பள்ளிக்கூடத்தில் மதிய வகுப்பு ஆரம்பமாகியிருந்த்து.ஒன்பதாம் வகுப்பு பி பிரிவில் இரண்டாம் வரிசையில் உக்கார்ந்திருந்தேன்.வெளியில் வெய்யில் ஜன்னல் வழியே உள்ளே வந்து அனலாய் வீசியது.
ஆங்கிலப்பாடம் முகமது கவுஸ் வாத்தியார் உள்ளே நுழைந்தார். அவருக்கு என் மேல் ரொம்பப் பிரியம். நுழைந்தவர் என்னைப் பார்த்தார். “சேகர்”!என்று கூப்பிட்டார். “சார்” என்றேன்.
உன் அப்பிச்சிக்கு உடம்பு சரியில்லையாம். வீட்டுக்குப்போப்பா என்றார்."இல்லை சார் பள்ளி முடிந்து போகிறேன்"என்றேன்.
“இல்லைப்பா நீ போ”. உங்க அப்பிச்சிக்கு உடம்பு சரியில்லையாம். நீ போய் பார்த்துவிட்டு வா, உன்னைக்கூட்டிக்கொண்டு போக உன் சித்தப்பா வந்திருக்கார் வெளியே நிக்கிறார் பார்.. என்றார் வாத்தியார்.பனங்குடியிலிருந்து சித்தப்பா பெரியான் வகுப்புக்கு வெளியே வேப்பமர நிழலில் நின்றுகொண்டிருந்தார். இவர் இங்கெல்லாம் வரமாட்டாரே என்று எண்ணியவாறு அவரிடம் நடந்துபோனேன்
சித்தப்பா பதட்டமாக நின்று கொண்டிருந்தார்."என்ன சித்தப்பா?"என்றேன். என்னைக் கண்டதும் வலிய முகத்தில் பதட்டத்தை மறைத்து சகஜமாகப் பேசினார்.
”அபிச்சிக்குதாம்பா முடியல. நம்ம போகலாம் வா?”
என்றார். எனக்கு அழுகை வர ஆரம்பித்தது.அவரிடம் கேட்டதுக்கு ஒன்னுமில்லைப்பா, தடுமாறி விழுந்துவிட்டார். என்றார். ”அப்பிச்சியை காரைக்குடி கூட்டிவந்து வைத்தியம் பார்க்கலாமே சித்தப்பா என்றேன்.”
”அதெல்லாம் பார்த்துக்கலாம் வா. பார்த்துட்டு வேணுமின்னா காரைக்குடி கூட்டியாருவம்”என்று எட்டி நடைபோட்டார்.
சென்னையில் இருந்து நாங்கள் காரைக்குடி வந்து மூன்று மாதம்தான் ஆகிறது. அப்பாவை மாமா துபாய் கூட்டிக்கொண்டு போய்விட்டார். வறுமை தாங்காமல் அம்மா அழுது அண்ணனிடம் கெஞ்சி விசா வந்து அப்பாவும் ஒரு வழியாக வெளிநாடு போய்விட்டார். குமுதத்துக்கும்,ஆனந்தவிகடனுக்கும் கேள்வி பதில் துணுக்கு என்று எழுதிப்ப் போட்டுக்கொண்டு சைக்கிளில் போஸ்டல்&டெலிகிராப் ஆபீஸில் கிளார்க்காக போய் வந்து கொண்டிருந்தவருக்கு துபாய் என்றவுடன் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. அவர் போனவுடன் டிசி வாங்கி எந்த பள்ளியிலும் இடம் கிடைக்காமல் முனிசிபல் பள்ளியில் சேர்ந்தேன். இதோ மூன்று மாதம் ஆகிவிட்டது.
வீட்டில் அம்மா, தம்பி,தங்கையெல்லாம் தயாராக இருந்தார்கள். கல்லல் வழியா பனங்குடி போற பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தோம். பஸ் கிளம்பியது.. என் நினைவுகள் பின் நோக்கிச் சென்றன.
பள்ளிக்கூடம் முழுப்பரிட்சை லீவு விட்டால் எல்லோரையும்போல் எனக்கும் கொண்டாட்டம்தான். தினமும் கோடம்பாக்கம் வடக்கு கங்கையம்மன் கொயில் தெருவிலிருந்து கிளம்பி சக்கரியா காலனியில் என்னோடு படிக்கும் விசுவையும் சேகரையும் கூட்டிக்கொண்டு கோடம்பாக்கம் ரயில்வே நிலையம் தாண்டி பசுல்லா ரோடு போனால் நான் படித்த ராமகிருஷ்ணா தெற்கு பள்ளி வந்துவிடும்.தினமும் நடந்துதான் செல்ல வேண்டும். வேறு வழியில்லை.அப்பாவிடம் ஒரு ராலே சைக்கிள் இருந்தது. (அதனை நானோ அல்லது அப்பாவோ துடைத்துவிடுவோம் தினமும்.)அப்பா சைக்கிளில்தான் அலுவலகம் செல்வார்.எனக்கு சைக்கிள் கிடையாது{ஓட்டவும் தெரியாது}.
