங்க முடியாமல் அவதியுறுவதே இன்றைய பெண்களின் மிகப் பெரும் பிரச்சினையாக உள்ளது.

இத்தகைய பிரச்சினைகள் இன்றைய இந்திய குடும்ப அமைப்பில் மிகப்பெரும் விரிசல்களை ஏற்படுத்துவதே மிகவும் கவலைக்குரியதாக உள்ளது.

முந்தைய இந்தியக் குடும்ப அமைப்பில் குழந்தைகளைக் கவனிக்கவும், வீட்டைக் கவனித்துக் கொள்ளவும் பெற்றோர்கள் இருந்தனர். ஆனால் இன்றைய நகர்ச் சூழ்நிலைகள் அப்படி அமைவதில்லை.

பெண்களே பெரிய பொறுப்பான அலுவலகங்களின் உயரிய வேலையையும், கணவன், குழந்தைகள் என்ற  குடும்பத்தின் பொறுப்புக்களையும் சுமக்கும்போது ஏற்படும் மனவியல் அழுத்தங்கள் இன்றைய பெண்கள் முன் உள்ள மிகப்பெரிய சவால்! இதில் எத்தனை பேர் வெல்கிறார்கள், எத்தனை பேர் தோற்கிறார்கள் என்பதே எதிர்காலத்தில் குடும்ப அமைப்புகள் இருக்குமா? மெல்ல அழியுமா? என்ற கேள்விகளின் விடையாக அமையும்!  

இந்தப் பிரச்சினைகள் என்ன விளைவுகளை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஏற்படுத்துகின்றன என்பதனை அடுத்தடுத்த பகுதிகளில் அலசுவோம்!

Sunday 25 October 2009

சின்ன மருத்துவத் துளிகள்!

 

இன்று சில குறிப்புகள்:

1.ஓட்ஸில் நார்ச்சத்து உள்ளது. அதனால் அதனைக் காலை உணவாக சிலர் சாப்பிடுகின்றனர். உணவு போல் ஓட்ஸை அதிகம் சாப்பிட்டால் அது நல்லதல்ல. காயகறி சாலட்,பழம் இவற்றுடன் ஒரு சின்ன கப் ஓட்ஸ் சாப்பிடுவதுதான் நல்லது.

2.சிக்கன் மட்டனைவிட சிறந்ததா என்று கேட்கின்றனர் சிலர். சிக்கனில் மட்டனைவிட 4% கொழுப்பு குறைவு. அதேபோல் தரமான கோழிக்கறியா என்று அறிந்து வாங்குவது சிரமம். ஏனெனில் கறிக்கோழி பிராய்லர் விரைவில் எடைகூடுவதற்காக  என்னென்ன முயற்சிகள் செய்வார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. 

3.கோழிக்கறியே ஆனாலும் எண்ணேயில் பொறித்து உண்பது கொழுப்பைக் கூட்டும்.

4.வாக்கிங் செல்லும்போது ஷூதான் அணியவேண்டும்.  ஏனெனில் உடலின் எடை முழுவதும் காலில் இறங்குவதால் காலில் வெடிப்புகள், எலும்பு தேய்மானம் , வலி, ஆணிக்கால் ஆகியவை ஷூ அணிவதால் தவிர்க்கப்படுகின்றன.

5.ஷூவையும் வருடம் ஒருமுறை மாற்றவேண்டும். ஷூவின் உள்புறம் குதிகால் பகுதியி குழி விழுந்திருந்தால் ஷூ புதியது வாங்குவது நல்லது.

6.சக்கரை நோயாளிகளுக்கு அரிசி உணவைவிட கம்பு,ராகி, கோதுமை உணவு சிறந்ததா?

இல்லை ராகி கூழ், கோதுமை அனைத்தும் சக்கரையை ஏற்றத்தான் செய்யும். தனியாக தானியங்கள், மாற்றி மாற்றி உண்டாலும் உண்ணும் அளவைப் பொறுத்தே இரத்தத்தில் சக்கரை அளவு இருக்கும். கோதுமை உண்ணும் வட இந்தியர்களுக்கும் சக்கரை வியாதி நம் அளவுக்கு இருக்கிறதே!

7.குக்கர் சாதத்தில் சக்கரையை உடனடியாக உயர்த்தும் திறன் குறைவு. வடித்த சாதம் உடனடியாக சக்கரையை உயர்த்தும்.

Friday 23 October 2009

மரபணு கத்திரிக்காய்! - அதிர்ச்சி தகவல்!

 

நம்ம ஊருக்கு மரபணு கத்திரிக்காய் வரப்போகுதுங்க! அமெரிக்காவோட மான்சாண்டோ கம்பெனியோட தயாரிப்பு இது!  உலகம் முழுக்க மரபணுக்கத்திரிக்காயை எதிர்க்கிறார்கள்! ஐரோப்பியர்கள் இந்தக் கத்திரிக்காய் வேண்டாம் என்கிறார்கள்! ஆனாலும் இந்தியாவில் ஒரு கம்பெனியின் கூட்டணியுடன் இந்தக் கத்திரிவிதைகளை இந்தியாவில் பரப்பத் தயாராகி விட்டார்கள்! 

மரபணு கத்திரிக்காய் என்றால் என்ன?   ஏன் அதை எதிர்க்கிறார்கள்?

நம்ம ஊர் கத்திரிக்காயில் பூச்சி விழுதாமே! அது அமெரிக்காக்காரனுக்கு கஷ்டமாப் போச்சாம்! இவன் குடுக்கப்போற காயில் பூச்சி விழாதாம்!

அதுக்காக பாசில்லஸ் துரிஞ்ஜெனிசிஸ்னு ஒரு பாக்ட்டீரியாவை இந்த கத்திரிச்செடியில் புகுத்தி விடுறாங்க!  என்னென்ன பூச்சிமருந்து வேணுமோ அதை நாம அடிக்க வேணாம். இந்த செடிக்குள்ள விட்ட பாக்டீரியாவே பூச்சி மருந்து ரெடி பண்ணிக்கும்.

இதுனால நமக்கு பூச்சிமருந்து செலவு இல்லையாம். நம்ம உழவருங்கமேல் அமெரிக்காவுக்கு  என்ன பாசம் பாத்தீங்களா?

ஏன்னா இது அமெரிக்க மான்சாண்டா என்கிற முட்டாள் கம்பெனியின் தயாரிப்பு! இதை வித்தாகணும் பாருங்க! 

புஷ்னு ஒரு ஆசாமி இருந்தான் பாருங்க.. அவன் காலத்திலேயே இதை ஏற்பாடு பண்ணியாச்சு. ஒபாமா என்ன பண்ணுவான்? அவன் சும்மா கையை சூப்பிக்கிட்டு பாத்துக்கிட்டு இருக்க வேண்டியதுதான்!

சரி! ஐரோப்பாவில் இதுக்கு என்ன சொல்றாங்க?

1. Wal-Mart Germany

2.Kellogg

3.Coop Switzerland

4.Marks and Spencer, UK

இந்த மெகா கடைகள் முதல் ஐரோப்பாவில் எல்லா இடங்களிலும் இந்த மரபணு மாற்றிய காய்களுக்கு பெரிய எதிர்ப்புங்க! அதனால் ஐரோப்பாவில் இதை விக்க முடியாம இந்தியாவோட கழுத்தைப் புடிக்கிறானுங்க!

சரி ஏன் நம்ம இது வேண்டாம் என்கிறோம்?

1.இந்தக் கத்திரிக்காய் சாப்பிட்டால்  மருந்துகளுக்குக் கட்டுப்படாத புது பாக்டீரியாக்கள் உருவாகும். ( உள்ள நோயே தாங்க முடியல! இது வேறயா!!)

2.கத்திரிக்காய் உள்ளே இருக்கும் பாக்டீரியா சும்மா இருக்குமா? சில  நச்சுப்பொருளை அப்பப்ப கக்கும். அது ரொம்ப டேஞ்சராம்.

3.இதனால் மனிதனுக்கு அலர்ஜி எதுவும் வருமான்னு இன்னும் டெஸ்ட் பண்ணலையாம்.( அதான் இளிச்சவாயனுங்க மேல பண்ணப் போறாங்களே!!!..இளிச்ச வாயனுங்க யாருன்னு கேக்கிறீங்களா?  அட நம்மதாங்க!!)

4.இந்தக் காயை தொடர்ந்து வருசக்கணக்கா சாப்பிட்டா ஏதாவது பிரச்சினை வருமான்னு கேட்டா பதில் யாருக்கும் தெரியாது!!