முழுப்பரிட்சை லீவுக்கு பனங்குடிக்குப் போவோம். பனங்குடியில்தான் அப்பத்தாவும் அப்பிச்சியும் இருக்கிறார்கள். எக்மோர் புகைவண்டிநிலையத்தில் வண்டியேறினால் நான் எப்படியும் ஜன்னல் இருக்கையைப் பிடித்துக் கொள்வேன்.வண்டி கிளம்பிப்போகும்போது கொஞ்ச நேரத்தில் அம்மா கட்டி வைத்த புளியோதரையும், தொட்டுக்க பருப்புத்தொவையாலும் எடுத்துத் தருவார்கள். பசியெல்லால் ரொம்ப இருக்காது.ஏன்னா புகைவண்டியில் போவதே இன்பம்! அதிலும் பனங்குடிக்குப் போவதென்றால் சொல்லவா வேணும். புகைவண்டியில் நான் இரவெல்லாம் தூங்காது ரயில் நிலையம் ஒவ்வொன்னா மனசுக்குள் எண்ணிக்கிட்டே வருவேன்.எங்க ஊர் வரைக்கும் எத்தனை ரயில்நிலையம்னு எனக்குத்தெரியும். நிறைய ஓட்டுவீடுகள் முகப்பில் மஞ்சள்முட்டைவிளக்கு எரிய வரிசையாகப் போகும்.
பனங்குடி வரப்போகுதுன்னாலே எனக்குத் தெரியும். திருச்சி தாண்டி பனைமரங்களாக வர ஆரம்பித்தாலே சந்தோசம் ஊற்றெடுக்கும். புதுக்கோட்டை,காரைக்குடி தாண்டினால் அப்பா பரபரப்பாகிவிடுவார். எங்கள் சட்டைகள் உள்ள பைகள்,பெட்டியெல்லாம் எடுத்து கதவோரம் வைத்துவிட்டு வெளியே பார்த்துக்கொண்டே வருவார். கல்லல்,அணைத்திடல் தாண்டியவுடன் பனங்குடி நிலையம் வந்துவிடும். ஐந்து நிமிடந்தான் வண்டி நிற்கும். அதற்குள் எல்லா பை,பெட்டியெல்லாம் இறக்கி வைத்துவிடவேண்டும்.
புகை வண்டி நிலையத்துக்கு அப்பிச்சி,அப்பத்தா ரெண்டுபேரும் வந்திருப்பார்கள். அப்பிச்சிக்கு முதுகு கூன் விழுந்து கம்பு வைச்சித்தான் நடப்பார். முகத்தில் திருநீறு பூசி,வெத்திலை போட்டு இருப்பார். இறங்கியவுடன் ”ஐயா! ராசா! நல்லா இருக்கீகளா?” என்று முத்தம் கொஞ்சுவார்.முத்தத்தில் வெத்திலை,திருநீறு வாசமெல்லாம் கலந்து இருக்கும்.
அப்பத்தா நல்ல வாட்ட சாட்டமா உயரமா இருப்பாங்க.நல்ல நிறம்,மூக்கு நுனியில் பெரிய மச்சம் ஒன்னு இருக்கும். ரவிக்கை போடமாட்டாங்க. ரெண்டு மூனு பெட்டிய முந்தானையால சும்மாடு மாதிரி சுருட்டி தலையில வைச்சுக்கிட்டு வரப்புல ரொம்ப சுளுவா நடப்பாக.
அபிச்சி வீடுகூரை வேயும்போது மேலேருந்து விழுந்து இடுப்பெலும்பு ஒடைஞ்சு போச்சாம். அதுனாலதான் ரொம்ப கூனிக்கிட்டே கம்பு ஊண்டி நடப்பார். ”நீங்க போங்க நான் வர்ரேன்” என்று வரப்புல உக்காந்து உக்காந்து கடைசியா வருவார். அபிச்சிதான் ஊரிலேயே எங்கவளவுல படிச்சவர்.கொஞ்சநாள் கொழும்புல தோட்டவேலை பார்த்துவிட்டு வயசாயிட்டதனால இங்கே வந்துவிட்டார்.
அபிச்சிக்கு தெரியாத வேலை கிடையாது. காலையில எந்திரிச்சி அவரா தன்னாங்கம்மாயிக்குப் போய் குளிச்சிட்டு சின்ன துத்தநாக வாளியில் தண்ணி தூக்கிக்கிட்டு வருவார். வந்து சாமி கும்பிட்டு வீட்டுக்கூரையிலிருந்து நீள் சதுர பையை எடுத்து அதைச்சுற்றியிருக்கும் கயிறை பிரிப்பார். அதில் கண்ணாடியும் வேறேன்னென்னமோ இருக்கும். நோட்டு,டைரி எடுத்து எழுதிக்கிட்டே இருப்பார். ஊரில் கொழந்தைங்க பொறந்த தேதி,வயசுக்கு வந்த தேதி,செத்த தேதியெல்லாம் குறிச்சு வச்சிருப்பார். காலையில் காச்சக்காரவுக வந்தா மந்திருச்சு திருநீர் குடுப்பார். நிறைய மந்திரப் புஸ்தகமா வச்சிருப்பார். காலையில மங்குல அப்பத்தா கஞ்சி ஊத்தித்தரும். குடிச்சிட்டு கொஞ்ச நேரத்தில் காட்டுக்கொடியை சீவி கூடை முடைய ஆரம்பிப்பார். இதுமட்டிமில்ல.. மீன்பிடிக்கிற கச்சா,கடகம்,கொட்டான்,ஓலைப்பாய் மொடையுறது எல்லாம் அப்பிச்சிக்குத்தெரியும்.
அப்பிச்சின்னா எனக்கு ரொம்பபிடிக்கும்.
அப்பத்தா வாசலை சாணிபோட்டு மொழுகிவச்சிருக்கும். நெல்லவிச்சி அதுலதான் காயப்போட்டிருப்போம்.அப்பிச்சி நல்ல கம்பு செதுக்கி வழுவழுன்னு செஞ்ச வில்லு இருக்கும். அதுல கல்லு வச்சி மேய வற்ற கோழியை அடிச்சு வெரட்டுவார். எனக்கும் சொல்லிக்குடுத்திருந்தார். வில்லுல கல்லு வச்சு கோழி வெரட்டுறது ரொம்பப் பிடிக்கும்....
அப்பிச்சிக்கிட்டே பணமே இருக்காது. சுருக்குப்பையில மூணுகாசு,ரெண்டு காசு, அஞ்சு காசு,பத்துக்காசு கொஞ்சமாவச்சிப்பார்.அதுலகூட நான் ஊருக்குப் போனா ரெண்டுகாசு,மூணுகாசெல்லாம் தருவார்.
சிலநாள் அப்பிச்சிக்கிட்ட காசு இருக்காது. ஊருக்குபோனா என்னைய பார்க்கவர்ர சொந்தக்காரங்க காசு குடுப்பாங்க. அதெல்லாம் சேத்து வச்சிருப்பேன். போன தடவை ஏங்கிட்ட காசு கேட்டார். அப்பத்தா அவரைத்திட்டிச்சு.”சும்மா இருங்க பேரன்கிட்டயெல்லாம் காசு கேக்காதீக.அதான் மயன் வெளிநாடு போயிருக்கில்ல. இன்னும் சரியான வேலை கெடைக்கலையாம். கெடைச்சவுடனே ஒங்களுக்குத்தான் அனுப்புவான்.” . என்று அதட்டிச்சு.”சம்பளம் எவ்வளவுளா தருவாக என்றார்” அப்பிச்சி.மாசம் மூவாயிரம் தருவாகளாம். “மூவாயிரம் கெடைக்குமா? நம்ம கஸ்டமெல்லாம் தீர்ந்துபோச்சு சோலச்சி!” என்று சந்தோசமாகச்சொன்னார்.
அப்பல்லாம் ரொம்பக்கஸ்டமுங்க.நாங்களே மெட்ராசில ரேசன் அரிசிதான் சாப்பிடுவோம்.அப்பா அம்பதோ,நூறோ ஊருக்கு அப்பத்தா அப்பிச்சிக்கு அனுப்புவாரு.
லீவு முடிஞ்சு திரும்பி ரயிலேறும்போது அப்பத்தா அப்பிச்சி எல்லாம் அழுவாக. எனக்கும் அழுகையா வரும்.நான் சேர்த்த ரெண்டு பைசா,அஞ்சு பைசாவெல்லாம் அப்பிச்சிக்கு குடுத்துவிட்டேன். அப்பிச்சி நான் சம்பாரிச்சு நிறைய காசு கொண்டுவற்றேன் அப்பிச்சி! என்று அழுகையினூடே சொல்லுவேன்.