5.குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டாம். ஏன்னா இன்னும் சோதிக்கவில்லை!

6.இந்தச் செடிக்கழிவுகள் பட்டாம்பூச்சி, மின்மினிப்பூச்சியையும் சேத்துக் கொல்லுமாம்!!( இப்பவே மின்மினிப் பூச்சிகளைக் காணோம்!!).

7. 4000 வருசமா நம்ம விவசாயி இதைப் பயிரிட்டுப் பிழைப்பு நடத்துகிறார்கள். இந்தக் கத்திரி விதைகள் மிகக் குறைந்த சலுகை விலையில் கொடுக்கப்படும். ஆனால் விதையை சேமிக்கவோ மறுபடி உபயோகிக்க முடியாது. வேற வழியில்லாம நம்ம அந்த விதைக் கம்பெனிக்கு அடிமையாக வேண்டியதுதான்.( புதிய பொருளாதார காலனித்துவ அடிமைகள்!!).

8.நம்முடைய சொந்த கத்திரிச் செடிகளும் இந்தச்செடியின் மகரந்தத்தால் நாளடைவில் கெட்டுப்போகுமாம்.

9.நாளடைவில் கத்திரி விலை யானை விலையாகி நீங்களும் நானும் கத்திரிக்காய் வாங்க முடியாம போகும்.

மரபையும், மாண்பையும் கெடுக்கும் இந்தக் கத்திரிக்காய் நமக்குத் தேவையா?  இப்பொழுதே எதிப்புகள் ஆரம்பித்துள்ளன.

இதில் நம்மூர் பயோடெக் ஆசாமிங்க இது நல்லதுன்னு அறிக்கைவேறு வெளியிடுகிறார்கள்!!

நம்ம ஊர் அப்பாவி உழவர்களுக்கு அடி மேல் அடி! எவ்வளவோ அடி தாங்கி விட்டோம்.. இதையும் எதையும் தாங்குவோம்ங்கிறீங்க!!!

என் எதிர்ப்பைப் பதிவு செய்து விட்டேன். நாடே ஒன்று திரண்டால் இந்தியாவுக்குள் இது வருவதைத் தடுக்கலாம்!

சரி.. வாங்க! உள்நாட்டுக் கத்திரிக்காய் வகைகளை ஒருகை பார்ப்போம்.

888888888888888888888888888888888888888888888888888888888

இதையும் படிக்கலாம்: ஜெரி ஈசானந்தாவின் புதிய இடுகை: முல்லைப்பெரியார் -கொடுங்கனவின் கானல் நீர்

888888888888888888888888888888888888888888888888888888888

Tuesday 20 October 2009

காதலைத்தூண்டும் உணவுகள்-10!( சின்னப் பசங்க எல்லாம் கில்லி வெளையாடப் போங்கப்பா!!)

 

1.செலரி- செலரி இலையை வெட்டித் துண்டு துண்டாக்கி மென்று தின்னவேண்டியதுதான்!!  எப்படி இது தூண்டுது? ஆண்ட்ரோஸ்டிரோன் என்ற மந்திரப் பொருள் அதில் இருக்குங்க!!

2.சிப்பி,(Oysters)- கிராமத்தில் ஒரு காலத்தில் நத்தை, ஊமச்சி என்று மக்கள் அவித்துச் சாப்பிடுவார்கள். மக்களுக்குப் படிப்பறிவு இருந்ததோ இல்லையோ நத்தையில் சின்க், டோபாமின் என்கிற இரண்டு .....தூண்டும்  வஸ்துகள் இருக்குங்க!! ( பழைய காலத்து மக்கள் வெவரந்தான்!!!)

3.வாழைப்பழம்- இரவு சாப்பிட்டு சில ஆசாமிகள் நாட்டு வாழைப்பழம் இரண்டு சாப்பிடுவார்கள்.. பி விட்டமின், பொட்டாசியத்தோடு நமக்குத்தெரியாத வகையில் வாழைப்பழம் மேட்டரைத் தூண்டுதுங்கோ!!

4.பாதாம் போன்ற பருப்பு வகைகள்- பொதுவா அரபு நாட்டு சேக்குகள் விரும்பி சாப்பிடும் பொருள். உள்ளூர் சேக்குகள் அரேபியாவிலிருந்து வரும்போது விரும்பிக் கொண்டுவரும் பொருட்களில் சரக்குக்கு அடுத்து பாதாம், பிஸ்தாதான். காரணம்?...  எல்லாம் வெவரமாத்தான் !

5.முட்டை- படிப்பில் முட்டை வாங்கினாலும் இந்த விசயத்தில் முட்டை வாங்கக்கூடாதில்ல!! இதுவும் மேற்படி மேட்டருக்கு ரொம்ப உதவி செய்யும். மேலும் பி விட்டமின் வேற இருக்குங்க!

6.ஈரல்- கறிக்கடையில் பாருங்க. சிலர் ஈரல் மட்டும்  நூறு கிராம், இருநூறு கிராம் வாங்குவாங்க. நம்ம தனிக் கறியாக் குடுப்பான்னு வாங்கி வருவோம்.  சாமி!.....ஈரலில் குளூட்டமினோட வேறு சங்கதியைத் தூண்டும் வஸ்துகளும் அடக்கம். அடுத்த தடவை ஈரலும் கொஞ்சம் போடச் சொல்லுங்க!

7.அத்திப்பழம்- அடி ஆத்தி! எனக்கே இப்பத்தங்க தெரியும்!! ஏன் எப்படின்னு தெரியல! ஆனா யூஸ் பண்ணிப் பாருங்க!

8.பூண்டு- அல்லிசின் என்கிற வஸ்து பூண்டில் இருக்கு. அது ரத்த ஓட்டத்தைத் கூட்டுதாம்( எங்கேன்னு அப்பாவியாட்டம் கேட்கக் கூடாது!! ஹி! ஹி!). வாயில் பூண்டு வாடை அடிக்கும்.  டிக் டாக், பெப்பர்மிண்ட் ஏதாவது போட்டுக்கவேண்டியதுதான்!

9. சாக்கலேட்- சாக்கலேட் ரொம்பத்திங்கக்கூடாதுன்னு வீட்டில் திட்டுவாங்க. அதில் தியோபுரோமின், பினைல் எதிலமைன் ஆகிய மோடிமஸ்தான் அயிட்டங்கள் அதில் இருக்குங்க. குழந்தைகளுக்குக் குடுக்காதீங்க! நீங்க தின்னுங்க!

10.மாம்பழம்- சூட்டைகிளப்பிவிடும் சாப்பிடாதீங்கன்னு சொல்லுவானுங்க! தெரியாம சொல்லலை உண்மைதான்... அது இந்த சூட்டைத்தான்  கிளப்பிவிடும்!!!!

Monday 19 October 2009

பிரேதப் பரிசோதனை-( ரைகர் மார்டிஸ்)-மரணவிறைப்பில் அறியவேண்டியவை-9!

 Rigor Mortis (US)

 

பிரேதப் பரிசோதனை எனப்படும் போஸ்ட் மார்ட்டத்தில் முதலில் பார்ப்பது ’ரைகர் மார்ட்டிஸ்’ RIGOR MORTIS தான். ரைகர் மார்ட்டிஸ் என்றால் என்ன என்று பார்ப்போம்.

1.இறந்தவுடன் உடலில் ஏற்படும் விறைப்புத் தன்மைதான் ரைகர் மார்ட்டிஸ்! இறந்த உடலின் கைகள் கால்களை, முழு உடலையும்கூட  மடக்கினால் மடக்க வராது.

2.உடல் தசைகள் இறந்தவுடன் சுருங்கி விறைப்பதனால் இறந்த உடல் விறைக்கும். இதுவே ரைகர் மார்ட்டிசின் காரணம்.

3.ரைகர் மார்ட்டிஸ் உடலில் இருந்தால் குறிப்பிட்ட நபர் இறந்துவிட்டார் என்று உறுதியாக நாம் நம்பலாம்.

4.ரைகர் மார்ட்டிசை  வைத்துப் பொதுவாக இறந்த நேரத்தைக் கணக்கிடலாம். (துல்லியமாகக் கணக்கிட முடியாது என்றாலும் பிரேதப் பரிசோதனையில் அறிக்கையில் முதலில் எழுதப்படுவது இதுதான்).

5.ரைகர் மர்ட்டிஸ் இறந்த ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திலிருந்து ஆரம்பிக்கும்.