காலம் யாருக்கும் தயவு காட்டுவதில்லை. இப்போது இந்த மூன்று மாதமாக காரைக்குடியில் இருந்தாலும் அபிச்சி வரமாட்டார். கூன்விழுந்துவிட்டதால் அவர் ஊர்களுக்குப் போவதில்லை.
நினைவுகளின் கனம் தாங்காமல் கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது.பஸ் நின்றுவிட்டிருந்தது. அண்ணே! எறங்குண்ணே என்ற தங்கச்சியின் குரல் கேட்டு சுய நினைவுக்கு வந்தேன். பஸ் புழுதியைக்கிளப்பிக்கொண்டு கள்ளம்பிஞ்சையில் சென்றது.அது கிளப்பிய புழுதி வேறு கண்ணில்பட்டு உறுத்தியது. அப்பிச்சிக்கு என்ன சித்தப்பா? ஒன்னும் சரியா சொல்லமாட்டேங்கிறீங்க? என்று சற்று வேகமாகவே கேட்டேன்.
”அட அது ஒன்னுமில்லைடா முந்தாநாள் கோணக் கம்மாயில குளிச்சிட்டு வரும்போது மயக்கமாயி விழுந்துட்டாரு, அதிலேயிருந்து ஒடம்பு கொஞ்சம் சரியில்லை, வாடா உன்னையெல்லாம் பாக்கணும்னு ஆசைப்படுறார்.”வெரசா போவோம் வா” என்று கையைப்பிடித்து இழுத்துக்கொண்டு போனார்.
வீடு வந்துவிட்டது. வாசலில் இருந்த வேப்பமர நிழலில் பங்காளிகள் சிலர் உக்காந்திருந்தனர். கிழக்குப்புறம் பூவரச மரத்தின் கீழ் கல்லுக்காலின் மேல் பனங்கைகள் போட்டிருந்தது, அதில் பக்கத்து வீட்டு மாயன்,விசுக்கான்,ஆதினமிளகியுடன் இன்னும் சிலர் அமர்ந்திருந்தனர். வாசலில் குனிந்து உள்ளே போனேன். ஓலை தலையில் தட்டியது. இடதுபுறம் திண்ணையில் அப்பிச்சி படுத்திருந்தார். திண்ணை மறைவாக தென்னந்தட்டி கீழேயிறக்கி திண்ணை நிழல் மறைவாக இருந்தது. பெண்கள் அமர்ந்து அழுதுகொண்டிருந்தனர். அதுவரை கட்டுக்குள் இருந்த அழுகை பொங்கிவந்தது.
”ஏம்பொறந்த ராசாவே!”
என்று அழுதுகொண்டிருந்த அப்பத்தா என்னைப் பார்த்ததும் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தது.
ஏ அய்யா! ”உங்களைப் பாக்க பேரம்மாரெல்லாம் வந்திருக்காக! கந்தொரந்து பாருங்க! ஏம்பெத்தராசா!”
கண்ணீருடன் அப்பிச்சியைப் பார்த்தேன். கண்களில் ஒளிமட்டும் இருந்தது. உடலில் அசைவு இல்லை. வலது கைக்கட்டைவிரல் மட்டும் துடித்துக்கொண்டிருந்தது. கண்கள் ஏதோ எனக்குச் சொல்லுவதுபோல் எதையோ தேடுவதுபோல் இருந்தது. யாரோ ஒரு குவளையில் பால் கொண்டுவந்து தந்தார்கள். இன்னைக்கு முழுக்க சீவன் இழுத்துக்கிட்டு இருக்குப்பா! உன்னையெல்லாம் பார்க்கணும்னுதான் போல. கொள்ளிவைக்கிற பேரன் வந்திருக்கிறான் பாருங்க! என்று சாத்துரப்புக்கு சொல்லிவிட்டு ஊத்துப்பா அப்பிச்சிவாயில, பால ஊத்து. சாமிய வேண்டிக்கிட்டு ஊத்து! செத்து உங்கப்பிச்சி சாமியா இருந்து உங்களைக்காப்பாத்தோணும்...குரல் காதில் விழுந்தது. மெதுவாக பாலை வாயில் ஊற்றினேன்.
வாழ்நாளெல்லாம் ஏழ்மையில் உழன்ற அந்த கிராமத்துக்கலைஞன் தன் மகன் வெளிநாடு சென்று சம்பாதித்து செல்வச்செழிப்பில் வாழாமல் பத்துப்பைசாவுக்கும், நாலணாவுக்கும் ஏங்கிய மனதுடன் அடங்கிப்போனார்.வித்தை பல கற்ற அவரின் கட்டைவிரல் துடிப்பு மெதுவாக அடங்கியது!