6.இறந்த ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திலிருந்து ஆரம்பிக்கும் ரைகர் மார்ட்டிஸ் வெயில் காலத்தில் 18- 36 மணிவரை இறந்த உடலில் இருக்கும்.

7.மழைக்காலத்தில் இறந்த ஒன்று அல்லது இரண்டுமணி நேரத்திலிருந்து ஆரம்பிக்கும்  ரைகர்மார்ட்டிஸ்  24-48 மணிநேரம் வரை இறந்த உடலில் இருக்கும்.

8.மேல் சொன்னவை பொதுவானவையே. வயது, இறப்பின் தன்மை, மேல்சொன்னதுபோல் தட்பவெப்பம் ஆகியவற்றைப் பொறுத்து ரைகர் மார்ட்டிசின் நேரங்கள் கொஞ்சம் கூடக் குறைய மாறலாம்.

9.ரைகர் மார்ட்டிஸை வைத்து இறந்தபோது உடல் எந்த நிலையிலிருந்தது என்று அறியலாம். ஏனெனில் ஒருவர் இறக்கும்போது கால்களை மடக்கி வைத்திருந்தால் அப்படியே கால்கள்  மடங்கிய நிலையிலேயே விறைப்பாக இருக்கும்!  

எளிமையாக பிணவிறைப்பு அல்லது மரண விறைப்பு என்று சொல்லப்படும் ரைகர் மார்ட்டிஸ் பற்றிச் சொல்லியிருக்கிறேன்.   கேள்விகளைக் கேளுங்கள்!!

தமிழ்த்துளி தேவா!

Sunday 18 October 2009

தீபாவளி!

 

இரண்டு நாள்

பலகாரங்களின் நெரிசல்

வயிற்றுக்குள்!!!

நேற்று வந்த தம்பி சொன்னான்

பேருந்திலும் ஒரே கூட்டம் என்று!

ஒன்றிரண்டு மிச்ச வெடிகளை

கட்டிலுக்கடியில் பதுக்குகிறான்

என் மகன் பிரிதொருநாள் வெடிக்க!

சமையல் ஆள் வரவில்லை,

கடையில் சாப்பிட்டுக்கலாம்,

புதுப்படம் எந்தக் காட்சி

போகலாம்?-இல்லாளின் கேள்வி!!

இவற்றுக்கிடையில்

மெதுவாய் நழுவிக்கொண்டிருந்தது

இந்த தீபாவளி!!!

Thursday 15 October 2009

ஈழத்தமிழர் பலமும், பலவீனமும்!

மணற்கேணி அரசியல் சமூகம் பிரிவுக்கு காரைக்குடி வலைஞர்கள்-லிலிருந்து அனுப்பிய கட்டுரை!!!

 

ஈழத்தமிழர் பலமும், பலவீனமும்!

நாம் எப்படி வாழ்வது? நம் வரலாறு எது?

நம்மை வாழ வைப்பது எது? நம்மை வீழ்த்தியது எது?

நம்மை வதைப்பது எது? நாம் எதற்காக போராட வேண்டும்?
ஈழத்தமிழரின் உரிமைப் போர் முற்றுப்பெற்று விட்டதா? அதன் பலம் எது?
பலவீனம் எது? தீர்விற்கான வழிகள் என்ன?

எம் நெஞ்சினில் உருவான
கேள்விகளுக்கு மனப்போராட்டத்தில் கிடைத்த பதில்கள் குறித்து எழுதுகிறேன்.

"போரிட வேண்டுமென்றால் தன்னிடத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் அன்பு செய்ய பிறரிடத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்". மார்க்ஸிய மேதை கார்ல் மார்ஸின் கருத்து. தனக்கு பலம் உள்ளது, எதிரியை வெல்ல முடியும் என்று நினைத்தால் நமக்கு துணையாக வரும் சக்திகளின் பலம், சூழல் ,காலம் இடம் நேரம் அறிந்து போராட இயலும். இந்த அடிப்படையில் ஈழ உரிமைப் போராட்டத்தின்
பலத்தை முதலில் ஆய்வோம்.

ஈழத்தின் வெகு அருகில் பெரும்பான்மை தமிழர்கள் வாழும் தமிழகம் உள்ளது. தமிழர்களும் புலம் பெயர்ந்த தமிழர்களும் உலகம் முழுவதும் பரவலாக
வாழ்கிறார்கள். இது உரிமைப் போராட்டத்தை உலக அளவில் எடுத்து செல்ல வழிகோலும். விடுதலைப்புலிகள் புதிதாக அமைத்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசு வலுவாக செயல்படுவதற்கு உதவும்.

உலகத் தமிழர்களின் பொருள் உதவி அறிவு
அரசியல் சார் உதவிகளும் தமிழீழ அரசுக்கு எளிதில் கிடைக்கும்.போராளிகளை பயங்கரவாதிகளாக சிங்கள அரசு உலக சமூகத்திற்கு சித்திரித்து வந்துள்ளது. தமிழீழப் போரில் தற்காலிக தோல்வியை பின்னடைவை விடுதலைப் போராட்டம் சந்தித்துள்ளது. அதன்பின் சிங்கள காட்டாண்டி அரசின் அரசு
பயங்கரவாத முகத்திரை அதன் செயல்பாடுகளால் கிழிந்து கோரமுகம் வெளிப்படையாக
தெரிய ஆரம்பித்து விட்டது.

உலகின் மனித உரிமை ஆர்வலர்கள் மக்கள்
விடுதலையை ஆதரிக்கும் சக்திகளும் அரசுகளும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு பேராதரவு  தரும் அரசியல் சூழல் உருவாகி உள்ளது. இதை
நேர்மையான சரியான திசை வழியில் பயன்படுத்திக் கொண்டு உரிமைப் போராட்டத்திற்கு வலு சேர்க்க வேண்டும்.

துயரத்தில் தான் உண்மையான நண்பனைக் காண முடியும்.  ஈழப்போரில் பின்னடைவை
சந்தித்த பிறகு நமக்கு உண்மையான துணைவரும் சக்திகளையும் துரோகம் செய்யும்
சக்திகளையும் விரோதிகளையும் எளிதாக இனம் காணலாம்.

தெற்காசிய நாடுகளின் அனைத்து விதமான உளவுத்துறை இராணுவ உதவிகளால் வெற்றியடைந்த அகங்காரத்தில்
ஈழத்தமிழர்களுக்கு மனிதநேய உதவிகளை சிங்கள பேரினவாத அரசு மறுத்து வருவது
உலக சமுதாயத்தின் வெறுப்பிற்கு சிங்கள அரசு ஆளாகியுள்ளது.

இதை நமது பிரசார உக்திகளால் சரியாகப் பயன்படுத்தி கொண்டு உலக நாடுகளின் தார்மீக
ஆதரவைப் பெறலாம். உலகளாவிய விடுதலை இயக்கங்களின் ஆதரவை பெறுவதற்கும்
கூட்டு உழைப்பிற்கும் வலு சேர்க்கலாம்.
இயற்கையான ஈழ மண்ணின் காடுகள் அரசியல் போராட்டத்தினூடே ஆயுதப் போராட்டம்
தொடர்வதற்கும் வழிகோலும் என்பதும் வலிமையாகும்.

இந்தியா, சீனா, பாகிஸ்தான் முதலான தெற்காசிய நாடுகளில் நடக்கும் விடுதலைப் போராட்டங்களும் ஆப்கானிஸ்தானில் நடக்கும் விடுதலைப்
போராட்டங்களும் நம் ஆய்விற்கு உட்படுத்தி நம் வெற்றிக்கு உதவும்வழிவகைகளைக் காண்பது வலிமை சேர்ப்பதாக அமையும்.

ஒரு சங்கிலியின் பலம் என்பது அதன் வலிவு குறைந்த வளையத்தைப் பொறுத்தே
அமைகிறது. பலத்தைக் குறித்த நம்பிக்கையினூடே பலவீனத்தைக் குறித்த எச்சரிக்கையும் மிகவும் முதன்மையானதாக உள்ளது. ஈழப் போராட்டத்தின்
பின்னடைவு தோல்வியல்ல என்ற உறுதியோடு பலவீனங்களை சரி செய்து கொள்ள அலசி
ஆய்வு செய்வோம்.

உலகமயமாக்கல் என்பது பல நாடுகளின் பொருட்கட்டமைப்பை சீர்கேடடையச்
செய்துள்ளது. பெரு வணிக பேரரசுகளும் இதில் விதிவிலக்கல்ல தேசீய இனங்களின்
விடுதலைப் பெருவணிக பேரரசுகட்கு இடையூராக இன்று தெரிவதால் அனைத்து கொலைக் களங்களையும் கொடுத்து மக்கள் உரிமை மீட்புப் போர்களையும் தேசிய இன விடுதலைப் போர்களையும் நசுக்குமாறு கட்டளை பிறப்பிக்கும் என்பதை சரிவர கணக்கிடாதது பெரிய பலவீனமாகிவிட்டது.

தெற்காசிய நாடுகளை ஒரே வணிக மண்டலமாக்க மேற்கூறிய பின்னனியில் இந்தியா
சீனா போன்ற நாடுகள் சிங்கள பேரினவாத அரசுக்கு அனைத்து உளவுத்துறை மற்றும்இராணுவ உதவிகளை செய்தது, செய்து வருகிறது. தெற்காசியா முழுமையையும் ஆதிக்கம் செய்ய இலங்கையின் புவியியல் அமைப்பு உதவும் என்பதும் உலக
நாடுகளின் உதவி கிடைக்க பெரும் வாய்ப்பாக அமைந்து விட்டது.

தளத்தின் பலம் தான் வெற்றியை முடிவு செய்யும். போராளிகளின் தலைவர்கள் இந்தியா உதவும் என்று நினைத்ததால் இந்திய உளவுத்துறையினரோடு தொடர்பு
கொண்டிருந்தார்கள். இது இன போராட்டத்திற்கு எதிரான துரோக குழுக்களையும்
சிங்கள அரசிற்கான ஒட்டுக்குழுக்களை உருவாக்குவதில் பெரும்பங்கு வகித்தது.

புதிதாக அமைந்த நாடுகடந்த தமிழீழ அரசின் தலைவர் பத்மநாபன் இந்தியா உதவும்
நம்பிக்கையோடு பேசுவது கவலை கொள்ள வைப்பதாகும்.

மாறாக மலையகத் தமிழர்களையும் கருணாவின் ஒட்டுக்குழுக்களாலும் சிங்கள
அரசாலும் அச்சுறுத்தப்பட்டு ஈழமக்களின் பிரச்சனைக்கு போராடாமல் வாய்மூடி
மவுனியாய் உள்ள கிழக்கு மக்களையும் அரசியில் ரீதியாக இணைக்காமல் உள்ளது
மிகப்பெரும் பலவீனமாகும். ஈழப் போராட்டத்தின் ஆதரவு சக்திகள் (NDF) புதிய
ஜனநாயக முன்னணி போன்ற அமைப்புகளை பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும்.

இந்திய அரசை நம்பாதே!
இந்திய மக்களை நம்பு!

இலால் பகதூர் சாஸ்திரி அவர்களின் மலையகத் தமிழரின் குடியுரிமை ஒப்பந்தம்,
அன்னை இந்திராவின் கச்சதீவு ஒப்பந்தம், இராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தம் என்று பல ஒப்பந்தங்கள் இந்திய - இலங்கை அரசுகளால் போடப்பட்டது. அனைத்தும் தமிழருக்கும் ஈழதமிழருக்கும் எதிராகத் தான் இருந்தது இருந்து வருகிறது.

இந்திரா-ஜெயவர்த்தனா, இந்திரா-அதுலத்முதலி, இராஜீவ் - ஜெயவர்த்தனா, சோனியா - இராசபக்சே, மன்மோகனசிங் - இராசபக்சே, பசில்-ராசபக்சே,கோத்தபயா- இராசபக்சே சந்திப்பு காட்சிகளை ஊடகங்களில் பார்த்தாலே தமிழர்
எதிர்ப்பின் வலிமையை ஊகிக்கலாம்.

யாழ்கோட்டையில் சுற்றிவளைக்கப்பட்ட சிங்கள வீரர்களைக் காப்பாற்ற வாஜ்பாய் அரசு புலிகளுக்கு மிரட்டல் விடுத்ததும் ஆய்விற்குரியது. சிங்களப் பேரினவாத போர்ப்படைக்கும் தமிழீழ நாட்டின் போராளிகளுக்கும் நடந்த போரில் சிங்களஅரசு பெற்ற உதவிகளையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

எளிய இந்திய மக்களின் விடுதலைக்கு போராடும் பொதுஉடமைக் குழுக்கள் இனக்குழுக்களை ஆய்வுக்குட்படுத்தி நேர்மையானவர்களை அடையாளம் கண்டு கூட்டு முயற்சியில் இறங்குவது இந்திய அரசிற்கு அழுத்தத்தைத் தரும்.

மாறாக, தமிழ்நாட்டு தலைவர்களால் இந்திய அரசுக்கு எந்த அழுத்தத்தையும் தர இயலாது என்பது தெளிவான ஒன்றாகும்.

!

இந்திய மக்களை நம்பு!!

என்பதே போராட்டத்தின்வலிமைக்கு உதவுவதாக அமையும்.எளிய மக்களின் உள்ளம் உயர செயல்பட வேண்டும்

காவியங்கள் ஊடகங்கள் அரசியல் பிழைப்பு வாதிகளின் செயல்பாடுகள் அனைத்தும்
காலம் காலமாக எளிய மக்கள் தங்களை ஒத்தவர்களின் பிரச்சனைகள் பற்றி
சிந்திக்காத வண்ணம் வாழ செய்துள்ளன.

அரிச்சந்திரன் மனைவி சந்திரமதி படும் துயரம் கண்டு அரசன் மனைவி துயரப்படுகிறாளே என்று துயரப்படுவார்கள். பதினான்கு வருடம் காட்டு
வாழ்க்கை வாழும் இராம இலக்குவன் மற்றும் சீதையை நினைத்து மனம் கலங்குவார்கள். இந்திரா அம்மையாரின் படுகொலைக்காகவும் இராஜீவ்
படுகொலைக்காகவும் கலங்குவார்கள், கொதிப்பார்கள்.

ஆனால் ஆயிரக்கணக்கான சீக்கியர் படுகொலைக்கும், இலட்சக்கணக்கில் கொலையுண்ட ஈழத்தமிழர்களின் படுகொலைக்கும்,மதக் கலவரத்தில் மாண்ட இஸ்லாமிய எளிய மக்களுக்காகவும்கொதிக்க மாட்டார்கள்.மாறாக சுப்ரமணியசாமி மீது எறிந்த முட்டை, தக்காளிக்கு பரிசாக வழக்கறிஞர்
சமூகமே காவல்துறையின் அடக்குமுறைக்கு ஆளானது.

அடித்த காவலர்களும் அடிபட்டவழக்கறிஞர்களும் எளிய மக்கள். தமிழீழ நாட்டின் தேசீய தலைவர் பிரபாகரன்படுகொலை செய்யப்பட்டார் என்று ஊடகங்கள் செய்திகளை வெளியிட்ட உடனே
தமிழகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அதனை எதிர்த்து கலகங்கள் நடந்தன.அவர் உயிருடன் உள்ளார் என்று ஈழ ஆதரவு தமிழ் தலைவர்கள் உறுதி கூறியதும் தமிழ் மக்கள் அமைதி காத்தார்கள். இனி ஈழ பிரச்சனைக்கு அவர் போராடுவார்
என்று தன் சொந்த வேலைகளைப் பார்க்க சென்றுவிட்டார்கள்.

எளிய மக்கள் தமது தலைவனிடத்தில் பிழை இராது என்று நம்புகிறார்கள் அதுவும்மக்கள் போராட்டத்தில் பெரிய தடைக்கல்லாக உள்ளது. பெரும்பான்மை மக்களின்தலைவர்கள் கலைஞரும், ஜெயலலிதா அவர்களும் இந்த அடிப்படையில் மக்களின்
கோபத்திற்கு ஆளாகவில்லை.

அதிகாரமில்லாத முதல்வர் பதவியில் இருந்தாலும், அந்த வரம்பிற்குள் தரவேண்டிய அழுதத்தையும் தராமல் துரோகம் செய்த கலைஞர் அவர்களை,
தொல்திருமாவளவன் போன்ற எளிய மக்களின் தலைவரும் நம்பி ஏமாந்தது இந்த அடிப்படையில் தான். வைகோ, இராமதாஸ், நெடுமாறன் போன்றார்கள் ஜெயலலிதா அம்மையாரை நம்பி ஏமாந்ததும் இந்த அடிப்படையில்தான்.

அரசியல் அதிகாரத்தில் இருந்து கலைஞர் துரோகமிழைத்தார். அதிகாரத்தில் இல்லை என்றாலும் வலிவுடைய எதிர்கட்சி தலைவர் எந்த போராட்டத்தையூம் நடத்தாமல் துரோகமிழைக்கிறார்.

காவிய நாயகி சீதையின் சிறைவாழ்விற்கு நோகாமல், ஈழப்பெண்கள் கற்பழிக்கபடுவதும் கொலை செய்யப்படுவதும் கண்டு துயரப்பட்டுக் கொதிக்கும்
மனநிலையை எளிய மக்கள் பெற ஈழ ஆர்வலர்கள் முயற்சிக்க வேண்டும்.

இராமனின் வன வாழ்க்கைக்கு வருந்தாமல் ஈழதமிழர்கள் தடுப்பு வதை முகாம்களிலும் சிறைகளிலும் காடுகளிலும் படும் சொல்லொணாத் துயருக்காகவருந்திப் போராடும் எண்ணத்தைப் பெற வழிவகைகளை ஆய்வு செய்ய வேண்டும்.

தமிழக தலைவர்கள் ஒற்றுமை, ஒற்றுமை என்று அறிவுரை கூறி ஒதுங்குகிறார்கள்.

ஒற்றுமைதனிலும் உயிர் பெரிது,

ஒற்றுமைதனிலும் உரிமை பெரிது

என்பதை மறைக்கிறார்கள், மறுக்கிறார்கள் என்பதை எளிய மக்களுக்குத் தெளிவாக்க வேண்டும். எளிய மக்களின் விழிப்பே ஏற்றமிகு உரிமைப் போருக்கு வழி.

1.தமிழ் ஈழ துரோகக் குழக்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவது. இந்திய உளவுத்துறைக்கும் (RAW) சிங்கள ஆட்சியாளர்களுக்கும் அவர்களுக்கும் உள்ள இணைப்பை மனித உரிமை ஆர்வலர்களாக உள்ள சிங்கள ஐனநாயகசக்திகளோடும் நவசேனா மாதிரி ஈழப்போரட்டத்தை அங்கீகரிக்கும் அமைப்புகளோடும் இணைத்து உடைத்தெறிவது.

2.தனிநபர் துதி என்பது ஒரு கவர்ச்சி அரசியல். தனிநபர் பங்கு என்பது போராட்டத்திற்கு வலு சேர்க்கலாம். ஆனால் அதுவே வலிமையாகி விடாது என்பதைப் புரிந்து கொண்டு சிறியஅமைப்புகளானாலும் ஒத்த கருத்துடையவர்களை போராட்டத்தில் இணைத்து வழி நடத்துவது.

3.தமிழகத்து உரிமை போராட்டங்கள் வலுவடைய வழி காணுவதும் ஈழபோராட்டத்திற்கு தீர்வாக அமையும்.
தமிழக மீனவர் நலன்களை தமிழகத் தலைவர்கள் முதன்மைபடுத்துவது. இராஜீவ்காந்தியை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட பிரபாகரனை, பொட்டு அம்மனை கைது செய்ய இந்தியா உரிமை கோருவதை போல இதுவரை சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்ட
படுகாயப்படுத்தப்பட்ட மீனவர்களின் காவல்துறை வழக்குகளை ஆய்வு செய்ய வேண்டும்.

வழக்கறிஞர் குழுமம் நீதிமன்றங்களை அணுகி சிங்கள ஆட்சியாளர்களைக் கைது செய்யும் ஆணையைப் பெற வேண்டும். மக்கள் போராட்டங்களை தமிழக
மீனவர்களுக்காக தமிழக அளவில் முன்னெடுப்பது இந்திய அரசுக்கு பெரும் அழுதத்தத்தைத் தரும்.

4.ஈழப் போராட்டத்தில் தமிழக மீனவர்களை ஈடுபடுத்துவதும் தமிழக மீனவர்களுக்கு போர் பயிற்சி ஆயுதங்கள் தர அரசை வற்புறுத்த வேண்டும். இது
கடல் பகுதியில் சிங்கள அரசின் மேலாதிக்கத்தைத் தடுத்து நிறுத்தும்.

5.நாடு கடந்த தமிழீழ அரசு திரு.தொல்திருமாவளவன், வை.கோ., மருத்துவர் இராமதாசு, தமிழர் தலைவர் ஐயா பழநெடுமாறன், அவர்களை அணுகி இந்திய அளவிலான அரசியல் கட்சி தலைவர்களின் ஆதரவைப் பெற்றுதர நிர்பந்திக்க வேண்டும்.
தமிழீழத்தை விட்டு இந்திய இராணுவம் வெளியேற நெருக்கடிகள் கொடுக்க வேண்டும்.

ஒற்றுமையை விட உயிர் பெரிது!
ஒற்றுமையை விட மானம் பெரிது!
ஒற்றுமையை விட உரிமை பெரிது!

இந்திய ஒற்றுமை என்ற பெயரால் இலங்கை ஒற்றுமை என்ற பெயரால் மக்களை
விலங்குகளினும் கேடாக நடத்துவது நேர்மையல்ல! முறையல்ல! என்று முழங்கி
ஈழஉரிமைப் போர் தொடர்க!
உலகத் தமிழர்கள் உரிமைப் போர் தொடர்க!
முற்றும்

Wednesday 14 October 2009

கொஞ்சம் தேநீர்- மௌனமாய்...

மக்கிச் சிதைந்த

சாளரங்களின்வழி

தரையெங்கும்

பரவியிருக்கிறது,

மவுனமாய் கசிந்த ஒளி,

 

சிதிலமடைந்த

கதவொன்றில் சிரித்தபடி

விளக்குடன்

வரவேற்கும்

செதுக்கப்பட்ட பதுமை!!

 

சிலந்தி வலைகளின்

பிடியில் உத்தரத்தில் தொங்கும்

என்றோ தொங்கவிடப்பட்ட

விளக்குகள்!

 

பூட்டப்பட்ட

சயன அறைக்குள்

பல சந்ததிகளின்

சூட்சுமம் பொதிந்த

பழைய கட்டில்!

 

இருளின் ஆழத்தில்

பாசிகளால் மறைக்கப்பட்டு,

சலனமற்றுக் கிடக்கிறது

இறைக்கப்படாத

தண்ணீர்,

 

காற்றின் அந்தரங்கங்களில்

கலந்து கிடக்கும்

என்றோ ஒலித்த

தாலாட்டு!

 

பூக்களைக் கொட்டியபடி

வாசலில் நிற்கும்

பூவரச மரம்,

 

தொங்கிக்கொண்டிருந்த

குருவிகளின் திசையறியாது,

வண்டு துளைத்து

மெலிந்த

தோட்டத்து ஒற்றை

மாமரம்!

 

கடந்துபோன

எச்சங்களின் நினைவைச்

சுமந்து கிடக்கும்

வண்டிப்பாதை!!

 

அரசமர இலைகளின்

சலசலப்பில்

சிதிலமடைந்த

செங்கற்களின் நடுவே

அமைதியாய்

காத்து நிற்கும் குலசாமி!

Sunday 11 October 2009

எங்கள் பல்கலைக் கழகத்துக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கு!!!

 

இந்தியா பல துறைகளில் முன்னேறியுள்ளது. இந்தியர்கள்கள் உலகின்  மிகத் திறமையானவர்கள், அவர்கள் எந்த விதத்திலும் பிறநாட்டவர்களுக்குக் குறைந்தவர்கள்  அல்ல என்று நான் மிகவும் பெருமைப்படுகிறேன். தற்பொழுதுகூட திரு. வெ.ராமகிருஷ்ணனுக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது. மிக்க சந்தோசம்! ஒவ்வொரு முறை நோபல் பரிசு அறிவிக்கப்படும்போதும் என் மனதில் ஒரு உறுத்தல் இருந்துகொண்டே இருக்கும். அதனைச் சொல்லுகிறேன்.

“Our university system is, in many parts, in a state of disrepair…In almost half the districts [340] in  the  country,  higher  education  enrolments  are  abysmally  low,  almost  two-third  of  our universities and 90 per cent of our colleges are rated as below average on quality parameters… I am  concerned  that  in many  states  university  appointments,  including  that  of  vice-chancellors, have been politicised and have become subject to caste and communal considerations, there are complaints of favouritism and corruption.” 
Prime Minister Manmohan Singh’s address at the 150th Anniversary Function of University of Mumbai, June 22, 20071 ”

மேலேயுள்ள பத்தியில் நமது பிரதமர். மன்மோகன் சிங் கூறியிருப்பதைப்பாருங்கள்.

1.இந்தியாதான் உலகிலேயே அதிக உயர்கல்வி நிலையங்களைக் கொண்டுள்ளது. 364 பல்கலைக் கழகங்கள்,17625 கல்லூரிகள்( இப்போது இன்னும் அதிகமாக இருக்கும்.

2. ஏறக்குறைய 164 உயர் ஆராய்ச்சி மையங்கள் இந்தியாவில் உள்ளன! ஆதாரம்: விக்கி.

இவ்வளவு நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள்  இருந்தும் ஏன் இந்திய ஆராய்ச்சி நிறுவனங்களால் உயர் ஆராய்ச்சியில் பிரகாசிக்க முடியவில்லை?

3.ஒரு வியாதிக்கு மாத்திரையிலிருந்து, கம்பியூட்டர் பாகங்கள், அறுவைசிகிச்சைக் கருவிகள்,  நானோ தொழில் நுட்பம்வரை ஆராய்ச்சிகள் மிக அவசியம். எத்தனை காலம்தாம் நாம் அன்னியர்களுக்கு ராயல்டி கொடுத்துக்கொண்டு இருப்பது? 

4.ஏன் நமது அரசோ, அறிவியல் அறிஞர்களோ இதைப் பற்றி கருத்தில்கொள்ளவில்லை?

இதைப் பற்றி ஆராயும்போது சில கருத்துக்கள் கிடைத்தன.

1.ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது “ வெளிநாட்டு வேலையை உதறிவிட்டு இந்தியா வாருங்கள் “ என்று ஆராய்ச்சியாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அதன்படி இந்தியா வந்த ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர். கொஞ்ச நாளிலேயே அவர்களுக்குக் கிடைத்த கசப்பான அனுபவங்களால் பெரும்பாலானோர் திரும்பிச்சென்றுவிட்டனர்.

2.ஆசிய நாடுகளிலேயே இந்தியாவில்தான் குறைந்த அளவு மாணவர்கள் ஆராய்ச்சித்துரைக்கு வருகிறார்கள்.

பிலிப்பைன்ஸ்-(31 percent), தாய்லாந்து-(19 percent), மலேசியா-(27 percent) சீனா- (13 percent) இந்தியா- 7-8 percent அமெரிக்கா-81 percent, இங்கிலாந்து-54 percent ஜப்பான் - 49 percent.

3.இந்திய அரசு மிகக் குறைந்த தொகையே உயர்கல்விக்கு செலவிடுகிறது. ஒரு மாணவனுக்கு,

மலேசியா-11790 அமெரிக்க டாலர்.

சீனா-2728$

பிரேசில்-3986$

இந்தோனேசியா-666$,

பிலிப்பைன்ஸ்-625$,

அமெரிக்கா-9629$,

இந்தியா-406$ !!!

4.அமெரிக்காவில் படிக்கும் உலக மாணவர்களில் 14% இந்தியர். அமெரிக்கா இதன்மூலம் 13.4 பில்லியன் டாலர் வருமானம் பெருகிறது.

நம் பல்கலைக்கழகங்களும் அரசும் போகும் போக்கில் இந்தியாவில் மாணவர்கள் குறிப்பிடத்தக்க ஆராய்ச்சிகளை மேற்கொள்வது மிகச்சிரமம்.

இந்நிலையில் வெளிநாட்டுப்ப்ல்கலைக்கழகங்களை அனுமதித்தால் கல்வித்தரம் வளருமா? என்ற கேள்வியும் எழுந்து அதன்படி இந்தியாவில் 150 வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் வந்துள்ளன!!!கொடுமை என்னவென்றால் இந்தியாவில் இவற்றைக்கட்டுப்படுத்த சரியான விதிமுறைகள் இல்லை.

இவற்றில் பல பல்கலைக்கழகங்கள் 50 மாணவர்கள் மட்டுமே கொண்டுள்ளன! இவற்றிற்கு எப்படி பல்கலைக்கழக அந்தஸ்து தரப்பட்டது?ஏனென்றால் அவை 100% சொந்தப்பணத்தில் தொடங்கப்பட்டவை!!!?

ஆனால் சீனாவிலும், சிங்கப்பூர்,மலேசியா போன்ற நாடுகளிலும் அந்நாட்டு அரசு கடுமையான விதிமுறைகளைக் கடைப்பிடிக்கிறது.

சுட்டி: Full report on The Times of India site

இந்தியாவில் இந்த நிலை மாறவேண்டும். உலகத்தையே அரசுச் செலவில் சுற்றிவரும் துணைவேந்தர்களும், பேராசிரியர்களும், கல்வி அமைச்சர்களும் இதனைச் சற்று சிந்திக்க வேண்டும். 

காந்தி,நேருவிலிருந்து இன்றைய மன்மோகன் சிங், ப.சிதம்பரம் வரை நம் மாணவர்களின் தலைவிதியை எழுதுபவர்கள் ஹாவர்டிலும், ஆக்ஸ்போர்டிலும் படித்தவர்களே!!

எதிர்கால மாணவர்கள் தலைவிதியை கோணலாகி எழுதி மிக்க கடன்சுமையுள்ள குடிமகனாக மாற்றிவிடாதீர்கள்.

”என் பல்கலைக்கழகத்திற்கு, என் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு பரிசுகிடைத்துள்ளது” என்ற செய்திகளைக் கேட்கும்நாள் எந்நாளோ?

Saturday 10 October 2009

பதிவர்களுக்குள் மோதல்.. பேட் டச்!

அன்பு நண்பர்களே!!

வேர்விட்டு நிற்கும் மரம் எங்கும் செல்ல இயலாது.

அது போல்  வெளியில் செல்ல இயலாமல் ஆஸ்பத்திரி, வீடு என்று கிடக்கும் எனக்கு கணினியில் எழுதி முகம் தெரியாத நண்பர்களின் பாராட்டுக்களைப் பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி  அடைந்திருந்தேன்.

வேலைப்பளுவின் காரணமாக என்னால் யாருடனும் நேரம் செலவிட முடியாத காரணத்தால் சாட்டிங் முதல் யாருடனும் நட்புக் கொள்ள முயலாமல் இருக்கிறேன்.

அதே சமயம் என் மிகச்சிறிய வட்ட நண்பர்களிடம் சென்னை சென்று அங்கு நடக்கும் பதிவர் சந்திப்பில் கலந்துகொள்ளவேண்டும் என்ற என் ஆசையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

அப்படியிருக்கும் சமயத்தில் சமீபத்தில் கெள்விப்படும் நிகழ்ச்சிகள்  மிகவும் வருந்தத்தக்கதாக உள்ளன!

முதலில் பெண்பதிவருடன் ஆபாச உரையாடல் என்ற பிரச்சினை!

அனானி பின்னூட்டங்கள் என்ற பிரச்சினை.

தற்போது நேரடியாகத் தாக்கிக் கொள்ளும் அளவுக்குச் சென்றிருப்பது மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

ஒருவரின் பதிவுகளில் உள்ள கருத்துக்கு மாற்றுக் கருத்துப் போட்டால் அவர் மனம் வருந்துமே என்று நான் கருத்துப்போடாமல் சென்று விடுவேன். அது பொறுப்பான செயல் இல்லை என்று எனக்குத்தெரியும்.

மேலும் நான் தனிநபர்களைத் தாக்கி எழுதுவதும் இல்லை!

எதிர்க் கருத்துக்களைப் போடுவதால் ஒருவர் இன்னொருவருவரைத் தாக்கும் அளவு செல்வது ஆச்சரியமாக உள்ளது. இது பதிவுலகத்தின் பலவீனத்தை வெளிச்சம்போட்டுக் காட்டுவதாக உள்ளது. பதிவுலகில் உள்ள நாம் மீடியாக்களால் கூர்ந்து நோக்கப்படும் வேளையில் இத்தகைய செய்கைகள் பின்னடைவை ஏற்படுத்துவதாகவே அமையும்.

ஏன் நமக்குப் பிரச்சினை என்று பதிவர்கள் பலர்  ஒதுங்கி கூகிள் குழுமங்கள் போன்ற குழுகளுக்குச் செல்வதும் அதிகரிக்கும்.

இப்படிப்பட்ட நிகழ்வுகளால் சென்னை வந்தாலும் பதிவர்களைச் சந்திப்பதில் எனக்கு ஏற்பட்டுள்ள தயக்கம் பல பதிவர்களுக்கும் ஏற்படும் என்று நினைக்கிறேன்.

இந்த நிகழ்வையும் நான் கண்டுகொள்ளாமல் செல்லலாம். ஆயினும் என் எண்ணத்தைச் சொல்லவேண்டும் என்ற உந்துதலாலேயே இங்கு சொல்கிறேன். இதை பொறுப்புடன் கவனிக்க வேண்டிய கட்டாயம் சென்னைப் பதிவர்களுக்கு உள்ளது.

”குட் டச் பேட் டச்”- ”ஏதாவது செய்யவேண்டும் பாஸ்” என்பது போல் இதற்கும் ஏதாவது அவசியம் செய்யவேண்டும். இந்தப் பொறுப்பிலிருந்து சென்னை மூத்த பதிவர்கள்  விலகமாட்டார்கள் என்று நம்புகிறேன்! 

Friday 9 October 2009

பாலியல் தொல்லையும் பாலியல் கல்வியும்!

 

இன்று நாம் அனைவரும் பொதுவாக விவாதிக்கும் விசயங்களில் பாலியல் கல்வி முக்கியமானது. பாலியல் கல்வியை எங்கு ஆரம்பிப்பது, பள்ளியிலேயே பாலியல் கல்வியை ஆரம்பிக்கலாமா அல்லது கல்லூரியில் அதனை சொல்லித்தருவது சரியா என்பவை இன்னும் ஆய்வுக்குறியவையாக உள்ளன.

தற்போது பள்ளிகளைக் கவனிக்கும்போது பள்ளிக் குழந்தைகள் ‘காதல்’ என்ற விசயத்தைப் பற்றி சிறு வயதிலேயே அறிந்துவிடுகின்றனர். அந்தச்சொல்லின் முழு அர்த்தம் தெரியாவிட்டாலும் ஒரு குழப்பமும், ஆர்வமுமாக அதனை விவரிக்கின்றனர். இதனை அனுபவபூர்வமாக நாம் பல குழந்தைகளுடன் பேசும்போது அறியமுடிகிறது.

குழந்தைகளுக்கு நம்முடைய சிறப்பு கவனம் தேவை. குழந்தைகளின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியவர்களிடம்தான் குழந்தைகள் பொதுவாக அதிக நேரத்தைச் செலவிடுகின்றன. ஆகவே இவர்களுக்கு குழந்தைகளைக் காக்கவும், அறிவூட்டவுமான தார்மீகப்பொறுப்பு உள்ளது.

தாங்கள் வாழும் சூழ்நிலைகளால், பெரியவர்களை விட அதிகமாக பாதிக்கப்படக்கூடிய பலவீனமான நிலையில் குழந்தைகள் இருக்கிறார்கள். ஆகவே, மற்றெந்தப் பிரிவினரையும் விட, அவர்கள் சார்ந்த சமூகம் மற்றும் அரசாங்கங்களின் நடவடிக்கைகளாலும் நடவடிக்கையின்மையினாலும் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.

குழந்தைகளுக்கு உடல் ரீதியான தொல்லைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் இந்த எண்ணிக்கை மிகவும் கவலை தருவதாக உள்ளது. குழந்தைகள் பாலியல்பற்றி அறியாதவர்கள், பெரியவர்களின் பாலியல் செய்கைகள்பற்றியும் அவர்களுக்குத் தெரியாது. குழந்தைகளுக்கு எப்படி பாலியலைப் பற்றித்தெரிய முடியும்?

பாலியல் காட்சிகளை குழந்தைகளுக்குக் காண்பித்தல், பெற்றோர் இரவில் குழந்தைகளுடன் ஒரே அறையில் படுத்துறங்கும் போது அவகள் தூங்குவதாக எண்ணி உறவில் ஈடுபடுதல், குழந்தைகளை காம இச்சையுடன் தொடுதல், காம இச்சையுடன் அந்தரங்கப் பகுதிகளைக் குழந்தைகளுக்குக் காட்டுதல் ஆகியவற்றின் மூலமாகவே குழந்தைகள் பாலியல் மனக் குழப்பங்களுக்கு ஆளாகிறார்கள்.

தாங்கள் பார்த்த காட்சிகளின் தாக்கத்தால் அவர்கள் சாதாரண குழந்தைகளைப் போல் உற்சாகத்துடன் படிக்கவோ, விளையாடவோ இயலாமல் குழப்பத்துடன் காணப்படுகிறார்கள். இப்படி இருக்கும் குழந்தைகளை தாய்மார்கள் பொறுப்புடன் கவனித்து மனநல சிகிச்சை அளிக்கவேண்டியது மிக அவசியம்.

இத்தகைய கொடுமைகள் பரவலாக ஏழை,பணக்காரர் வித்தியாசமின்றி நடந்தாலும் பண வசதி,படிப்பறிவு குறைவான சூழ்நிலைகளில் பிள்ளைகளுக்கு தன் கருத்தைக் கூறும் உரிமை கிடைப்பதில்லை. அவர்களின் கருத்துக்களுக்கு பெற்றோர் மதிப்புக் கொடுப்பதும் இல்லை. அதனால் நெருங்கிய உறவினர்கள் குழந்தைகளிடம் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருப்பதுபோல் நடித்து அவர்களின் அன்பைப் பெற்று அந்த உரிமையில் தவறான் செய்கைகளைச் செய்கிறார்கள். குழந்தைகளைப் பெற்றோரும் உறவினர்களின் பொறுப்பில் விடும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

சமீபத்தில் இந்தியாவுக்குப் படிக்க வந்த இளம்பெண் தன் அப்பாவின் நண்பர் வீட்டில் தங்கியிருந்து பாலியல் தொல்லை கொலையில் முடிந்ததை  பத்திரிக்கைகளில் படித்து இருப்பீர்கள். நெருங்கிய உறவினர்களே பாலியல் தொல்லையை மிக அதிக அளவில் கொடுக்கிறார்கள் என்பது புள்ளிவிபரங்கள் மூலமாக நமக்குக் கிடைக்கும் தகவல். மேலும் பெண் குழந்தைகளை மிகுந்த அக்கரையுடன் கவனிக்க வேண்டியது அவசியம். அதே நேரத்தில் ஆண் குழந்தைகளிடம் நாம் அலட்சியப்போக்கைக் கடைப் பிடிக்கக் கூடாது.

பெண் குழந்தைகள் எந்த அளவுக்கு உடல் மற்றும் உணர்வு ரீதியாகக் கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்களோ, அதே அளவில் ஆண் குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றன. பெண் குழந்தை, சமுதாயத்தில் குறைவான அந்தஸ்தைப் பெற்றிருப்பதால் அவர்கள்தாம் பலவீனமான நிலையில் இருக்கிறார்கள் என்பது உண்மைதான்.

ஆனால் ஆண் குழந்தைகள் பள்ளிகளில், வீடுகளில், உடல் ரீதியான தண்டனை அனுபவிப்பவர்களாக இருக்கிறார்கள். பல சிறுவர்கள் இளம்  வயதிலேயே வேலைக்கு அனுப்பப்படுவது, விற்கப்படுவது போன்றவை நடக்கின்றன. இவர்களில் பலர் தாங்கள் வேலை செய்யும் இடங்களில் பல செக்ஸ் அத்துமீறல்களுக்கு உள்ளாகிறார்கள்.

இந்த சந்தர்ப்பத்தில் குடும்ப உறவினர்கள் தவிர குழந்தைகள் அதிக நேரம் செலவிடும் இடம் பள்ளிக்கூடம். அந்தப் பள்ளிக்கூடத்திற்கு பெற்றோர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் குழந்தைகளைப் பெற்றோர்கள் அனுப்பி வைக்கிறார்கள். குழந்தைகளை ஆசிரியர்கள் மிகுந்த பொறுப்புடன் கவனித்துக்கொள்வார்கள் என்று அவர்கள் நம்புவதால் அவர்கள் பள்ளியில் என்ன செய்கிறார்கள் என்று நாம் கவனிப்பதில்லை. நன்றாகப் படிக்கிறார்களா இல்லையா என்பதுமட்டுமே நமது சிந்தனையாகவுள்ளது. ஆயினும் பள்ளியிலும் சில புல்லுறுவி ஆசிரியர்கள் இருப்பது மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது( சக ஆசிரிய பதிவர்கள் பொறுத்தருள்க! என் ஆசிரியர்களை நான் இன்றளவும் கடவுளாகவே மதிக்கிறேன்.)  பத்திரிக்கைகளில் வந்த ஒரு செய்தியைக் கீழே தருகிறேன்.

கோயம்புத்தூர்: மதுக்கரை என்ற இடத்திற்கு அருகில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவிகளைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். மூன்றாம் வகுப்புப் படிக்கும் 8 வயதுப் பெண் அளித்த புகாரின் பேரில், போலீசார், தலைமை ஆசிரியரைக் கைது செய்துள்ளனர்.

இது ஒன்றுமட்டும் அல்ல! தினமும் நாம் பத்திரிக்கைகளில் படிக்கும் செய்திகள் மிகவும் கவலை தருவதாக உள்ளன. பெண் குழந்தைகளுக்குப் பாலியல் தொல்லை போல் ஆண் குழந்தைகளையும் ஓரினச் சேர்க்கைக்கு உட்படுத்தும் ஆசிரியர்கள் பற்றியும் கல்வித்துறை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

டில்லியை சேர்ந்த ஒரு சர்வதேச சமூக அமைப்பான, "ராகி' மேற்கொண்ட ஆய்வில், சென்னை, மும்பை, டில்லி, கொல்கத்தா மற் றும் கோவாவில் ஆங்கிலம் பேசும் 600 குழந்தைகளிடம் சர்வே எடுத்ததில், அவர்களில் 67 சதவீதம் பேர், ஏதாவது ஒரு கட்டத்தில் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாகி உள்ளனர் என்பது தெரிந்தது.

மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தைகள், உடல் ஊனமுற்ற நிலையில் இருக்கும் குழந்தைகள், அவர்கள் இருக்கும் பலவீனமான நிலையால், பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாகிறார்கள்.  குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குவது என்பது, பாலினம், சமூகநிலை, இனம் ஆகிய அனைத்து நிலைகளிலும் இருந்துவருகிறது. நகரங்கள், கிராமப் பகுதிகள் என்ற எல்லா இடங்களிலும் நடக்கிறது.

ஜி.எஸ். மீனா, ஆர்.சி. ஜிலோஹா, மற்றும் எம்.எம்.சிங் ஆகியோர் இந்தியக் குழந்தைகள் மருத்துவ மையம் மற்றும் மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியின் சமூக மருந்தியல் மற்றும் உளவியல் துறை ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள். இவர்கள் 2003 - 2004ஆம் ஆண்டில், டெல்லியிலுள்ள கண்காணிப்பு இல்லம் ஒன்றில் தங்கியிருந்த ஆண்களிடம், ஆய்வு நடத்தினர்.  அதன் ஆராய்ச்சியின் முடிவாக,"கண்காணிப்பு இல்லத்திற்குக் கொண்டு வரப்பட்ட தெருவோரச் சிறுவர்களின் பாலியல் வன்கொடுமை அனுபவங்கள்" என்ற ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்தார்கள். இக்கட்டுரையில் பாலியல் வன்கொடுமை எந்த அளவுக்கு இருக்கிறது, எந்த முறையில் உள்ளது என்பதைப் பற்றி தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.

டெல்லியில் உள்ள இந்தக் கண்காணிப்பு  இல்லத்தில் உள்ள பெரும்பாலான சிறுவர்கள் வீட்டை விட்டு ஓடி வந்தவர்கள். இந்த இல்லத்தில் இருந்தவர்களில் 38.1% பேர் பாலியல் ரீதியான வன்கொடுமைகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள். இவர்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியதில் பாலியல் ரீதியான கொடுமை நடந்ததற்கான உடல் ரீதியிலான அடையாளங்கள் 61.1% பேரிடம் இருந்தன. 40.2% பேரிடம் அவர்கள் நடத்தையில் அதற்கான அடையாளங்கள் தெரிந்தன. 44.4% பேர் வன்புணர்ச்சிக்கு ஆளானவர்கள். 25% பேருக்குப் பாலுறவு நோய்களுக்கான அறிகுறிகள் இருந்தன.

குழந்தைகளிடம் தாய்மார்கள் அன்புடன் பழகி அன்றாடம் அவர்களின் பள்ளியில், அவர்கள் செல்லும் இடங்களில் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்வது மிக அவசியம். குழந்தைகளின் நலனைப் பேணவேண்டியது நம் கடமை என்பதால் அவர்களுக்கு பாலுணர்வு ,இணப்பெருக்க ஆரோக்கியம் பற்றிச் சொல்லித் தருவது மிக அவசியம், அது குழந்தைகளின் உரிமையும்கூட.

ஆனால் நிறையப் பெற்றோர்கள் குழந்தைகளின் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்று கேட்டு அறிவதில்லை. மாறாக குழந்தைக்குத் தேவையான அனைத்தையும் தாங்களே முடிவு செய்வதில் உறுதியாக இருக்கிறார்கள். இது மிகவும் தவறான அணுகுமுறை.அவர்களுடன் கலந்து பேச நாம் தயாராக இல்லாததால், இது பற்றிய பேச்சையே நாம் தவிர்த்துவிடுகிறோம். வாழ்க்கைக்குத் தேவையான கல்வியான இதைப் பற்றிக் குழந்தைகளுக்கு போதிக்க நாம் தயாராக வேண்டியது அவசியம்.

வெளிநாடுகளில் குழந்தைகளின் மீதான் பாலியல் பலாத்காரங்களை ஆராய்ந்து தகுந்த முறையில் வரையறை செய்து  அதனைச் சட்டமாக்கி கடும் தண்டனை தருகின்றனர். இந்தியாவில் அப்படி ஒரு விரிவான சட்டம் இல்லை. இப்போதுள்ள இந்தியச் சட்டத்தில், "குழந்தை செக்ஸ் அத்துமீறல் கொடுமைகள்' சேர்க்கப்படவில்லை. மேலும் ஆண்குழந்தைகளுக்கான வரம்புமீறல்களில் நம் சட்டங்களில் தெளிவு இல்லை.

நம் குழந்தைகள் பாலியல் துன்பங்களுக்கு ஆளாகாமலும்  மனோரீதியான அழுத்தம், உடல் ரீதியான பாதிப்புக்கு உள்ளாகாமல் காக்கவேண்டியதும் நம் அனைவரின் கடமை.

”குட் டச்! பேட் டச்” பற்றிப் பேசவிருக்கும் நாம் நமது தார்மீகக் கடமையிலிருந்து தவறுவது குழந்தைகளுக்கு நாம் இழைக்கும் அநீதியாகும். உலக சுகாதார நிறுவனம் நாம் கடைப்பிடிக்க வேண்டிய  சில வழிமுறைகளைக் குறிப்பிட்டுள்ளது. அவை:

* எந்த உறுப்பும் மர்மமானதோ, ரகசியமானதோ இல்லை. ஆனால், அந்தந்த காலகட்டத்துக்கு சொல்லி உஷார் படுத்துவது நல்லது.

* யாராவது, குழந்தைக்கு முத்தம் கொடுத்தால் கூட குழந்தையை விட்டே தடுப்பது நல்லது.

* தாய்மார்கள் தங்கள் பெண் குழந்தைகளின் மார்பகம் உட்பட மறைக்கப்பட வேண்டிய உறுப்புகளை, யாரும் தொட விடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்பதைச் சொல்லிக்கொடுக்க வேண்டும்.

* குழந்தை வீட்டை விட்டு  அடிக்கடி வெளியில் போகிறாள் என்றால் அதனைக் கண்காணிக்க வேண்டும்.

* நம் தொலைக் காட்ச்சியில் திரையிடப்படும் சில நிகழ்ச்சிகளைப் பார்த்தும்கூட பிள்ளைகள் தவறான நடத்தைக்கு உட்படலாம். அதனால், அது சரி, இது தவறு என்று ஆரம்பத்தில் இருந்தே எச்சரிப்பதுடன், கண்காணிப்பது முக்கியம்.

* வெளியாட்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி அவசியம் எச்சரிக்க வேண்டும்.

*  குழந்தைகளிடம் எந்த கட்டத்திலும், தவறு என்று தெரிந்தால், உடனே போன் செய்யவோ, வெளியேறவோ அட்வைஸ் செய்து வைக்க வேண்டும்.

நம் நாட்டிலா இப்படி? நம் ஊரில் இப்படியெல்லாம் நடக்காது என்று இந்த விசயத்தை ஒதுக்கிவிடாமல் நம் குழந்தைகளைக் காத்து வளமான எதிகால சமுதாயத்தை உருவாக்குவோம்.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory